under review

இரா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
நன்றி:தினமலர்
Iraaki.jpg

இரா.கிருஷ்ணமூர்த்தி (ஜனவரி 18, 1933-மார்ச் 4, 2021) தமிழறிஞர், நாணயவியலாளர், இதழாளர், கணினித் தமிழறிஞர். சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களைக் கண்டறிந்து சங்ககாலத்துக்கான வரலாற்றாதாரத்தை நிறுவினார். தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. நாணயவியல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். தினமலரின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். கணினியில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். தமிழின் சீர்திருத்த எழுத்துகளை முதன்முதலில் ஊடகத்தில் பயன்படுத்திய முன்னோடி. மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். லண்டன் ராயல் நாணயவியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர். தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழகத்தையும், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தையும் நிறுவினார்.

பிறப்பு,கல்வி

இரா.கிருஷ்ணமூர்த்தி தினமலர் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் - கிருஷ்ணம்மாள் இணையருக்கு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரத்தில் ஜனவரி 18, 1933 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார். நாகர்கோவில் சேது லக்ஷ்மிபாய் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நிலவியலில்(Geology) இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

கிருஷ்ணமூர்த்தி கல்வியை முடித்த பின் தினமலர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பெயர் ராஜலக்ஷ்மி. இரு மகன்கள், இரு மகள்கள்.

இதழியல்

கிருஷ்ணமூர்த்தி 1956-ல் தினமலரில் பணியில் சேர்ந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த தினமலரின் தலைமை அலுவலம் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபின் சென்னைக்கு மாறியது. 1977-ல் இரா. கிருஷ்ணமூர்த்தி தினமலரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை தினமலரின் ஆசிரியர் பொறுப்பு வகித்தார். இந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாட்டின் தலைவராக 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது உடன் செல்லும் அச்சு ஊடகப் பிரதிநிதிக்குழுவின் உறுப்பினராக மலேசியா(1977,1987), சீனா(1998, 2001), அமெரிக்க ஐக்கிய நாடுகள்(2002, 2005), பாகிஸ்தான்(2004), ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து(2005), மயன்மார், மொரீஷியஸ்(2006) போன்ற நாடுகளுக்குச் சென்றார்.

இரா. கிருஷ்ணமூர்த்தி தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களைச் சீர்திருத்துவதன் மூலமாக மாணவர்கள் தமிழ் மொழியை எளிதாக அறிந்து கொள்ள முடியும் எனக் கருதி பண்டைக் காலத்தின் தமிழ் எழுத்து வரி வடிவங்களை ஆராய்ந்தார். தமிழ் வட்டெழுத்து, தமிழ் பிராமி முதலிய வரிவடிவங்களை ஆராய்ந்ததன்மூலம். நாணயவியலில் ஆர்வம் கொண்டார்.

தினமலரின் சார்பாக பின்தங்கிய பகுதி மாணவர்களுக்காக 1998 முதல் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 2007 மற்றும், 2012 என, இரண்டு முறை, சென்னையில், மாநகராட்சிப்பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

எழுத்துச் சீர்திருத்தம்

இரா. கிருஷ்ணமூர்த்தி தன் ஆய்வுகளில், ஈ.வெ.ராமசாமியின் 'விடுதலை' நாளிதழில் பயன்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பரிசீலனை செய்து, அவர் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்மை முறையை, தினமலர் நாளிதழில், முன்னோடியாக அமல்படுத்தினார். இந்த எழுத்து முறையில், 1977-ம் ஆண்டு, ஒரு பத்தி செய்தியை அச்சுக் கோர்த்து முதன்முறையாக, தினமலர் திருச்சி பதிப்பில் வெளியிட்டார். 1978-ல் தான் ஈ.வெ.ராமசாமி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்ஜிஆர் அரசு அமல்படுத்தியது.

நாணயவியல்

பெருவழுதி நாணயம்-1
பெருவழுதி நாணயம்-2
மாக்கோதை, குட்டுவன்கோதை நாணயங்கள் நன்றி:தினமணி

இரா. கிருஷ்ணமூர்த்தி அரிய நாணயங்களைச் சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களைப் பற்றிய அவரது அறிவு நாணயவியல் ஆய்வுக்கு உதவியது.

