உமா ஷக்தி
உமா ஷக்தி (உமா பார்வதி)(பிறப்பு : ஏப்ரல் 29, 1974) தமிழ்க் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஊடகத் துறையாளர், திரைக்கதை ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
உமா ஷக்தியின் இயற்பெயர் உமா பார்வதி. சென்னையில் ஏப்ரல் 29, 1974-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார். இதழியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
தனி வாழ்க்கை
உமா சக்தி கலைஞர் டி.வி, மக்கள் டி.வி, விஜய் டி.வி, பொதிகை ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ரெயின் போ மற்றும் ஆஹா எப்.எம் களில் ரேடியோ ஜாக்கியாக பணி செய்தார்.
'மெட்ராஸ் டாக்கீஸ்', 'திரு.மீடியா வொர்க்ஸ்', குமுதம் சிநேகிதி, டாக்டர் விகடன், 'பெண்ணே நீ', தினமலர், கல்கி, தேவதை என பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணி புரிந்தார். இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராகப் பணி புரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
உமா ஷக்தி கவிஞராக அறியப்பட்டவர். முதல் கவிதைத் தொகுப்பு 'வேட்கையின் நிறம்' 2012-ல் வெளியானது. லதா ராமகிருஷ்ணன் இவரது சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
உமா ஷக்தி சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். உலக சினிமா பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார். அமிர்தா இதழில் இவரது பத்தி வெளியானது. இவரது படைப்புகள் ஆனந்த விகடன், அவள் விகடன், புதிய தலைமுறை, குமுதம், ஸ்நேகிதி, கல்கி, பெமினா, தமிழ் ஹிந்து நாளிதழ், காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, புத்தகம் பேசுது, யுகமாயினி, 'வலசை 'எனப் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
உமா ஷக்தியின் 'திரைவழிப் பயணம்' நூலில் சத்யஜித் ரே, டேவிட் லீன், மஜீத் மஜீதி, ஃபெட்ரோ ஆல்மதோவ்ர் முதலிய உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
விருதுகள், பரிசுகள்
க.சி,சிவகுமார் நினைவு இலக்கிய விருது( நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை சிறுகதைத் தொகுப்புக்காக)
இலக்கிய இடம்
" வித்தியாசமான கற்பனைகளையும், நுணுக்கமான வார்த்தை அமைப்புகளையும் கொண்டது வேட்கையின் நிறம் கவிதைத் தொகுப்பு" என்று அ. முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
கவிதை
- வேட்கையின் நிறம்(2009)
- பனிப் பாலை(2014)
கட்டுரை
- உலக சினிமா கவிதைகள் தொகுப்பு
- சாம்பல் பூத்த மலர்கள்
- கதொபநிஷதம் – கிழக்கு பதிப்பகம் (கட்டுரை)
சிறுகதை
- நாம் என்ன அந்த தேநீரைப் பருகவில்லை
- நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்
உசாத்துணை
✅Finalised Page