under review

உதயேந்திரம் செப்பேடு

From Tamil Wiki
உதயேந்திரம் செப்பேடு மாதிரி

உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டது. உதயேந்திரம் செப்பேட்டில் சோழ மன்னன் பரம்பரையும், கங்க மன்னன் பிருதிவிபதியின் பரம்பரையும் இடம்பெற்றுள்ளதால் இதனை சோழன் செப்பேடு என்றும், கங்க மன்னனின் செப்பேடு என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செப்பேடு அமைப்பு

உதயேந்திரம் செப்பேட்டில் ஏழு இதழ்கள் உள்ளன. இதழ்கள் 8.75 முதல் 8.875 அங்குலம் நீளமும் 3.25 அங்குல அகலமும் கொண்டவை. ஒரு செப்பு வளையத்தில் செப்பிதழ்கள் கோர்க்கப்பட்டுள்ளன. உதயேந்திரம் செப்பேட்டில் முதல் பகுதி வடமொழியிலும், இரண்டாவது பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.[1] வடமொழியில் 28 ஸ்லோகங்களும், தமிழ் பகுதி உரைநடையிலும் எழுதப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 101 வரிகளில் 71 வரிகள் வடமொழியிலும், 30 வரிகள் தமிழிலும் உள்ளன.

செப்பேட்டின் காலம்

உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது என அதன் தமிழ்ப் பகுதியில் குறிப்பு உள்ளது. முதலாம் பராந்தகனின் ஆட்சி பொ.யு. 907-ல் தொடங்குவதால் இச்செப்பேடு பொ.யு. 922-ல் பதிக்கப்பட்டது எனத் தெரிய வருகிறது. உதயேந்திரம் செப்பேட்டை கங்க மன்னன் இரண்டாம் பிருத்விபதி வெளியிட்டதால் இதனை கங்கர் செப்பேடு என ஹுல்சு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் முனைவர் இரா. நாகசாமி பதிப்பித்த வேளஞ்சேரிச் செப்பேட்டின் முன்னுரையில், “உதயேந்திரம் செப்பேட்டில் பிருத்விபதி விண்ணப்பதாரன் மட்டுமே. அதனால் இது பராந்தகனின் செப்பேடு மட்டுமே” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் 24-ம் செய்யுளில் ஹஸ்திமல்லனான பிருத்விபதி, பரகேசரியான பராந்தகனின் ஆணையைக் கேட்டான் என கூறியுள்ளதும், அடுத்த செய்யுளில் பராந்தகனே தானத்தைக் காக்கும் படி வேண்டிக் கொண்டதும் இச்செப்பேடு பராந்தகனின் செப்பேடு என்பதற்கான சான்றாக உள்ளன. "இப்பரிசேய் அறையோலைப் படி சாஸனஞ்செய்வித்து குடுத்தேன் செம்பியன் மாவலிவாணராயனேன்" என்னும் வரிகளால் பராந்தகனின் ஆணைப்படி கங்க மன்னன் வெளியிட்ட சாசனம் இது என்றும். இதுவே சோழர் செப்பேடுகளில் பழமையானது என்றும் புலவர் வே. மகாதேவன் குறிப்பிடுகிறார்.

செப்பேட்டின் நோக்கம்

உதயேந்திரம் செப்பேடு உதயசந்திர மங்கலத்தில் வாழும் அந்தணர்களுக்குக் கடைக்கோட்டூர், உதயசந்திர மங்கலம் கிராமத்தை வழங்குவதற்காகக் கங்க மன்னன் பிருத்விபதியின் விண்ணப்பத்தின் பெயரில் முதலாம் பராந்தகன் ஆணை வெளியிட்டான். இவ்விரு கிராமங்களும் வீரநாராயணச்சேரி என்னும் பெயரால் வழங்கப்பட்டன என செப்பேடு ஆவணம் கூறுகிறது.

பதிப்பு வரலாறு

உதயேந்திரம் செப்பேடு ஹுல்சு பதிப்பித்த தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி இரண்டின் மூன்றாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது. ஹுல்சு இதனை 76-ம் எண்ணுள்ள சாசனமாகப் பதிப்பித்தார். மூன்றாம் பாகத்தில் பக்கம் எண் 375-390ல் இச்செப்பேடு பற்றிய விவரம் உள்ளது.

இலச்சினை விவரம்

செப்பேட்டின் வளையம் பொருத்தப்பட்ட இடத்தின் அடியில் இலச்சினை 2.215 வட்ட வடிவில் இடம்பெற்றுள்ளது. வலதுபக்கம் பார்த்த காளையின் உருவமும் அதற்கு இருபக்கமும் அலங்கரிக்கப்பட்ட விளக்குத் தாங்கிகளும் இடம்பெற்றுள்ளன. காளையின் மேல் மனிதனின் உருவமும் பிறை சந்திரனும் இடம்பெற்றுள்ளன. அதற்கு மேல் சாமரங்களும் அதன் நடுவே குடையும் பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் கீழே கிரந்த எழுத்தில் ’ப்ரபுமேரு’ என பொறிக்கப்பட்டுள்ளது. பாண அரச மரபில் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனின் பாட்டனார் பெயர் பிரபுமேரு என்ற விவரம் இரண்டாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட உதயேந்திரம் செப்பேடு மூலம் அறியமுடிகிறது.

