under review

ஆத்ம சூக்தம்

From Tamil Wiki

ஆத்ம சூக்தம் : வைணவத்தின் வைகானஸ ஆகம மரபில் இறைவனை தன்னுள் நிறைத்துக்கொள்ளும் பொருட்டு செய்யப்படும் சடங்கு. இதில் உச்சரிக்கப்படும் மந்திரம் ரிக்வேதத்திலும் கிருஷ்ண யஜூர்வேதத்திலும் உள்ள ஒன்பது சூக்தங்கள்.

மரபு

வைணவ மதத்தின் வைகானஸ ஆகம மரபில் பூசகர் தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்து, அதன்பின் விஷ்ணுவை தன்னுள் நிறைப்பதற்காகச் செய்யும் பிரார்த்தனை மற்றும் மந்திரம் ஆத்மசூக்தம் எனப்படுகிறது

ஆதாரம்

வைகானஸ கல்ப சூத்திரம் 'வேதச்சடங்குகள் அனைத்துமே விஷ்ணு வழிபாட்டின் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமே' என்று வரையறை செய்கிறது. விஷ்ணுவழிபாட்டைச் செய்பவருக்கு உரிய முதன்மைச் சடங்காக ஆத்மசூக்தம் என்னும் வேதச்சடங்கைப் பரிந்துரைக்கிறது. வேத மந்திரம் இச்சடங்கில் பயன்படுத்தப்பட்டாலும் வைகானஸத்தின் இச்சடங்கு தொன்மையான தாந்த்ரீக மரபில் இருந்து உருவானது என்று கூறப்படுகிறது.

சடங்கு

வழிபடு தெய்வத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல், தன்னை தெய்வமாக ஆக்கிக்கொள்ளுதல் பழங்குடி வழிபாடுகளிலும் பின்னர் தாந்த்ரீக வழிபாடுகளிலும் உள்ள வழிமுறை. வைகானஸ கல்ப சூத்திரம் அதை வேதச்சடங்காக வரையறை செய்கிறது.

  • தெய்வத்தை நேருக்குநேர் சந்தித்தல் (தஸ்யைவஹம் )
  • தன்னை தெய்வமாக உணர்தல் (தவேவாஹம்)
  • தெய்வம் தானாக ஆதல் ( த்வமேவாஹம் )

வைகானஸ நூல்கள் இச்சடங்கை ஆட்கொள்ளல் (ஆவாகனம்) என்கின்றன. அதன் வழிமுறைகள் இவை

  • துணைத்தெய்வங்களை வழிபடுதல் (ஆவரண-பூஜை )
  • வாயிற்காவலர்களை வழிபடுதல் (துவாரபால-பூஜை)

ஆகிய சடங்குகளுக்குப் பின் பூசாரி திரையிட்டுக்கொண்டோ, கதவை மூடிக்கொண்டோ மந்திர உச்சாடனம் வழியாக தன்னை தெய்வத்தின் வடிவமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். தன் உடலை பிரபஞ்ச உடலாக அவன் உணரும்போது பிரபஞ்சரூபனாகிய விஷ்ணு அவன் உடலாக ஆகிறார். அதற்கு வேதத்தில் உள்ள ஒரு பாடல் (சூக்தம்) உச்சரிக்கப்படுகிறது. அதுவே ஆத்மசூக்தச் சடங்கு எனப்படுகிறது. இவ்வாறு வழிபடும் பூசாரியில் தெய்வம் தன்னை நிகழ்த்திக்கொள்ளுதல், பின்னர் அவரால் சிலையில் நிறுத்தப்படுதல் நியாஸம் எனப்படுகிறது.

வைகானஸ மரபின் பிருகு சம்ஹிதையின் கூற்றுப்படி கோயிலில் உள்ள சிலை இரண்டு நிலைகளில் உள்ளது. அது கல் அல்லது உலோகம் அல்லது பிற பொருளில் வடிக்கப்பட்ட ஒரு சிலை (விக்ரகம்). பூசாரி தெய்வத்தை நிகழ்த்தி தன்னுள் அதை நிறைத்துக்கொண்டு அச்சிலையில் அதை ஏற்றுகிறான். அதன்பின் அச்சிலை தெய்வ வடிவம் (பேரம்) ஆக மாறிவிடுகிறது.