Oldpandyacoins.jpg
Oldcheracoins.jpg

நாணயங்களை அச்சிட்டு வெளியிட்ட பண்டைய மன்னர்கள் அவற்றில் தங்களின் வெற்றிகளையும் யாகம் போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் அடையாளம் காட்டும் குறியீடுகளையும் பொறிக்கும் வழக்கம் இருந்தது. சங்க காலம் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் இருந்தபோதும் அதற்கான அத்தகைய நாணயவியல் சான்றுகள்(சங்ககால நாணயங்கள்) எதுவும் கிடைக்காத நிலையில் சங்க காலத்தில் பண்டமாற்று முறையே இருந்திருக்க வேண்டும் என்றும் சங்ககாலம் நாகரீகம் வளர்ச்சியடையாத காலம் என்றும் சில வரலாற்றாய்வாளர்கள் கருதினர்.

இரா. கிருஷ்ணமூர்த்தி சங்க இலக்கியச் செய்திகளுக்கான சான்றுகளை பண்டைய எழுத்துக்களிலும் சின்னங்களிலும் தேடும் நோக்கத்தில் நாணய ஆராய்ச்சிக்காக 'தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழகம்' என்ற அமைப்பை 1986-ல் நிறுவினார். இரா. கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், சென்னை பல்கலைக் கழகத் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த குருமூர்த்தி பொதுச்செயலாளராகவும், ஆர்.நூருல்லா பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். வாரணாசி, புனே, நாக்பூர், போபால் போன்ற வடநாட்டு நகரங்களில் நடந்த நாணயவியல் ஆய்வுக் கழக மாநாடுகளுக்குச் சென்றார். தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளை நடத்தினார்

சேர, சோழ பாண்டியர் கால நாணயங்களைக் கண்டறிதல்

இரா. கிருஷ்ணமூர்த்தி கொடைக்கானலில் பண்டைய நாணயங்கள் விற்பனை செய்த வணிகரிடம் வாங்கிய நாணயங்களை சோதித்து அவற்றில் சங்ககால வரிவடிவத்தில் பொறித்திருந்த 'பெருவழுதி' என்ற பெயரையும், யாகத்தின் சின்னங்களான குதிரை, யாககுண்டம் போன்றவற்றையும் கொண்டு அவை பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அச்சடித்தவை என அடையாளம் கண்டார். 1985-ல், காசி, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அக்கட்டுரை வெளியிடப்பட்டது. பெருவழுதி நாணயம் பொ.யு. 2 அல்லது, 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணித்தார். முதலில் காலக்கணக்கு குறித்த கருத்துகளில் வேறுபட்டாலும், பின்பு ஐராவதம் மகாதேவன், சென்னை பல்கலைகழகத் தொல்லியல் துறைத் தலைவர் கே.வி. ராமன் மற்றும் ஆர். நாகசாமி ஆகியோராலும் இது சங்க கால நாணயம் என உறுதிப்படுத்தப்பட்டது. சங்ககாலம் இருந்ததற்கான முதல் நாணயவியல் சான்றாக இது அமைந்தது. மௌரிய அரசின் சின்னங்களும் இந்நாணயங்களில் இருப்பதைகொண்டு மௌரிய அரசுக்கும் பாண்டிய அரசுக்கும் இருந்த உறவைப் புலப்படுத்தினார்.

கிருஷ்ணமூர்த்தி 'சங்ககால கொற்கை பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள்' என்ற சிறு நூலில் மதுரை பாண்டியரைப்போல் இன்னொரு பாண்டியர் மரபினர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தென்பாண்டி மரபினர் என்று குறிப்பிடுகிறார். இவர்களின் நாடு பெரியாற்றின் தெற்கே வேம்பநாட்டுக்காயல், கோட்டயம் பகுதிக்கு நேராக அமைந்த வைப்பாறு ஆகியவற்றின் தெற்கேயும் வடஇலங்கையையும் அடக்கியதாக இருந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார்.

