அழகர் சித்தர்
- அழகர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகர் (பெயர் பட்டியல்)
- சித்தர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தர் (பெயர் பட்டியல்)
அழகர் சித்தர் (19-ம் நூற்றாண்டு) புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஞானி. இவர் இங்கே உள்ள அழகு முத்து ஐயனார் ஆலயத்தின் அருகில் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு தனிக்கோவில் கிராம மக்களால் கட்டப்பட்டுள்ளது.
அமைவிடம்
புதுச்சேரியில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் ஆலயம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த ஆலயத்துக்கு செல்லலாம்.
வாழ்க்கைக் குறிப்பு
வாய்மொழிச்செய்திகளின்படி அழகர் சித்தர் என்று அறியப்படும் இவர் 1800 களை ஒட்டி தற்போதைய புதுச்சேரியை அடுத்த ஏம்பலம் கிராமத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் தென்னம்பாக்கத்தை அடைந்து இங்கே இருந்த கிராம தேவதையான ஐயனார் கோவிலுக்கு அருகில் இருந்த சோலையில் தங்கி தியானம் செய்தார். பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளுரை வழங்கியும், மருத்துவ உதவிகள் செய்தும், பூச்சி கடிகளுக்கு மந்திர வித்தை மூலம் சிகிச்சை அளித்தும் வாழ்ந்து வந்தார். இவர் காலம் 1800 முதல் 1840 வரை எனச் சொல்லப்படுகிறது.
சமாதி
கிராம தேவதையான ஐயனார் கோவிலுக்கு அருகில் இருந்த கிணற்றில் ஊர் மக்கள் முன்னிலையில் மாயமாய் மறைந்து ஜீவ சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த கிணற்றின் மேல் ஆலயம் எழுப்பி மக்கள் வழிபடுகின்றனர். கிணற்றின் மீதுள்ள சமாதிக்கு மேலே ஓலையினால் வேயப்பட்ட மேற் கூரை அமைத்து சமாதி ஆலயத்தை மூடி உள்ளார்கள். சமாதி உள்ள சன்னதிக்கு உள்ளே மட்டும் பெண்கள் செல்ல அனுமதி இல்லை.
விழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கள்கிழமை நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசுப்படும். 100 நாதஸ்வர கலைஞர்கள், 100 தவில் வித்வான்கள் ஒரே நேரத்தில் இசைக்கும் வழக்கம் உண்டு.
வழிபாடு
அழகர் சித்தர் கோவிலில் வேண்டுதலின் அடிப்படையில் சிமெண்டில் பொம்மைகள் செய்து அர்ப்பணித்தும் பராமரிப்பதும் வழக்கமாக உள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள சோலையில் சிற்பங்கள் வைக்கப்படுகின்றன. வருட பூஜையின்போது புது வர்ணம் பூசி வழிபாடு செய்கிறார்கள்.
பக்தர்கள் தமது பிரச்சனைகளை ஒரு காகிதத்தில் எழுதி அதற்கு நிவாரணம் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சித்தர் கையில் உள்ள கத்தியில் கட்டி வைப்பதும் வழக்கம்.
உசாத்துணை
- அழகர் சித்தர் பற்றி தி ஹிந்து
- Azhagar Siddhar and Azhagu Muthu Ayyanar Temple Thennampakkam Cuddalore
- அழகுசித்தர் ஆலயம் -சாந்திப்பிரியா கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-May-2026, 00:24:20 IST