எண்களின் சிறப்பு: எண் 4
From Tamil Wiki
எண்ணிக்கையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 4 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.
எண் 4-ன் சிறப்புகள்
ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் நான்காவதாக வருவது 4. ’சதுர்’ என்று ஆன்மிகத்திலும் ’சதுரம்’ என்று இலக்கியத்திலும் பயின்று வரும். எண் 4-ஐக் குறிக்கும் வகையில் நான்கு, நால், நாலு என்று இலக்கியத்தில் சொற்கள் பயின்று வந்துள்ளன.
ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்
- நால்வகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
- நால்வகை உண்ணும் முறைகள் - உண்டல், தின்னல், நக்கல், பருகல்
- நால்வகை உரைகள் - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
- நால்வகைப் படைகள் - தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை
- நால்வகைச் சொற்கள் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
- நால்வகைப் பாக்கள் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
- நால்வகைப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
- பெண்டிரின் நால்வகைக் குணங்கள் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
- நால்வகை அரண்கள் - மலை அரண், காட்டு அரண், மதில் அரண், நீர் அரண்
- நால்வகைக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
- நான்கு வேதங்கள் - ரிக், யஜுர், சாமம், அதர்வணம்
- நால்வகைக் கதிகள் - உம்பர், மக்கள், விலங்கு, நரகர்
- நால் வகை இழிச் சொல் - பொய், குறளை, கடுஞ் சொல், பயனில் சொல்
- நால் வகைக் கணக்குகள் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
- நால் வகைப் புலமை - கவியே, கமகன், வாதி, வாக்கி
- நால் வகைக் கவிகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக் கவி
- நான்கு யுகங்கள் - கிரதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்
- உபாயங்கள் நான்கு – சாம, பேத, தான, தண்டம்
- பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம், குளிர்காலம்
- மனிதப் பருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம்.
- வாழ்வுமுறை நான்கு – பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம்
- வழிகாட்டிகள் நால்வர் – தாய், தந்தை, உடன்பிறந்தோர், குரு
- நான்கு திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
- நால்வர் - சைவ சமயக் குரவர்கள்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- நால்வகைச் சாந்து – கலவை, வீதம், புலி, வட்டிகை எனும் சந்தனச் சாந்து
- நால்வகைத் தேவர் – பவணர், வியத்தகர், கோதிஷ்கர், கப்ல வாசியர்
- நால்வகைத் தோற்றம் – அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்
- நால்வகைப் பூ – கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பூ, நிலப் பூ
- நாலம்பலம் – கோயிலுக்குள் ஒரு பகுதி
- நாலறிவுயிர் – சுவை, ஒளி, ஊறு, நாற்றம் என்பன நாலறிவு. வண்டு, தும்பி முதலியன நாலறிவு உயிர்கள்
- நாலா – பல. நாலா பக்கமும்
- நாலான் சடங்கு – நாலா நீர்ச் சடங்கு. விவாகத்தின் நான்காம் நாள் மணமக்கள் புரியும் நீராட்டச் சடங்கு.
- நாலா நீராடுதல் – மாதவிடாய் முடிந்த நான்காவது நாளில் சுத்திகரிப்புக் குளியல்.
- நாலாம் பாதகன் – கொலை பாதகன்
- நாலாம் பொய்யுகம் – கலியுகம்
- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய 4000 பாடல்கள்.
- நாலு கட்டு – நாற்பூரமும் சுற்றுக்கட்டுத் திண்ணை கொண்ட வீடு.
- நாலு கவிப் பெருமாள் – நாலு வகைக் கவியிலும் வல்லவர். திருமங்கை ஆழ்வார்
- நான்மணி மாலை – வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என மாறிமாறி மாலை போல் இசைந்து வரும், நாற்பது செய்யுட்கள் கொண்ட நூல்.
- நான் மருப்பு யானை – நாற் கொம்புடைய யானை. ஐராவதம்
- நான் மலத்தார் – ஆணவம், கன்மம், சுத்தமாயை, திரோதாயி என்னும் நான்கு மலங்களை உடைய பிரளயக்காரர்.
- நான்மாடக் கூடல் – கூடல் நகரம், மதுரை மாநகர்.
- சதுர மாடம் - நான்கு புறமும் அளவொத்து அமைந்த விளக்கேற்றும் மாடப்பிறை.
- சதுவகை - நால் வகை
- சதுரப் பாலை - பாலை யாழின் வகை
- சதுரக் கள்ளி - நான்கு விளிம்புகளிலும் முட்கள் உள்ள கள்ளி
- சதுரக் கம்பம் - நாற்கோணமாக அமைந்த தூண்
- சதுர் வேதி - நான்கு வேதங்களிலும் வல்லமை உடைய அந்தணன்
- சதுர்க்கோணம் – நாற்கரம், நாற்கோணம்.
- சதுர்ப்புஜன்- நான்கு தோள்களை உடையவன்; திருமால், சிவன்
- சதுர்முகன் – நான்கு முகங்களை உடைய பிரம்மன்
- சதுர்த்தசம் - பதிநான்கு
- சதுர்த்தசி - பதினான்காம் திதி
- சதுர்த்தம் - நான்கு சுரம் உடைய ராகம்
- சதுர்தர் - நான்காம் வருணத்தினர்
- சதுர்தர் - சமர்த்தர்
- சதுர்த்தி - நான்காம் திதி
- சதுர்ப்பாதம் – சிவ ஆகமங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம்
- சதுர் வர்ணம் - நால் வகை வர்ணம்; அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
- சதுரகராதி - 18-ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தொகுத்த பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி எனும் நான்கு பிரிவுகளைக் கொண்ட அகராதி.
- சதுரங்க சேனை - நாற்படை - நான்கு படைப்பிரிவுகள் கொண்ட முழுமையான சேனை; ரத, கஜ, துரக, பதாதி.
- சதுரச் சந்தி - நாற்சந்தி
- சதுக்கம் - நாற்சந்தி.
- சதுக்க பூதம் - சிலப்பதிகாரம் கூறும் பூதம்; நாற்சந்திகளில் நின்று கொடியவரைப் பிடித்து விழுங்கும் பூதம்.
- சதுர்முகன் தேவி - நான்முகன் தேவி; சரஸ்வதி
- சதுர்த் தந்தம் - நான்கு தந்தங்களை உடைய யானை. ஐராவதம்.
உசாத்துணை
- பிங்கல நிகண்டு: தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்
- நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017
✅Finalised Page