குமுழிஞாழலார் நப்பசலையார்
- நப்பசலையார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நப்பசலையார் (பெயர் பட்டியல்)
குமுழிஞாழலார் நப்பசலையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
குமுழிஞாழலார் நப்பசலையார், குமிழி என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. காதலினால் மகளிரிடத்தில் ஏற்படும் பசலை நோயை எடுத்துரைக்கும் பாடல் பாடியதால் நல்பசலையார் என்றழைக்கப்பட்டார். நல்பசலையார் பிற்காலத்தில் நப்பசலையார் என மருவியிருக்கும் என்று கருதப்படுகிறது. இவர் குமிழி ஞாழலார் நப்பசலையார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
குமுழிஞாழலார் நப்பசலையார் அகநானூற்றில் 160-ஆவது பாடல் பாடினார். இது நெய்தல்திணை குறித்த பாடல்
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- ஆமை இரவில் யாரும் அறியாதவண்ணம் மணலில் குழிபறித்து முட்டையிட்டு கடல் திரும்பும். சிறிய ஆமைகள் கண்கள் வளராத போதும் மணலை துளைத்துக் கொண்டு வெளிவந்து கடல் நீரை நோக்கி காந்தம் ஈர்க்கப்பட்டது போல செல்லும் உள்ளுணர்வை இயற்கை படைத்துள்ளது.
பாடல் நடை
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-May-2023, 18:33:25 IST