ஆத்மசூக்தம் என்னும் சடங்கின் வழியாக பூசகர் விஷ்ணுவை அவருடைய நிஷ்கல (எந்த அடையாளமும் அற்ற) வடிவில் இருந்து சகல (அடையாளம் கொண்ட) வடிவுக்கு மாற்றிக்கொள்கிறார். அந்த உருவையே அவர் பக்தர்களுக்காக வழிபடுகிறார்.

பிரம்ம நியாஸம்

பிரம்ம நியாஸம் என்பது ஒரு பூசகர் பிரம்மத்தை விஷ்ணுவாக ஆக்கி தன்னுள் நிறைத்து சிலையில் ஏற்றும் செயல். இது பிரம்ம ஐக்யத்வம் (பிரம்மத்துடன் ஒன்றுதல்) எனப்படும். இது மூன்று நிலைகள் கொண்டது

  • அங்க -நியாஸம்: பூசகரின் உடலின் இதயம், தலை, முடி, விழிகள் போன்ற பல்வேறு பகுதிகளில் விஷ்ணுவின் இருப்பை உணர்வது
  • பீஜ -நியாஸம்: மந்திரத்தில் முழுமுதல் இருப்பை உணர்வது. ஓங்காரம் இதில் முதன்மையானது
  • கர நியாஸம்: தன் கைகளிலும் விரல்களிலும் தெய்வங்களை உணர்வது. சைகைகள் வழியாக அதை நிகழ்த்துவது.

பிராணப்பிரதிஷ்டை

விஷ்ணு என்றால் வியாபித்திருப்பது, விண்ணுருக்கொண்டது என்று பொருள். எங்கும் உள்ள தீ அரணிக்கட்டையை கடைந்தால் அந்த பஞ்சில் தோன்றுவதுபோல, அப்போது பஞ்சே நெருப்பாக ஆவதுபோல, ஆத்மசூக்தம் வழியாக பிரபஞ்சத்தில் உள்ள விஷ்ணு அந்த பூசகனில் தோன்றி, பூசகனாகவே ஆகிறார். பஞ்சில் இருந்து வேள்விக்குண்டங்களுக்கு தீ பற்றவைப்பது போல அந்தப் பூசாரியில் இருந்து தெய்வ உருவங்களுக்கு விஷ்ணு சென்றமைகிறார். இதை கிரியாதிகாரம் என வைகானஸ மரபு சொல்கிறது. ( ஶ்ரீனிவாச மகியின் உவமை)

கிரியாதிகாரம் கொண்ட பூசகர் தன் இழுக்கும் மூச்சு ,விடும் மூச்சு (உச்ஸ்வாச, நிஷ்ஸ்வாச) வழியாக தன் தெய்வீகத்தன்மையை (தேஜஸ்) சிலை மேல் ஏற்றி அதை தெய்வமாக ஆக்குகிறார். இது பிராணப்பிரதிஷ்டை எனப்படுகிறது. வைகானஸ மரபில் இது ஒவ்வொரு நாளும் செய்யப்படவேண்டும்.

மந்திரம்

ஸ்ரீ வைகானாச மந்திர பிரஸ்னா என்னும் நூலின்படி ஆத்மசூக்தம் திரிஷ்டுப்பு சந்தத்தில் உள்ள ஒன்பது வேத சூக்தங்களின் தொகுப்பு. இந்த மந்திரம் ஆத்ம என்னும் சொல்லுடன் தொடங்குவதனால் இந்தப் பெயர் கொண்டுள்ளது. கிருஷ்ணயஜுர் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மூலம்: சம்ஸ்கிருதம்

५.१.१२०. १ आत्मात्मा परमान्तरात्मा मह्य्-अन्तरात्मा यश् चातिरात्मा सतनो | ऽन्तरात्मा व्यावेष्टि विश् (ग्)ं सकलं बिभर्ति यो व्यक्त-पुण्यस् स-तुनः प्रधानः||

५.१.१२०.२ प्राणः प्रणीतिस् स उदान आदिर् वर-दो वराहो व्यानश् च मे स्यात् | तपसाञ् च मूर्तिः कपिलो मुनीन्द्रो यश् चापानो हयशीर्षो नः||

५.१.१२०.३ यत् सर्वम् अश्नात्य् अजरस् समग्र(ग्)ं श्रियम् ऊर्ज-युक्तां स तु मे समानः||