சங்ககாலச் சோழர் நாணயங்களைக் கண்டுபிடித்து, 1986-ம் ஆண்டு, 'சங்ககாலச் சோழர் நாணயங்கள்' என்ற நூலை வெளியிட்டார். சோழ மன்னரின் நாணயத்தின் முன்புறம் யானையும், செவ்வகக் குளத்தில் மீன்களும், மரத்தின் சின்னமும், பின்புறம் பாயும் புலி சின்னமும் இருந்தன. இந்த அடையாளங்கள் 2,300 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்டவை என்று கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.

கிருஷ்ணமூர்த்தி சங்ககாலத்தில் ஆண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட 'மாக்கோதை', 'குட்டுவன்கோதை' எனப் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் இரண்டை (1990, 1994) கரூர் அமராவதி ஆற்றிலும், திருச்சியிலும் கண்டெடுத்தார். கிரேக்கத்தின் திரேஸ், தெசலி, கீரிட் பகுதியில் உருவாக்கிய நாணயங்களை, தமிழகத்தில் கண்டெடுத்து, பண்டைத் தமிழகம் கிரேக்கர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்ததை சான்றுகளுடன் நிரூபித்தார். கிரேக்க நாணயம் டைகிரிஸ் நதிக்கரையில் இருந்த சௌயூசிட் வம்சத்து அரசரின் காலத்தது என்று வரையறுத்து அதில் கிரேக்கத் தெய்வங்களையும் அடையாளம் கண்டு விளக்கினார். கொழும்பு அருங்காட்சியகத்தில் கிடைத்த 40 நாணயங்களின் மூலம் அவர் கண்டறிந்த சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்களின் காலம் உறுதிப்படுத்தப்பட்டது.

நாணயவியல் ஆய்வுக்கழகப் பணிகள்

தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் சார்பில் போபால் அஜய் மித்ர சாஸ்திரி, மைசூர் கே.ஜி. கிருஷ்ணன், நாசிக் பரமேஸ்வரிலால் குப்தா, கல்கத்தா லல்லஞ்சி கோபால், லஹரி, மைசூர் ஏ.வி. நரசிம்ம மூர்த்தி, ஆந்திரா ஐ.கே. சர்மா போன்ற தேசிய அளவில் புகழ் பெற்ற நாணயவியல் அறிஞர்களின் தலைமையில் மாநாடுகளை நடத்தி, அவற்றில் பண்டத் தமிழக வரலாற்றை நாணயவியல் தரவுகள் கொண்டு திருத்தியெழுத வேண்டியதன் அவசியத்தைப் பேசினார். சர்வதேச நாணயவியல் மாநாடுகளிலும் கலந்து கொண்டு பல ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார். பீட்டர் பெர்கஸ், மேக்டோவல், பொப்வராய்ச்சி போன்ற உலக அறிஞர்களையும் மாநாடுகளில் பங்கேற்கச் செய்தார். இம்மாநாடுகள் சங்ககாலத்திற்கான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு பண்டை தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதற்குத் துணை செய்தன. இரா. கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுமுடிவுகள் தமிழுக்கு செம்மொழித் தகுதி ஏற்புக்கான ஓர் காரணமாக அமைந்தன. இரா கிருஷ்ணமூர்த்தி 'சங்க கால நாணயவியலின் தந்தை' என சர்வதேச நாணயவியல் அறிஞர் நரசிம்ம மூர்த்தியால் சிறப்பிக்கப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தி 1991-ல் தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தை நிறுவினார். தமிழகத்தில் கிடைத்த சில சீன நாணயங்களியும் ஆவணப்படுத்தினார். 2004-ல் கொழும்பு அருங்காட்சியகத்தில் கிடைத்த 40 நாணயங்களைப் படமெடுத்து ஆவணப்படுத்தினார். தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தில் புகழ்பெற்ற நாணயவியலாளர் பி.எல்.குப்தாவின் பெயரில் நாணயவியல் துறையின் சிறந்த பங்களிப்புக்கான விருதை ஏற்படுத்தி அதற்கான நிதியை அளித்தார்.

