எஸ். அம்பிராஜன்
எஸ். அம்பிராஜன் (சீனிவாசன் அம்பிராஜன்; டாக்டர் எஸ். அம்பிராஜன்) (S. AmbiRajan) (1936 - பிப்ரவரி 04, 2001) பொருளாதார அறிஞர், எழுத்தாளர். பொருளாதாரம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை எழுதினார்.
பிறப்பு, கல்வி
எஸ். அம்பிராஜன், 1936-ல், கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் - பத்மாசினி இணையருக்குப் பிறந்தார். பிரேமா நந்தகுமார் இவரது சகோதரி. அம்பிராஜன், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் உள்ள ராமசேஷ ஐயர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள செயின்ட் ஆண்டனி பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். விசாகப்பட்டினத்தில் உள்ள திருமதி ஏ.வி.என். கல்லூரியில் கலைப் பிரிவில் இடைநிலைக் கல்வி பயின்றார். பொருளாதாரத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஹூப்லோன்-நார்மன் ரிசர்ச் நிதிநல்கை மற்றும் ஹால்ஸ்வொர்த் ரிசர்ச் நிதிநல்கை (ஃபெல்லோஷிப்) பெற்றார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில், "Economic Ideas and Indian Economic Policies in the Nineteenth Century" (பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளாதார யோசனைகள் மற்றும் இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
எஸ். அம்பிராஜன், தமிழ், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
தனி வாழ்க்கை
எஸ். அம்பிராஜன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் 1966 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். 1981 முதல் 1996 வரை சென்னை ஐ.ஐ.டி.யில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அத்துறையின் தலைவராகவும் செயல்பட்டார். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரப் பிரிவில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.
எஸ். அம்பிராஜன் மணமானவர். மனைவி: பிரபா.
இலக்கிய வாழ்க்கை
எஸ். அம்பிராஜன், இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்து தி ஹிந்து, எகனாமிக் டைம்ஸ் போன்ற இதழ்களில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினார். இந்தியாவின் சில பொருளாதார முடிவுகளைக் கண்டித்து இதழ்களில் எழுதினார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். ஆஸ்திரிய பொருளாதார வல்லுநர்களான லுட்விக் வான் மிசஸ் மற்றும் எஃப்.ஏ.ஹயேக் ஆகியோரின் படைப்புகளை மேற்கோள் காட்டி மையப்படுத்தப்பட்ட திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை முன்வைத்தார். அது குறித்து விரிவாக இதழ்களில் எழுதினார். பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் உற்பத்தி உயர்வு மட்டுமல்ல; அரசியல் அதிகாரம், நிர்வாக அமைப்பு, சமூக நிறுவனங்கள் ஆகியவற்றோடு நெருக்கமாக பின்னிப் பிணைந்த ஒன்று என்பதை விளக்கிப் பல கட்டுரைகளை எழுதினார்.
மத்திய பட்ஜெட் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்புகள் குறித்து அம்பிராஜன் எழுதிய கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. அம்பிராஜனின் முதல் நூல், 'A Grammar of Indian Planning' 1959-ல் வெளியானது. தொடர்ந்து எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி ஜர்னலில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். பொருளாதாரம் குறித்த பல நூல்களை எழுதினார். எஸ். அம்பிராஜனின் நூல்களும் கட்டுரைகளும் உலக அளவில் பல பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்பட்டன.
மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன், பேராசிரியர் அம்பிராஜனை 1966 முதல் 1981-ம் ஆண்டு முற்பகுதி வரையிலான காலகட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் வரலாற்றின் மூன்றாவது தொகுதியை எழுதச் சொன்னார். ஆனால், அம்பிராஜனின் திடீர் மறைவால் அப்பணி இடைநின்று, இறுதியில் வேறு சிலரைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
மேடையுரை
எஸ். அம்பிராஜன் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1999-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில், "இந்திய பொருளாதாரத்தில் அம்பேத்கரின் பங்களிப்புகள்" பற்றி உரை நிகழ்த்தினார்.
மறைவு
எஸ். அம்பிராஜன், பிப்ரவரி 4, 2001 அன்று சென்னையில் தனது 65-ம் வயதில் காலமானார்.
நினைவு
சென்னையின் பொருளாதாரக் கல்வி மற்றும் பொதுச் செலவு வட்டமேசை நிறுவனம், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களைக் கொண்டு டாக்டர் எஸ் அம்பிராஜன் நினைவு விரிவுரையை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
மதிப்பீடு
எஸ். அம்பிராஜன், தனது ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும், நூல்களுக்காகவும் உலக அளவிலான பொருளாதார அறிஞர்களால் மதிக்கப்பட்டவர். முதல் தலைமுறைப் பொருளாதார நிபுணரான அவரது கட்டுரைகள் உலக அளவில் சிறந்த வரவேற்பைப் பெற்றன. வளர்ச்சிப் பொருளாதாரம், அரசியல் பொருளாதாரம், நிறுவனப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அம்பிராஜன் செய்த பங்களிப்புகள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகின்றன. எஸ். அம்பிராஜன், இந்தியப் பொருளாதாரச் சிந்தனையில் தனித்த ஒருவராக அறியப்பட்டார். இந்தியாவின் மூத்த பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- A Grammar of Indian Planning (1959)
- Malthus and Classical Economics (1959)
- The Taxation of Corporate Income in India (1964)
- Economic Ideas and Indian Economic Policies in the Nineteenth Century (1964)
- Laissez Faire in Madras (1965)
- Economic Ideas and Economic Policy in British India (1967)
- Classical Economists on Economic Development and Its Impact on British-Indian Administration in the Nineteenth Century (1970)
- Classical Political Economy and British Policy in India (1978)
- The Engineer as Economist (1979)
- Political Economy and Monetary Management: India, 1766-1914 (1984)
- India and Indonesia from the 1920s to the 1950s: The Origins of Planning (1986)
- Economic Wisdom in Ancient Tamil Society (1989)
- The Delayed Emergence of Econometrics as a Separate Discipline (1989)
- Economic Wisdom in Ancient Tamil Society: The Acquisition and Use of Wealth in Ancient Tamil Literature (1990)
- The Professionalization of Economics in India (1996)
- The Post-1945 Internationalization of Economics: History of Political Economy Annual Supplement (1997)
- The Concepts of Happiness, Ethics, and Economic Values in Ancient Economic Thought (1997)
- Good People, Bad Times: Views from Periphery (1998)
- Economic Thinking of Dadabhai Naoroji (2001)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2026, 10:19:48 IST