ஊர்ச்செரு
ஊர்ச்செரு நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. அரணின்(மதில், அகழி முதலியன) வெளியே அமைந்த ஊரில் உழிஞையாரொடு நொச்சியார் போரிடுவதை கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நொச்சி மறவர்கள் தங்களுடைய காவற்காடும் அகழியும் ஆகிய இவை உழிஞை மறவரால் சிதைவு அடையாதபடி போர் செய்த சிறப்பினை உரைப்பது- என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அருமிளையோடு கிடங்குஅழியாமைச்
செருமலைந்த சிறப்புரைத்தன்று(கொளு 5.3)
வெண்பா
வளையும் அயிரும் ஒலிப்ப வாள்வீசி
இளையும் கிடங்கும் சிதையத் - தளைபரிந்த
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர்
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு (88)
பொருள் உழிஞையார், சங்கும் கொம்பும் முழங்க வந்து வாளை வீசி, நொச்சியாரின் காவற் காட்டையும் அகழியையும் சிதைத்தனர். சிதைத்த உழிஞையாரின் படை கெட்டோடும்படியும், மீண்டும் வாராதபடியும் நொச்சியார் தடுத்து ஆரவாரம் செய்தனர்.
நொச்சி மறவரின் மதிலும் அகழியும் காவல் உடையன. அதனைக் குலைக்கும் வண்ணம் உழிஞையார் ஊர்ப்புறத்தே படர்ந்திருந்தனர். அவர்களை ஓடச் செய்தனர் நொச்சியார் என்பதால் இது ஊர்ச்செரு என்னும் துறையின் பால் படும்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:48:20 IST