எழுத்து

கிருஷ்ணமூர்த்தி 1978-2014 காலகட்டத்தில் வட்டெழுத்து பற்றி இரண்டு (சேரநாட்டு வட்டெழுத்து, பிற்கால வட்டெழுத்து) நூல்களும், சங்ககாலச் சோழர் பாண்டியர் பற்றி மூன்றும், சேர சோழர் பற்றி இரண்டும், மலையமான் பற்றி ஒன்றும், கொங்குப் பகுதி பற்றி ஒன்றும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒன்றும் ஆக ஒன்பது தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். 1997 - 2016 காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பல்லவர்கால நாணயம், சங்ககால நாணயம், கிரேக்கர் ரோமானியர் நாணயம் பற்றியும் கொழும்பு தேசிய நூலகம் பற்றியும் தமிழகத்தில் கிடைத்த அயலார்களின் பழைய நாணயங்கள் பற்றியும் பத்து நூlகள் எழுதினார். அச்சான ஆய்வுக்கட்டுரைகள் 46. 'சங்கால நாணயங்களில் பிராமி செல்வாக்கு', 'களப்பிரர் நாணயங்கள்', 'மகேந்திரவர்மனின் நாணயம்,' 'கரூர் நாணயத்தில் தாய் தெய்வக் குறியீடு', 'அதியமானின் தங்க நாணயம்', 'கரூரில் பினீசியர் நாணயம்' -அவற்றுள் சில.

கணினித்தமிழ்

இரா. கிருஷ்ணமூர்த்தி கணினி மூலம் அச்சு கோர்க்கும் முறை உருவானபோது தினமலர் நாளேட்டிற்காக தனியாக ஒரு மென்பொருளை உருவாக்க எண்ணி மாடுலர் சிஸ்டம்' என்ற நிறுவனத்தின் டாக்டர் கூப்பர், டாக்டர் ஜோஷி ஆகியோர் ஒத்துழைப்புடன் 'ஶ்ரீலிபி' என்ற மென்பொருளை உருவாக்கினார். முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தார். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே பயன்படுத்தினார். அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் அப்போது ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறியிருக்கவில்லை. இரா. கிருஷ்ணமூர்த்தி இத்துறையின் முன்னோடியாகச் செயல்பட்டார்.

கல்வி,சமூகப் பணிகள்/நிதிக்கொடைகள்

இரா. கிருஷ்ணமூர்த்தி பல கல்வி, சமூகப்பணிகளுக்காக நிதிக்கொடைகள் அளித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொடர்பியல் துறைக்கு தமது சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்தார். பின், இந்த கட்டிடம் விரிவாக்கப்பட்டபோது அதற்கு, 50 சதவீதம் நிதியை வழங்கினார். அதற்கு ‘ஆர்.கே. மீடியா பிளாக்’ என்று பெயர் சூட்டப்பட்டது. கல்வி நிறுவனங்கள், ஏழை மாணவ மாணவியர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் உயர பொருளுதவிகள் செய்தார். கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர்பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பங்கள் சிலவற்றை, காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் என்ற கிராமத்தில் தமிழக அரசு. குடியேற்றியபோது அங்கு படிப்பகம் துவங்குவதற்கான பொருளுதவி செய்தார்.

இரா. கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய கலை மற்றும் கலாசார மரபு அறக்கட்டளை (INTACH- Indian National Trust for Art and Cultural Heritage) சென்னையில் நடத்திய இந்திய நாணவியலுக்கான பயிற்சிப்பட்டறைக்கு தாளாளர்களில் ஒருவராக இருந்து நிதியளித்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், நாணயம் சேகரிப்பவர்கள், நாணயவியல் ஆர்வலர்களுக்கான இப்பட்டறையில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பி.என்.முகர்ஜி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பி.டி. சட்டோபாத்யாய போன்ற இந்தியாவின் சிறந்த நாணயவியல் அறிஞர்கள் பயிற்சி வகுப்புகள் எடுத்தனர். 2013-2015 ஆண்டுகளில் மரபு குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆவணப்படுத்தும் நிகழ்ச்சிகளை INTACH-ன் சார்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோயில் ஆகிய ஊர்களில் நடத்தினார்

கணிணித்தமிழ்

தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியும் மும்பையில் இருந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே பயன்படுத்தினார் அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறியிருக்கவில்லை.

