under review

எஸ். இஸ்மாலிஹா

From Tamil Wiki
எஸ். இஸ்மாலிஹா

எஸ். இஸ்மாலிஹா (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். இஸ்மாலிஹா இலங்கை கண்டி புசல்லாவையில் சேகுதாவுத், சித்தி ரசீதா இணையருக்குப் பிறந்தார். இவரின் தந்தை இந்தியாவில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வியாபாரம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தவர். தாய் சித்திரசீதா ரம்பொடையைச் சேர்ந்த முன்னாள் கிராம சேவகர் பீர் முகமதுவின் மகள்.

புசல்லாவையில் உள்ள பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். அங்கு இவரின் தமிழ் ஆசான் இணுவிலை சேர்ந்த பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்.

ஆசிரியப்பணி

இஸ்மாலிஹா மத்திய மாகாணத்தில் உள்ள ரொத் சைல்ட் தமிழ் வித்தியாலயம், கழுகல தமிழ் வித்தியாலயம், யோகலட்சுமி தமிழ் வித்தியாலயம் கலஹா ஆகிய அரசாங்க பாடசாலைகளில் 1977 முதல் 2012 வரை கடமையாற்றினார். அதன் பின்னர் கண்டி கிரீன்ஹில் சர்வதேசப் பாடசாலையில் பணியாற்றினார். ஹாவட் மேத்தா சர்வதேச பாடசாலையில் பணியாற்றினார். பாடசாலை அதிபரான இவர் ஓய்வுபெற்ற பின்னர் தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தார்.

திரை வாழ்க்கை

எஸ். இஸ்மாலிஹா இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஷர்மிலாவின் இதயராகம் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். இஸ்மாலிஹா பள்ளியில் படிக்கும் போது இலக்கிய ஆர்வம் உள்ள மாணவர்களுடன் இணைந்து கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலிக்கு எழுதினார். முதல் சிறுகதை 'பயணம் முடியவில்லை' 1994-ல் வெளியானது. 'நான்', 'குன்றின் குரல்', 'கொந்தளிப்பு' ஆகிய இதழ்களிலும் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நெத் ஆகிய பத்திரிகைகளிலும் மத்திய மாகாண சாகித்திய விழா மலரிலும் பிரான்ஸ் நாட்டு 'பாரிஸ் முரசு' பத்திரிகையிலும் இவரின் சிறுகதைகள் ,குறுநாவல்கள் வெளிவந்தன. 'உழைக்கப் பிறந்தவர்கள்', 'அம்மா ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களிலும் 'மை, பெண்கள் சந்திப்பு மலர் 2005' ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளிவந்தன.

கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கமும் மாவத்த சஞ்சிகை வெளியீட்டாளருமான சிங்கள கவிஞர் பராக்கிரம கொடிதுவக்குவின் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ’இந்து சா லங்கா’, ’பிபிதென பெய’ ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன. இக்கவிதைகள் தமிழில் ’விழிப்பு’ என்ற இதழில் இடம்பெற்றன. 1992-ல் ’ஒரே மண்’ என்ற சிறுகதை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவந்த பாரிஸ் முரசு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. 1994-ல் ’துறவி’ பதிப்பகத்தாரின் ’உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற தொகுப்பில் ’அப்பாவுக்கு கல்யாணம்’ என்ற சிறுகதை வெளிவந்தது. அந்தணி ஜீவாவின் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் ’காயாம் பூவும் வாழை மரமும்’ என்ற எனது சிறுகதை இடம் பெற்றது. சுவிஸ் நாட்டின் ஊடறு வெளியீட்டின் 'மை' என்ற கவிதைத் தொகுதியில் 2005-ம் ஆண்டு இவரின் கவிதை இடம்பெற்றது. ஹிஸ்புல்லா பவுண்டேஷன் ஏற்பாட்டில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட ’நதியை பாடும் நந்தவனங்கள்’ என்ற நூலிலும் இவரின் கவிதை இடம்பெற்றது.

'பூவும் பொட்டும்', 'மங்கையர் மஞ்சரி', 'வாலிப வட்டம்', 'இசையும் கதையும்' போன்ற புனைவுகளை எழுதினார். . இவரின் பல கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

விருதுகள்

  • இரத்தின தீப விருது - 1990
  • 26 வருட சேவைக்காக தினகரன் விருது
  • 1996-ல் கலைஞர் விருது.
  • 2012-ல் 25 வருட இலக்கிய சேவைக்காக தினகரன் விருது.
  • 2014 ஹிஸ்புல்லா பவுண்டேஷன் பொற்கிழியும் விருதும்
  • கலாபூஷணம் விருது - 2020
  • 2023-கண்டி ரத்ன தீபம் அமைப்பினால் வழங்கப்பட்ட 'சித்திலெப்பை' ஞாபகார்த்த விருது

நூல் பட்டியல்

படைப்பு வெளிவந்த தொகுப்பு
  • இந்து சா லங்கா
  • பிபிதென பெய
  • நதியை பாடும் நந்தவனங்கள்
  • மை

உசாத்துணை


✅Finalised Page