५.१.१२०.४ बलम् आसुरं यत् सततं निहन्ता ब्रह्मा बुद्धिर् मे गोप ईश्वरः||

५.१.१२०.५ सविता च वीर्यम् इन्दुश् च धातु-रस-भूत-भूता भूतास् स-भूताः||

५.१.१२०.६ द्यौर् मे अस्तु मूर्धोदर-नाभो वा भूमिर् यथाङ्घ्रिर्ववृधे ऽहम् ईशः||

५.१.१२०.७ अस्थीनि मे स्युर् अथ पर्वताख्या भुजगाश् च केशा दिवि ये चरन्तः||

५.१.१२०.८ द्वौ नेत्र-रूपौ विथु पृश्च्नि [?] मुख्यौ रुधिरञ् च सार(ग्)ं सकलञ् च तोयम् ||

५.१.१२०.९ स्नायवो मे आसन्ना द्यौर् भृगुर् मे हृदयम् अस्तु | सर्वे अन्ये मुनयो ऽङ्ग-भूता वेदा मे आस्यं जिह्वा मे सरस्वती ||

५.१.१२०.१० दन्ता मरुत उपजिह्वा उपश्रुतिः ||

५.१.१२०.११ वृषणौ मित्रा-वरुणाव् उपस्थः प्रजा-पतिर् आन्त्रा मे वेदाश् श्रुति-स्मृती मेदाधारणे ||

५.१.१२०.१२ स्वेदम् मे वर्षं मूत्र कोश(ग्)ं समुद्रं पुरीषं काञ्चनम् ||

५.१.१२०.१३ सावित्री गायत्री मर्यादा वेदि-हृत्-पुण्डरीके विमले प्रविष्टस् | सकलस् स-लक्ष्मीस् स-विभूतिकाङ्गो यत् सर्वं पुण्यं मय्य् अधिष्ठानम् अस्तु ||

५.१.१२०.१४ सर्वेषां देवानाम् आत्मकस् सर्वेषां | मुनीनाम् आत्मकस् तपो-मूर्तिर् इह पुण्य-मूर्तिर् आसन् ||

மூலம் (தமிழ்)

ஆத்மாத்மா பரமாந்தராத்ம மஹ்ய்-அந்தராத்மா யஷ் சதிரத்ம சதனோ

யோ வ்யக்த்-புண்யஸ்ஸ-துன: பிரத

ப்ராண: ப்ரணீதிஸ்ஸ உதான் ஆதிர்வர்-தோ வராஹோ

வ்யாநசத் கபிலோ முனீந்த்ரோ யஷ் சாபானோ ஹயஷீர்ஷோ ந:

யத் சர்வம் அஷ்னாத்ய் அஜரஸ் சமக்ர(க்)ம் ஸ்ரியம் ஊர்ஜ்-யுக்தாம்

பலம் ஆசுரம் யத் சதம் நிஹந்த ப்ரஹ்ம புத்திர்மே கோப

சவிதா ச வீர்யம் இந்துச் ச தாது-ரஸ்-பூத-பூத பூத-பூதாஸ்

தயவுர்மே அஸ்து மூர்தோதர்-நாபோ வா பூமி:

அஸ்தீனி மே ஸ்யுர் அத பர்வதாக்யா புஜகாஷ் கேஷா திவி யே சரன்

த்வௌ நேத்ர-ரூபவ் வித்து பௌர்ணமி முக்யௌ ருதிர்சஞ்சல் ஸ்ரயம் '

ஸ்நாயவோ மே ஆஸன்னா த்யௌர் ப்ருகுர்மே ஹர்தயம் அஸ்து

ஸர்வே அந்யே முனையோ த்யங்-பூதா வேதா மே ஆஸ்யம் ஜிஹ்வா மே ஸரஸ்வதி

தந்த மருத, உபஜிஹ்வா உபஸ்ருதி, ௧௧ வ்ருஷணௌ மித்ரா-வருணாவ் உபஸ்

ப்ரஜாபதிர் ஆந்த்ரா மேதா தாரணே

ஸ்வேதம் மே வர்ஷம் மூத்ர கோஷ்(க்)ம் ஸமுத்ரம் புரீஷம் காஞ்சம்

சாவித்ரி காயத்ரீ மர்யாதா வேதி-ஹத்- புண்டரீகே விமலே ப்ரவிஸீ'