உதயேந்திரத்தில் கிடைத்த ஏழு செப்பேட்டிற்கும் பிரபுமேருவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை வளையமற்று இருந்த செப்பேட்டில் வேறு செப்பேட்டினுடைய வளையத்தை சேர்த்திருக்கலாம் என ஹுல்சு குறிப்பிடுகிறார்.

செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட விதம்

உதயேந்திரம் செப்பேட்டை ஹுல்சு பதிப்பிக்கும் போது அவை உதயேந்திரம் சௌந்தரராஜப் பெருமாள் கோவிலின் தர்மகர்த்தாவிடம் இருந்தது. எஃப்.ஏ. நிக்கோல்ஸன் உதவியால் ஹுல்சு அதனை கண்டுபிடித்தார். இச்செப்பேடு பற்றிய முதல் விவரம் 1850- ஆம் ஆண்டு ரெவ்.டி. ஃபோல்க்ஸ் எழுதிய Manual of the Salem District என்ற நூலின் இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்தியல்

செப்பேட்டின் வடமொழிப் பகுதி கிரந்த எழுத்தில் அமைந்துள்ளது. குறிப்பாகக் குறில் நெடில் போன்றவற்றின் வேறுபாடு ஓரள்வு தெளிவாக உள்ளது என சோழர் கால செப்பேடுகளை தொகுத்த புலவர் வே. மகாதேவன் குறிப்பிடுகிறார். வடமொழிப் பகுதியிலும் தமிழின் சிறப்பெழுத்துகள் தமிழிலேயே பதிக்கப்பட்டுள்ளன. தமிழ் பகுதியிலுள்ள வடமொழி சொற்களும் கிரந்த எழுத்துகளிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

வடமொழிப் பகுதி

வடமொழிப் பகுதியின் தொடக்கம் திருமாலின் காப்புச் செய்யுளோடு தொடங்குகிறது. அடுத்து சிவனின் வடிவம் பாவங்களைப் போக்கட்டும் என்னும் காப்புச் செய்யுள் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக சோழர் பரம்பரை பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில் விஷ்ணு, பிரம்மா, மரீசி, கச்யபர், சூரியன், ருத்ரஜித், சந்திரஜித் போன்ற தேவர் முனிவர் பரம்பரை முதலில் இடம்பெற்றுள்ளது. பின்னர் கோக்கிள்ளி, சோழன், கரிகாலன், கோச்செங்கணான் என்ற இலக்கிய சான்று கொண்ட அரசர்களின் பட்டியலுக்கு பின் விஜயாலயன், ஆதித்தன் போன்ற சோழர்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியலின் இறுதியாக முதலாம் பராந்தக சோழனின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. முதலாம் பராந்தக சோழனின் பிறப்பு பற்றியும், அவனது பெருமை, புண்ணிய செயல்கள் பற்றியும் முதல் பகுதியில் உள்ளது. பின் அவன் கேரள அரசன் மகளை மணந்த செய்தியும், ராஜசிம்ம பாண்டியனையும், ஈழப் படைகளையும் வென்றது பற்றி செய்தியும் இடம்பெற்றுள்ளது.

சோழர் பரம்பரைக்கு பின் கங்க அரசனின் பரம்பரை இடம்பெற்றுள்ளது. இதில் குவளாலபுரம் (கோலார்) ஊரில் கங்க குலத்தின் முதல் மன்னன் கொங்கணி ஆண்டான். அவன் கண்வ மகரிஷியின் குலத்தில் பிறந்தவன். கொங்கணியின் பராக்கிரம செயல்களும் அவனது வம்சத்தில் வந்த விஷ்ணுகோபன், அரி, மாதவன், துர்வினீதன், பூவிக்ரமன் போன்ற அரச பரம்பரை பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

அக்குலத்தில் பிறந்த சிவமாரனின் புதல்வனான முதலாம் பிருதிவிபதியின் வரலாறு இடம்பெற்றுள்ளது. முதலாம் பிருதிவிபதி வைம்பல்குழியின் போரில் தன் எலும்பைக் கங்கைக்கு அனுப்பியவன். திருப்புறம்பியம் போரில் வரகுணபாண்டியனை வென்று அபராஜிதன் என பெயர் பெற்று தன் நண்பனுக்காக உயிர் நீத்தவன். முதலாம் பிருதிவிபதிக்கு மாரசிம்மன் பிறந்தான். மாரசிம்மனின் மகன் இரண்டாம் பிருதிவிபதி. இரண்டாம் பிருதிவிபதி பராந்தக சோழனிடமிருந்து பட்டயத்தை பரிசாகப் பெற்றவன். இரண்டாம் பிருதிவிபதி அத்திமல்லன் என்னும் பெயர் பெற்றிருந்தான்.