தொல்காப்பியர் விருது madrasmusings

விருதுகள், பரிசுகள்

  • தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூலுக்கான பரிசு (1988)-‘சங்ககாலச் சோழர் நாணயங்கள்’ நூலுக்காக
  • சிறந்த வரலாற்று ஆய்வு நூல், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் (1988)-பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்’ நூலுக்காக
  • சி.எச்.பிடுல்ப் விருது (C.H. Biddulph award)இந்திய நாணயவியல் சங்க மாநாடு தர்மசாலா (டிசம்பர் 1991)
  • ‘டி.தேசிகாச்சாரி’ விருது . இந்திய நாணயவியல் சங்கம் எர்ணாகுளம் கருத்தரங்கு ( 1995)
  • Fellow of Royal Numismatic Society (கௌரவ உறுப்பினர்)-ராயல் நாணயவியல் கழகம், லண்டன்(1997)
  • கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆ இணைந்து, ஜூலை 20, 1998-ல், ஈரோட்டில் பாராட்டு விழா நடத்தின
  • சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கம் பாராட்டு விழா நடத்தியது.
  • ‘கபிலவாணர் விருது’- திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் (1998)
  • நாணயவியல் ஆய்வுச்செம்மல் விருது -திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம்(1999)
  • யுகாதி புரஸ்கார் –2000 மெட்ராஸ் தெலுங்கு அகாடமி இதழியல் தொண்டுக்காக (2000)
  • நாணயவியல் பேரறிஞர் பட்டம்-. செண்பகம் தமிழ் அரங்கு. ஶ்ரீரங்கம் (2001)
  • 2005-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது
  • கணித்தமிழ் சங்கம் கணித்தமிழ் விருது (2005)
  • மும்பை பல்கலைக் கழக வரலாற்று துறை, முதுகலை பாடத்திட்டத்தில் 2013-ல் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘சங்க கால தமிழ் நாணயங்கள்’ என்ற ஆங்கில நூலை பார்வை நூலாக சேர்த்தது.
  • 2012-13 க்கான மத்திய அரசின் தொல்காப்பியர் விருது (2015)
  • ‘தமிழ்நாடு வரலாற்றியல் அறிஞர்’-தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை (2018)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது- இந்திய நாணயவியல் கழகம்,

மறைவு

இரா.கிருஷ்ணமூர்த்தி மார்ச் 4, 2021 அன்று காலமானார்.

இரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து, 'சங்ககால நாணயவியலின் தந்தை' என்ற தலைப்பில், வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்.

மதிப்பீடு

இரா. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த நாணயவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்களைக் கண்டறிந்து அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் சின்னங்களையும் ஆய்ந்து சங்ககாலம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக நிறுவினார். சங்க காலம் வளர்ச்சியடைந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மையை அவரது ஆய்வுகள் புலப்படுத்தின. பண்டைத் தமிழகம் கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்தததையும் அவரது ஆய்வுகள் உறுதிப்படுத்தின. தமிழ் மொழியின் தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் வரலாற்று ஆதாரங்களைக் கண்டடைந்ததில் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளுடன் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஒப்பு நோக்கத்தக்கது. தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக, தென்னிந்திய நாணயவியல் கழகங்களை நிறுவி, பல மாநாடுகளை ஒருங்கிணைத்தது இந்திய நாணயவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

இதழியலாளராக எழுத்துச் சீர்மை மற்றும் கணினி எழுத்துருக்களை தினமலரில் நடைமுறைப்படுத்திய முன்னோடி. கல்வி, ஆய்வுப் பணிகளுக்கு அவர் அளித்த நிதிக்கொடைகளும் முக்கியமானவை.