சகலஸ்ஸ-லக்ஷ்மீஸ்-விபூதிகாங்கோ யத் சர்வம் புண்யம் மய்ய அதிஷ்டானம் அஸ்து

ஸர்வேஷாம் தேவநாம் ஆத்மகஸ் சர்வேஷாம்

முனீநாம் ஆத்மகஸ் தபோ-மூர்த்திர் இஹ புண்ய-மூர்திர் ஆசன:'''''

பொருள்

சுயத்தின் சுயமானது, முழுமுதல் சுயம், ஆழ்ந்த சுயம், பூமியின் சுயம், முதற் சுயம்

இவை எல்லாம் உண்மையில் நம் சுயமேயாகும்

அது பிரபஞ்சத்தில் பரவி அனைத்தையும் தாங்கி நிற்கிறது.

அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கையில் நம்மை ஆள்கிறது.

வெளிமூச்சு ( பிராணன்) எங்கள் வழிகாட்டி ( பிரணிதி )

மேல்மூச்சு ( உதானா ) ஆழத்திலுள்ள வரம் தரும் பன்றி ( வராஹா )

பரவும் மூச்சு ( வியானா ) பாதாளத்தில் வாழும் தவமுனிவர் கபிலர்.

கீழ்நோக்கிய மூச்சு ( அபானா ) குதிரைத் தலையுடைய ஹயக்ரீவர்.

என்னுடைய செரிமான மூச்சு ( சமான ) எல்லாவற்றையும் விழுங்கும் சக்தி

செழுமையின் தெய்வம் ( ஸ்ரீ ) கூட விழுங்கப்படுகிறது

என் வலிமை எல்லா நேரங்களிலும் தீய சக்திகளை வெல்கிறது

என் ஞானமே பிரம்மம், ஈஸ்வரன் என் காவலர்.

சாவித்திரி என் பாலியல் ஆற்றல்,

சந்திரன் என் உடலின் நீர் , என் உடலின் ஐந்து பருப்பொருட்கள்.

(பூதங்கள்: பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்)

வானம் என் தலை, பூமியின் நடுப்பகுதி என் வயிறு;

விரியும் பூமி என் கால்கள் நானே அனைத்தையும் ஆள்பவன்.

என் எலும்புகள் மலைகள். என் முடிகள் விண்ணில் நெளியும் நாகங்கள்

என் இரு கண்கள் அகன்ற பூமியும் உயர்ந்த வானமும்;

என் இரத்தம் பிரபஞ்சத்தின் நீர்

என் நரம்புகள் பூமியில் ஓடும் ஆறுகள், என் இதயம் பிருகு

என் உறுப்புகள் மற்ற முனிவர்கள்

என் வாய் வேதங்கள்.

என் சொல்லின் தெய்வமான சரஸ்வதி.

காற்றுகள் ( மருத்துக்கள் ) என் பற்கள்.

என் அண்ணாக்கு புனிதச்சொல்.

என் விரைகள் மித்ரனும் வருணனும்.

என் பாலுறுப்பு படைப்பவரான பிரஜாபதி;

என் உள்ளம் வேதப்பாடல்கள்

எனது அறிவு ( மேதா ) மற்றும் உறுதிப்பாடு ( தாரணை ) ஆகியவை சுருதிகளும் ஸ்மிருதிகளும்

என் வியர்வையே மழை, என் சிறுநீர்ப்பை கடல்; என் மலம் தங்கம்.

சாவித்ரியைப்போற்றும் என் காயத்ரி வேள்விச்சாலையும் பலிபீடமும்.

என் இதயத்தின் தூய தாமரைக்குள் விஷ்ணுவின் வியனுருவம் தோன்றுக!

செல்வத்தின் தெய்வத்துடன் ( ஸ்ரீ ) அவரது அனைத்து மகிமையுடனும் நுழைக!

என் தவத்தால் நிறையும் உடல் அவருக்கு ஓர் இடத்தை அளிக்கட்டும்.

எல்லா கடவுள்களின், அனைத்து முனிவர்களின் சாரத்தையும் என்னுள் நான் கொள்க!

என்னுள் துறவுகளின் தெய்வமும் ( தபோ-மூர்த்தி ) நன்மைகளின் தெய்வமும் ( புண்ய-மூர்த்தி ) அமைக !

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jun-2024, 08:45:32 IST