under review

கல்லாடனார் (சங்க காலம்)

From Tamil Wiki

To read the article in English: Kalladanar (Sangam Era). ‎

கல்லாடனார் (பொ..யு. 2-க்கு முன்பு) சங்க காலத்தில் வாழ்ந்தவர். தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். கள்வர்கோமான் புல்லி, பொறையாற்றூர் கிழான் அம்பர் கிழான் அருவந்தை (அருவன் தந்தை) ஆதரிக்கப்பட்டவர்.

வேறு கல்லாடனார்கள் பார்க்க கல்லாடனார்

ஊர், பெயர், வரலாறு

இவர் கல்லாடம் என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்பதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். கல்லாடம் வேங்கட மலைக்கு வடக்கே ஆந்திர மாநிலத்தில் உள்ள ஊர்[1]. இவர் வேங்கட மலையையையும் அதன் சாரலில் ஆட்சி செய்த கள்வர் குலத்துச் சிற்றரசன் புல்லியையும் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். ’கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்’ (அகநாநூறு 83) புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே! என புறநானூறு 385-ம் பாடலில் குறிப்பிடுகிறார்.

தன் குடும்பம் பசியால் வாடியபோது தெற்கே சோழநாடு வந்தார். வழியில் பொறையாற்று கிழான் அம்பர்கிழான் அருவந்தை இவருக்கு உதவினான். வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் என புறநாநூறு 392-ம் பாடலில் குறிப்பிடுகிறார்.புறநாநூறு 385-ம் பாடலில் அம்பர் கிழான் அருவந்தையை காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன் நல்அரு வந்தை, வாழியர் (காவிரி ஓடும் அம்பர் கிழான் அருவந்தை வாழ்க) அம்பர் என இங்கே குறிப்பிடப்படுவது தரங்கம்பாடியை அடுத்துள்ள பொறையாறு. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.

கல்லாடனார் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை பாடியிருக்கிறார். புறநாநூறு 23-ம் பாடலில் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் அழிக்கப்பட்ட தலையானங்கானத்தை பாடியிருக்கிறார். புறநாநூறு 25-ம் பாடலில் நெடுஞ்செழியனின் தலையானங்கானத்து வெற்றியை பாடியிருக்கிறார்.புறநாநூறு 371-லும் நெடுஞ்செழியன் பாடப்பட்டிருக்கிறான்

பாடல்கள்

சங்கநூல்களில் கல்லாடனார் பாடிய 14 பாடல்கள் உள்ளன. இவர் பாடிய பாடல்கள் அகநானூறு (பாடல் எண் 9, 63, 113, 171, 199, 209, 333) குறுந்தொகை (பாடல் எண் 260, 269) புறநானூறு (பாடல் எண் 23, 25, 371, 385, 392) ஆகியவை.

கல்லாடனார் பாடல்கள் ஆய்வுச்செய்திகள்

அகத்திணைப் பாடல்கள்

அகநாநூறு 9

நான் வினை முற்றி இல்லம் மீள்கிறேன். என் நெஞ்சம் என் தேரினும் முந்திச் சென்று அவளைக் காண்கிறதே என்று எண்ணித் தலைவன் வியக்கிறான் மு.கருணாநிதி உரை.[2]

அகநாநூறு 83

நான் புல்லியின் வேங்கடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறேன். இங்குச் செல்ல அன்போடு அனுப்பிவைத்த நெய்தல்மலர் போன்ற அவளது கண் என் கூடவே வருகிறதே என்று தலைவன் நினைக்கிறான்.[3]

அகநாநூறு 113

என் உடல் வேண்டுமானால் இங்கேயே இருக்கட்டும். என் உயிர் அவர் பொருள் செய்யுமிடத்துக்குச் செல்லட்டும் என்கிறாள் தலைவி).[4]

அகநாநூறு 171

கரடி உயிரைக் கொல்லாமல் இரும்பைப் பூவை உண்ணும் சுரத்தில் சென்றவர் பண்பை நினைத்து வருந்தாதே - தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அகநாநூறு 199

வாகைப் பெருந்துறைப் போரில் நன்னனைக் கொன்று, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் தான் இழந்த நாட்டுவளச் செல்வத்தைத் திரும்பப் பெற்றது போன்ற செல்வத்தை மிகுதியாகப் பெற்றாலும் இவளைப் பிரிந்து உன்னோடு வரமாட்டேன் என்று பொருள் தேடச் செல்ல விரும்பிய தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான்.

