under review

இடாகினி பேய்

From Tamil Wiki
இடாகினி பேய் (நன்றி: tamilarthadam)

இடாகினி பேய் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வழிபடப்படும் நாட்டார் தெய்வம். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்களைத் தின்னும் பேய். சிலப்பதிகாரத்தில் இடாகினி பற்றி குறிப்பு உள்ளது.

சிலப்பதிகாரம்

"சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்றாங்கு
இடுபிணந் தின்னும் இடாகினிப் பேய்வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை’’

தொன்மக்கதை

மாலதி என்ற பார்ப்பனப் பெண் தன் கணவனின் முதல் மனைவியின் குழந்தைக்குப் பசுவின் பாலைக் கொடுத்த போது பால் விக்கியதால் அவள் கையிலேயே குழந்தை இறந்தது. பல கோவில்களுக்குச் சென்று குழந்தையின் உயிரை மீட்டெடுக்க வேண்டினாள். சாத்தன் கோயிலில் வேண்டிக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த சுடுகாட்டிலிருந்த இடாகினிப் பேய் அழகான இளம்பெண்ணாக வந்து “முற்பிறவியில் புண்ணியம் புரியாதவர்க்குத் தெய்வம் வரங்கொடுப்பதில்லை” என்று கூறியவாறு கையிலிருந்த குழந்தையை வாங்கி விழுங்கினாள். சாத்தன் தோன்றி வழியில் அவள் திரும்பிச் செல்லும் போது அக்குழந்தையைக் காண்பாள் என வரம் கொடுத்தது. அது போலவே அவள் ஒரு குழந்தையைக் கண்டெடுத்துக் கொண்டு போய் தன் மாற்றாள் கையில் கொடுத்தாள்.

பாசண்டச் சாத்தான் எனும் தெய்வம் இடாகினியிடமிருந்து குழந்தையைப் பறித்து அதற்கு உயிருண்டாக்கிக் கொடுத்ததாய் சிலம்பு கூறுகிறது.

வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் அருகே மாரங்கியூர் என்ற இடத்தில் இடாகினி பேய்க்கான வழிபாட்டுக் கல் உள்ளது. இதன் அருகிலேயே பல்லவர் கால கொற்றவையும் உள்ளது.

இடாகினி பேயை உள்ளூர் மக்கள் 'காளி ஆத்தா' என்றும் அழைப்பர். வேண்டியதைக் கொடுப்பவள் என்றும், கால்நடைகளின் காய்ச்சலைச் சரிசெய்பவள் என்றும் நம்பிக்கை உள்ளது. சிலம்பு கூறும், பாசாண்ட சாத்தன் இன்று அய்யனாராகவும், கொற்றவை துர்க்கையாகவும் மாறியிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

உசாத்துணை


✅Finalised Page