இரண்டாம் பிருதவிபதியின் விண்ணப்பத்தை ஏற்று பராந்தக சோழன் உதயேந்திர சதுர்வேதிமங்கலத்திற்குக் கடைகோட்டூர் என்னும் ஊரை தானமாக வழங்கினான். இதனால் திகம்பர சமணர்களுக்கு முன்பு தானமாக வழங்கப்பட்டிருந்த ஊர் (வித்யாதரிபட்டி, தேவபட்டி ஊர்களை தவிர்த்து) தானமாக வழங்கப்பட்டது என அறிய முடிகிறது.

தமிழ்ப் பகுதி

மதுரையை வென்ற கோப்பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் செம்பியன் மாவலிவாணராயன் பட்டம் வென்ற இரண்டாம் பிருதிவிபதி விண்ணப்பத்தால் படுவூர்க் கோட்டத்தைச் சேர்ந்த மேல் அடையாறு நாட்டுக் கடைகோட்டூரை உதய சந்திர மங்கலத்தோடு சேர்த்துப் பராந்தகனின் பெயரால் வீரநாராயணச் சேரி என்ற பெயரால் வழங்கப்பட்டது. இதன் எல்லைகள் விவரமாக இடம்பெற்றுள்ளன.

நாட்டு சபையோரைக் கூட்டிப் படாகை நடந்து கல்லும் கள்ளியும் நாட்டிப் பழைய பள்ளிச்சந்தங்களான விச்சாதிரிப்பட்டியும், தேவர்பட்டியும் நீங்கலாக உள்ள நிலம் கொடுக்கப்பட்டது. இதற்கான அறையோலையைக் கண்டு செம்பியன் மாவலிவாணராயன் சாசனம் செய்துக் கொடுத்தான் என்பது தமிழ்ப் பகுதியின் செய்தியாகும். இதன் இறுதியில் ஒம்படைக் கிளவியாக ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம் இடம்பெற்றுள்ளது.

அரசர்கள் வரலாறு

செப்பேட்டில் சோழர் அரச பரம்பரை, கங்க மன்னர் அரச பரம்பரை என இரண்டு பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் வடமொழி பகுதியில் அதனை வெளியிடும் அரச மரபினர் பற்றிய விவரம் இடம்பெறும். இதனை பிரசத்தி[2] என்பர். செப்பேட்டில் இடம்பெறும் அரசர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்,

  • தேவர்கள், முனிவர்கள்
  • புராணகால அரசர்கள்
  • இலக்கியத்தில் இடம்பெற்ற அரசர்கள்
  • வரலாற்று அரசர்கள்

சோழ பரம்பரை

தேவர்கள், முனிவர்கள்

  • விஷ்ணு
  • பிரம்மா
  • மரீசி
  • கச்யபர்
  • சூரியன்

புராண அரசர்கள்

  • ருத்ரஜித்
  • சந்த்ரஜித்
  • சிபி

இலக்கியத்தில் பாடபெற்ற அரசர்கள்

  • கோக்கிள்ளி
  • சோழன்
  • கரிகாலன்
  • கோச்செங்கணான்

வரலாற்று அரசர்கள்

  • விஜயாலயன்
  • ஆதித்தன்
  • பராந்தகன்

கங்கர் பரம்பரை

தேவர்கள், முனிவர்கள்

  • கச்யபர்
  • கண்வர்

வரலாற்று அரசர்கள்

  • கொங்கணி
  • விஷ்ணுகோபன்
  • அரி
  • மாதவன்
  • துர்வினீதன்
  • பூவிக்ரமன்
  • சிவமாரன்
  • முதலாம் பிருதிவிபதி
  • மாரசிம்மன்
  • இரண்டாம் பிருதிவிபதி

உசாத்துணை

  • சோழர் செப்பேடுகள், பதிப்பாசிரியர் புலவர் வே. மகாதேவன், இணைப்பதிப்பாசிரியர் முனைவர் க. சங்கரநாராயணன்

அடிக்குறிப்புகள்

  1. பொதுவாக செப்பேடுகளில் அரசப்பரம்பரையின் புகழ் வடமொழியில் எழுதப்படுவது வழக்கம். இதனை பிரசஸ்தி என்றழைப்பர். அதன் பின்னுள்ள தமிழ் பகுதியில் தானச் செய்தி இடம்பெறும்.
  2. தானமளித்த மன்னனின் முன்னோர் புகழை பாடுவதால் பிரசத்தி எனப்படுகிறது.


✅Finalised Page