அகநாநூறு 209

அலர் ஆலங்கான வெற்றி போல் பரவுகிறது. காரி, ஓரியைக் கொன்று சேரலர்க்கு அளித்த ஓரியின் கொல்லிமலைப் பாவை போன்ற உன் அழகு அழிய அழாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அகநாநூறு 333

தூதனாவது அவர் வருகையைச் சொல்லக்கூடாதா?

குறுந்தொகை 260

தொண்டை நாட்டுக்குக்குப் பொருள் தேடச் சென்றவர் வரவில்லையே! - தலைவி ஏக்கம்.

குறுந்தொகை 269

சுறா எறிந்த புண் ஆறித்தந்தை கடலுக்குச் சென்றுவிட்டான். தாய் உப்பு விற்கச் சென்றுவிட்டாள். வரலாம். - தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

புறத்திணைப் பாடல்கள்

புறநாநூறு 23

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது.ஆலங்கானப் பாரால் பகைவர் நாடு சீரழிந்துள்ளதைப் படம்பிடிக்கும் பாடல் இது.

புறநாநூறு25

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. ஞாயிறு திங்களுடன் செல்வது போலப் போர்க்களம் சென்றாய். பகைவரைக் கொன்றாய். அவர்களது கைம்மை மகளிர் கூந்தல் கொய்யக் கண்டும் உன் வேல் சிதையவில்லையே! என்கிறார் புலவர். ஞாயிறு - நெடுஞ்செழியன், திங்கள் - அவன் குலம்

புறநாநூறு 371

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. கல்லாடனார் அரிசி இல்லை என்று இந்த நெடுஞ்செழியனை அவன் போர்கள உழவு செய்துகொண்டிருந்த பாசறைக்கே சென்று தன் ஆகுளிப் பறையை முழக்கினாராம். குடர்மாலை சூடியிருந்த அவன் 'ஆனாப் பொருள்' (அழியாத செல்வம்) நல்கினானாம். அதற்காக அவன் வானத்து மீனின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலநாள் வாழவேண்டும் என்று கல்லாடனார் வாழ்த்துகிறார்.

புறநாநூறு385

அம்பர் கிழான் அருவந்தையைப் பாடியது. காவிரி நீர் பாயும் ஊர் அம்பர். அதன் தலைவன் அம்பர் கிழான் அருவந்தை. கல்லாடனார் அவன் வாயிலில் நின்று பாடவில்லையாம். பிறனொருவன் வாயிலில் நின்றுகொண்டு தன் தடாரிப் பறையை முழக்கினாராம். அதைக் கேட்ட அம்பர் கிழான் அருவந்தை தானே முன்வந்து புலவரின் பசியைப் போக்கினானாம். அவர் உடுத்தியிருந்த அழுக்கால் நீலநிறத்துடன் காணப்பட்ட அவரது ஆடையைக் களைந்துவிட்டு வெண்மையான புத்தாடை அணிவித்தானாம். அதனால் அவன் தன் வேங்கடமலையில் பொழியும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டுமாம். - இது புலவர் வாழ்த்து.

புறம் 391

பொறையாற்று கிழானைப் பாடியது .இந்தப் பாடலில் பல அடிகள் சிதைந்துள்ளன. வேங்கடமலை இருக்கும் வடபுலம் பசியால் வாடுகிறது என்பதால் நானும் என் சுற்றமும் இங்கு வந்து உன்னிடம் தங்கியுள்ளது. நீ உன் மனைவியோடு வந்து எங்கள் உயிரைக் காப்பாற்றினாய். (காவிரிப்)புனல் பாயும் உன் நாடு 'வேலி ஆயிரம் விளைக'