நூல்கள்

  • தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – 1978
  • சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து – 1982
  • பிற்காலத் தமிழ் வட்டெழுத்து – 1985
  • சங்ககாலச் சோழர் நாணயங்கள் – 1986
  • பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் – 1987
  • சங்ககால மலையமான் நாணயங்கள் – 1990
  • சங்ககாலச் சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு – சில வரலாற்றுச் செய்திகள் – 2005
  • சங்ககாலப் பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு – 2010
  • சங்ககாலக் கொங்கு நாணயங்கள் – 2011
  • கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட செழிய, செழியன் நாணயங்கள் – 2014
  • SANGAM AGE TAMIL COINS -– 1997
  • NON - ROMAN ANCIENT FOREIGN COINS -– 2000
  • THE PALLAVA COINS –- 2001
  • A CATALOGUE OF THE SANGAM AGE PANDYA AND CHOLA COINS IN NATIONAL MUSEUM COLOMBO, SRILANKA -– 2005
  • LATE ROMAN COPPER COINS FROM SOUTH INDIA –- 2007
  • ANCIENT GREEK AND PHOENICIAN COINS FROM KARUR –- 2009
  • CHINESE COINS IN TAMILNADU -– 2009
  • DATING OF SANGAM AGE: IMPORTANT NUMISMATIC FINDINGS -– 2010
  • SANGAM AGE TAMIL COINS AND ANCIENT FORIEGN COINS FOUND IN TAMILNADU -–- 2016
ஆய்வுக்கட்டுரைகள்
  • 'Sangam Period Pandya Coins with Tamil - Brahmi Legends' - Journal of the Numismatic Society of India (JNSI), 47, 1985, pp 45–47.
  • 'Kalabra Coin with a Legend,' JNSI, 1986, p. 48.
  • 'Sangam Period Chera Coins,' JNSI, 1987, pp. 36–38.
  • 'Some Unpublished Silver Punch - Marked Coins of the Pandyas,' JNSI, 1988, pp. 25–27.
  • 'Coins of the Pallava king Mahendravarman I,' JNSI, 50, 1988, pp. 33–34.
  • 'Some Unpublished and Rare Coins of the Pallavas,' JNSI, 1988, pp. 35–36.
  • 'Pallava Coin with Lion Symbol,' JNSI, 1989, pp. 90–92.
  • 'Sangam Period Silver Portrait Coin of Mākkotai,' paper read at the Conference of Oriental Numismatic Society and Indian Coin Society, Nagpur, 1990.
  • Coins Of The Sangam Age, Dravidian Encyclopaedia, The International School of Dravidian Linguistics, Thiruvananthapuram, 1990, Vol.I, pp. 167–170.
  • 'Some New Finds of Sangam Period Chera Coins,' JNSI, 1990, pp. 3–6.
  • 'A Rare Sangam Period Chola Coin,' Studies in South Indian Coins (SINS), I, 1991, pp. 31–32.
  • 'Oblong Coin with a 'Mother Goddess Symbol' from Karur, Tamilnadu,' JNSI, 1991. pp. 59–61.
  • 'Two More Pallava Coins with Legends,' JNSI, 1991, pp. 62 – 63.
  • 'Mākkotai Coins,' Studies in South Indian Coins, II, 1992, pp. 19–28.
  • 'Seleucid Coins from Karur,' Studies in South Indian Coins, III, 1993, pp. 19–28.
  • 'Coins from Phoenicia Found at Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, IV, 1994, pp. 19–27.
  • 'Sangam Age Chera coin with Legend Kuttuvan Kotai' in 'The Hindu,' 22 May, 1994 (Madras edition)
  • 'Imitation Roman Gold Coins from Tirukoilur hoard', Ex-Moneta, Essays on Numismatics, History & Archaeology in honour of Dr. D.W.MacDowell, Indian Institute of Research in Numismatic Studies, Nasik, 1995, pp. 131–136.
  • 'Coins from Greek Islands, Rhodes and Crete found at Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1995, pp. 29–36.
  • 'Copper punch-marked coins from Karur, Tamilnadu,' 1996.
  • 'A Roman Coin Die from Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1996, pp. 43–48.
  • Coin Circulation in Ancient Tamil Region C. 400 B.C - C.600 A.D. Paper presented at the Annual Conference of the Numismatic Society of India, 1996.
