இன்பச்செல்வி விநாயகமூர்த்தி
இன்பச்செல்வி விநாயகமூர்த்தி (பிறப்பு: மே 14, 1978) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
இன்பச்செல்வி விநாயகமூர்த்தி இலங்கை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னீர்ச்செல்வம், தெய்வானை இணையருக்கு மே 14, 1978-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் விவேகானந்தா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை திருக்கோவில் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை திருக்கோவில் இராமகிருஷ்ண தேசியப் பாடசாலையிலும் கற்றார். வறுமை காரணமாகத் தனது கல்வியை இடைநிறுத்தினார். இதழியலில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இவர் காப்புறுதி விற்பனை பிரதிநிதியாகவும் ஊடகவியலாளராகவும் உள்ளார்.
அமைப்புப் பணிகள்
இன்பச்செல்வி அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் 'அக்னி' சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் நிறுவனர். தமிழ் சமூக உணர்வு சார்ந்த சமூக செயற்பாட்டாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
இன்பச்செல்வி விநாயகமூர்த்தி 2014 முதல் இணையத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி ஆகிய நாளிதழ்களில் வெளிவந்தன. கருங்கொட்டித்தீவு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
விருதுகள்
- 2018-ல் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஊடகவியலாளர்க்கான விருதை சுற்றுலாத்துறை அமைச்சகம் வழங்கியது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Feb-2024, 23:54:15 IST