கல்லாடனார் காட்டும் அரசர்கள்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அஃதை, அம்பர்கிழான் அருவந்தை, ஓரி, காரி, நன்னன், பாணன், புல்லி, பொறையாற்று கிழான்,கோசர், சேரலர், தென்னர், தொண்டையர்

அஃதை

அஃதை நட்பிற்கு அடையாளமாகத் வாழ்ந்தவன். சிறந்த வள்ளல். பல்வேல் கோசர் குடியினரின் தலைவன். நெய்தலஞ்செறு இவன் நாடு. - அகம் 113

செழியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தலையாலங்கானப் போரில் செழியன் எழுவர் கூட்டணியை வென்றான். - அகம் 209

தொண்டையர்

வழை மரங்கள் அடர்ந்த மலையையும், ஓமை மரங்கள் நிற்கும் சுரனும் உடையது தொண்டை நாடு - குறுந்தொகை 260

நன்னன்,

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்.வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த போரில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் நன்னனைக் கொன்று தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான். - அகம் 199

பாணன்

இவன் நாட்டு மக்கள் பகைவர்க்கும் சுரைக்குடுக்கையில் அரிசியும் கருணைக் கிழங்கும் தந்து உதவி வேலை உயர்த்திக்கொண்டு ஆடி விழாக் கொண்டாடுவர். - அகம் 113

புல்லி

புல்லி வேங்கட நாட்டு அரசன். - அகம் 73, அகம் 209

வல்வில் ஓரி

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

சேரலர்(சேர மன்னர்கள்)

காரி ஓரியைக் கொன்று ஒரியின் கொல்லிமலை நாட்டைச் சேர மன்னர்களுக்குத் தந்தான். -அகம் 209

கல்லாடனார் பாடலில் ஊர்கள்

ஆலங்கானம்

தென்னர் கோமான் செழியன் ஆலங்கானப் போரில் எழுவர் கூட்டுப்படையை வென்ற செய்தி நாடெங்கும் பரவியிருந்தது போல அலர் பரவியிருந்தது. - அகம் 209

வேங்கடம்

யானைகள் மிகுந்த நாடு. யானைகள் மரா மரத்தைக் கிழித்து உண்ணும். அங்கு வாழ்ழும் இளையர் மரா மர நாரால் யானைகளைப் பிணித்துக் கொண்டுவந்து ஊரில் கட்டுவர். - அகம் 83

செடிகள்

இரும்பை

இரும்பைப் பூ அம்புமுனை போல் அரும்பு விடும். பூக்கும்போது அதன் வாய் இழுதி என்னும் நரம்பு போல் நடுவில் துளை கொண்டிருக்கும்.காற்று அடிக்கும்போது பனிமழைக்கட்டி வானில் சிதறுவது போல் சிதறும். - அகம் 9

ஞெமை

பாணன் நாட்டைத் தாண்டிச் சென்றால் ஞெமை மரக் காடு இருக்கும். அந்த மரம் தலைவிரி கோலத்துடன் காணப்படும். - அகம் 171

பனை

கோடையின் கொடுமையால் மடல் உதிர்ந்த பனைமரம் போல யானை தன் கையை உயர்த்திப் பிளிறும். - அகம் 333

மராஅம்

மராஅம் என்னும் மரா மரம் வலப்புமாக முறுக்கிக்கொண்டு சுழன்று ஏறும். - அகம் 83

யா மரம்

யா மரத்தின் தளிர் அரக்கைத் தெளித்தது போல் இருக்கும். இது மகளிர் மேனியில் ஊரும் பசப்புக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. - அகம் 333

விலங்கினம்

எண்கு

மானின் ஓசை கேட்டு எய்து புலால் உண்ணும் மக்களைப் போல் அல்லாமல் இரும்பை மரத்தில் ஏறி அதன் பூக்களை உண்ணும். - அகம் 171

சமூகவியல் செய்திகள்

  • மகளிர் உலக்கையால் இடிக்கும் உரல் பாணி ஒலி குடிஞை என்னும் ஆந்தை ஒலிக்கு எதிரொலி போல் கேட்கும். - அகம் 9
  • இல்லத்தில் மாலை வேளையில் பல்லி சகுனம் பார்ப்பர். - அகம் 9

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page