  • A Roman Coin bronze die from Karur, Tamilnadu, India. Paper presented at the XII, International Numismatischer, Kongress, Berlin, 1997. (Published in Proceedings, Vol.I, p. 552. Published in Berlin in 2000)
  • 'A Gold Ring of Athiaman,' Studies in South Indian Coins, 1997, pp. 41–44.
  • 'A Note on Counterstruck Silver Coinof Makkōtai,' Studies in South Indian Coins, 1998, pp. 35–39.
  • 'Aksumite Coins of Ethiopia from Karur, Tamilnadu,' Studies in South Indian Coins, 1998 - pp. 58–64.
  • 'A Coin of Priest - Kings of Judaea from Karur,' Studies in South Indian Coins, 1999, pp. 23–29.
  • 'Hellinistic period coins from Karur - A Review,' Studies in South Indian Coins, 2000 - pp. 7–21.
  • Three Unknown Cola Coins of the Sangam Period, Narasimhā Priyā - Prof.A.V.N.Murthy Felicitation Volume, 2000.
  • 'Some Unknown Ancient Greek Coins from Karur,' Studies in South Indian Coins, 2001, pp. 53–56.
  • Lion Slayer Motif on an Inscribed Gold Ring from Karur, Studies in South Indian Coins, 2003, pp. 17–19.
  • 'Some Roman Republican denarii from Karur in South India,' Paper presented at XIII, International De Numismatica, Madrid, 2003, Spain 15th Sept.
  • Some Fifth Century A.D. Roman Gold Coins and their Imitations from Southern Tamilnadu, India, Paper presented at Colloquium organised by Instituto Italiano di Numismatica, Rome, 2004, 17th Sept.
  • Late Roman Copper Coins and Imitations of c 4th century A.D. in Sri Lanka, Paper read at the International Seminar on 'Tamilnadu and Sri Lanka: New Evidence on Maritime and Inland Trade' organised by The Tamilnadu Numismatic Society, Chennai and Centre de Recherhe Ernest Babelon, Paris on 2nd December 2004 at Chennai.
  • 'Sangam Age Pandya Coins with Legend Peruvaluthi in the National Museum, Colombo,' Studies in South Indian Coins, 2005, pp. 58–63.
  • 'A Satavahana Lead Coin with Bow and Arrow Symbol,' Studies in South Indian Coins, 2005, pp. 35–38. (Co-Author Mohd.Safiullah)
  • 'Sangam Age Pandya and Chola Coins from National Museum, Colombo,' Studies in SouthIndian Coins, 2005, pp. 43–52. (Co-Author Senarath Wickramasinghe)
  • 'Two Coins of King Agrippa - I of Judaea from Karur,' Studies in South Indian Coins, Vol.XVI, 2006, pp. 21 –23.
  • 'Roman Coins associated with Christian Faith Found at Karur and Madurai,' AIRAVATI, Felicitation Volume in honour of Iravatham Mahadevan, Chennai -82, 2008, pp. 67–75.
  • 'Sangam Age Chera Silver Coin with a Portrait and Roman Type Helmet,' Studies in South Indian Coins, IC, Vol. XVIII, 2008, pp. 43–45
  • 'Ancient Chera Coins from Banavasi,' Studies in South Indian Coins, Vol.XIX, 2009, pp. 40–47.
  • 'Another Pallava Coin with Legible Legend Māhameghah,' Studies in South Indian Coins, Vol.XIX, 2009, pp. 59.
  • 'An Imitation Roman Coin Pendant from Banavasi,' Studies in South Indian Coins, Vol.XX, 2010, pp. 40–43.
  • 'A Study of Legends on Two Early Chera Coins,' Studies in South Indian Coins, Vol.XX, 2010, pp. 70–73.
  • 'A Note on Sangam Age Chera Coins from Pattanam in Kerala,' Studies in South Indian Coins, Vol.XXI, 2011, pp. 32–36.
  • Discovery of yet Another Rare Sangam Age Pandya Coin, Studies in South Indian Coins, 2013, vol. XXIII, p. 29, 30

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page