ஆத்திசூடி வெண்பா
ஆத்திசூடி வெண்பா (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டு), ஒரு நீதி நூல். ஔவையாரின்ஆத்திசூடி நீதிவாக்கியங்களைக் கதைகள் வாயிலாக விளக்கும் நூல். ஆத்திசூடி வெண்பாவை இயற்றியவர் இராமபாரதி.
வெளியீடு
ஆத்திசூடி வெண்பாவின் முதல் பதிப்பு, சென்னைக் கல்விச் சங்கத்தின் புலவர் புதுவை இராசகோபால முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1901-ல், இலங்கை தெல்லிப்பழை இ. முத்துக்குமாரசுவாமிக் குருக்களால் பரிசோதிக்கப்பட்டு பண்டிதர் வே. கனகசபாபதி ஐயர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், தெல்லிப்பழை இ. பாலசுப்பிரமணிய ஐயர் முதலியோர் எழுதிய கதைகளுடன் கொக்குவில் இ. சிவராமலிங்க ஐயரால், சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. மீண்டும் மதுரை புதுமண்டபம் புக் ஷாப் வி.என். ராகவக் கோனார், வித்வான் வீ. ஆறுமுகஞ்சேர்வை, மணி திருநாவுக்கரசு முதலியார் உள்ளிட்ட சிலரால் 1905, 1917, 1927 ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டது.
ஆசிரியர் குறிப்பு
ஆத்திசூடி வெண்பாவை இயற்றிய புலவர் இராமபாரதி. பார்த்தசாரதி என்ற பெயரும் இவருக்கு உள்ளதாக அறியப்படுகிறது. தொண்டை நாட்டில் பாகை என்னும் ஊரில் வாழ்ந்த கணபதி என்பவரின் மகனான ‘புன்னைவனநாதன்’ என்னும் வள்ளலைப் புகழ்ந்து இந்நூல் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும், ’புன்னை வனநாதா’ என்ற சொல் விளியாக இடம்பெற்றது. இராமபாரதி அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர இவரைப் பற்றிய பிற விவரங்கள் கிடைக்கவில்லை,
நூல் அமைப்பு
ஆத்திசூடி வெண்பாவின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம் பெற்றது. தொடர்ந்து அறஞ்செய விரும்பு என்று தொடங்கி ஒவ்வொரு நீதி வாக்கியங்களுக்கும் கபிலை கதை, சடபரதர் கதை எனப் பல புராண, இதிகாசக் கதைகள் இடம்பெற்றன. நூலின் இறுதியில் ‘வாழி வெண்பா’, சாத்துக்கவி வெண்பா ஆகியன அமைந்தன. பாடல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் இயற்றப்பெற்றன. இந்நூலில் மொத்தம் 110 பாடல்கள் உள்ளன.
பாடல் நடை
அறஞ்செய விரும்பு : கபிலை கதை
அருளார் கபிலை அறமே சயமென்று
இருளகல வேங்கைக்கு இயம்பும் - பெருமையினால்
மாவளரும் புன்னை வனநாதா மெய்த்துணையா
மேவியறஞ் செய்ய விரும்பு.
ஈவது விலக்கேல் : சுக்கிரன் கதை
மாவலியை மாலுக்கு மண்ணுதவா மல்தடுத்த
காவலினால் சுக்கிரனுங் கண்ணிழந்தான் - ஆவதனால்
நல்நீதி புன்னைவன நாதமகி பாவுலகத்
தில்ஈ வதுவிலக் கேல்.
தையல்சொற் கேளேல் : சித்திராங்கி கதை
மாதுசித்தி ராந்திசொல்லால் மைந்தனைக்கை கால்களைந்து
ஏதுபெற்றான் ஓர்மன்னன் இப்புவியில் - நீதிநெறி
மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
ஏதெனினுந் தையல்சொற்கே ளேல்.
பெரியாரைத் துணைக்கொள் : பிரகலாதன் கதை
தந்தை இரணியனைத் தள்ளியவன் மைந்தன்முன்னே
சிந்தையின்மா யோன்துணையே தேடியுய்ந்தான் - சந்ததமும்
நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
குட்பெரியா ரைத்துணைக் கொள்.
ஒன்னாரைத் தேறேல்
தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரும் அனைத்தென்று - எழுசொலைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல்
மதிப்பீடு
ஆத்திசூடி வெண்பா ஓர் அற நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆத்திசூடியின் நீதி வாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் கருத்துக்கேற்ற உதாரணக் கதைக் குறிப்புக்களும் இடம்பெற்றன. மானுடர்களுக்கு நீதி போதிக்கும் பிற்கால நீதி இலக்கிய நூல்களுள் ஒன்றாக ஆத்திசூடி வெண்பா நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Jun-2024, 20:48:49 IST