under review

அருட்செல்வன்

From Tamil Wiki
அருட்செல்வன்

அருட்செல்வன் (பிறப்பு:ஜூன் 29, 1967) ஒரு சமூகப் போராட்டவாதி. அவர் ஒதுக்கப்பட்ட சமூகத்தினர், நகர்ப்புற ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதார உரிமைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றார். தற்போது மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பிறப்பு

அருட்செல்வன் ஜூன் 29, 1967-ல், ஈப்போ, பேராக் மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுப்பிரமணியம், தாயார் ருக்குமணி. இவருடன் பிறந்தவர்கள் எழிலரசி, முதியரசி, கலைச்செல்வன்.

தனிவாழ்க்கை

அருட்செல்வன் லெச்சுமி தேவி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு குழந்தைகள்-ல்லை. தற்போது காஜாங், சிலாங்கூரில் வசிக்கின்றார்.

கல்வி

அருட்செல்வன், தொடக்கக் கல்வியை ஈப்போ மெத்தடிஸ்ட் பள்ளியில் பயின்றார். 1991-ல் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அருட்செல்வன் இப்போது தொழிலாளர் கல்வியில் முதுகலைப் பட்டப்படிப்பை மலாயா பல்கலைக்கழகத்தில் தொடர்கின்றார்.

தொழில்

அருட்செல்வன், 1991 முதல் 1994 வரை குழந்தை தகவல் கற்றல் மற்றும் மேம்பாடு மையத்தில் நிர்வாகச் செயலாளராக வேலை செய்தார். பிறகு, 1995 முதல் 2006 ஆண்டு வரையில் SUARAM எனும் மலேசியாவின் முக்கியமான மனித உரிமைக் கழகத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தார். இப்போது மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணைத்தலைவராக இருக்கிறார்.

சேவைகள்

  • அருட்செல்வன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்றபோது சில நண்பர்களுடன் இணைந்து காஜாங், செமினி, பாங்கி ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தினார். 1987-ல் JKM எனும் மாணவர் நலக்குழுவை அமைத்தார். இது உலு லாங்காட் மற்றும் செபாங் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் ஒரு மாணவர் குழு. இது இன்றும் செயல்பட்டு வருகிறது.
  • அருட்செல்வன் 1991-ல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவுடன், அவர் சமூகப் பங்களிப்புக்கான நேரடிப் பணி முறையைத் தேர்ந்தெடுத்தார். குழந்தை தகவல் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் மலேசியாவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையைக் கவனிக்க குழந்தைகளுக்கான தேசிய பணிக்குழுவை நிறுவுவதில் ஈடுபட்டார்.
  • அருட்செல்வன் கெடா, பேராக், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் ஏறக்குறைய எண்பது மழலையர் பள்ளிகளை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
  • அருட்செல்வன், ஹுலு லங்காட் பகுதியில் தனது சமூகப் பணியைத் தொடர, 1992-ல் காஜாங்கில் சமூக மேம்பாட்டு மையத்தை நிறுவினார்.
  • அருட்செல்வன் 1993-ல், தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழுவை நிறுவுவதில் ஈடுபட்டார். இது தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு உரிமைகள் மற்றும் ஊதியம் கோரி பல மாபெரும் கூட்டங்களை நடத்தக் காரணியாக இருந்தது.
  • 1995-ல், ஆயிரம் ஏக்கருக்கும் குறைவான தோட்டங்கள் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் ஒரு கொள்கையை இயற்றியதால் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிமை கோரும் போராட்டத்தில் ஈடுபட்டார் அருட்செல்வன்.
  • கட்டாயமாக வெளியேற்றப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பல தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர மற்றும் மாற்று வீடுகளைப் பெற அருட்செல்வன் உதவினார். லாடாங் பிரேமர் (2004), லாடாங் புக்கிட் ஜெலுத்தோங் (2006), லாடாங் புக்கிட் திங்கி (2006), லாடாங் புரூக்லண்ட்ஸ் (2008) மற்றும் லாடாங் எஸ்.ஜி. ரிஞ்சிங் (2008) ஆகியவை சிலாங்கூரிலுள்ள தோட்டங்களாகும். பேராக், கெடா மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள தோட்டங்களிலும் அவரது சேவை விரிவடைந்தது.
  • லாடாங் அபாகோ, பெரானாங் (2001), UNITEN (2000) முன் வணிகர்களுக்கான மாற்றுக் கடைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான குடிநீர் விநியோகத்தைப் பெற்றுக் கொடுத்தது அருட்செல்வனின் போராட்ட வாழ்வில் மற்றொரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
  • அருட்செல்வன் கம்போங் சுங்கை நிபா (ஷா ஆலம்), கம்போங் சுபடாக் (செந்தூல்), கம்போங் பாப்பான் ஆகிய ஆகிய இடங்களில் வசித்த குடியிருப்பாளர்களின் நில மற்றும் மாற்று வீடுகளுக்கான போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.
  • 1994 மற்றும் 1995 -ல், ஆபரேஷன் லாலாங்கின் (1987) விளைவாக நாட்டில் மக்கள் இயக்கம் மிகவும் அமைதியாக இருந்தபோது, அருட்செல்வன் தனது நண்பர்களுடன் தொழிலாளர் தினத்தில் டத்தாரன் மெர்டேகாவில் போராட்டம் செய்ய நகரத்தின் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டினார். ஓராண்டுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான ஏழை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற குடியேறிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பிரதமர் அலுவலகத்திற்குப் பேரணியாக சென்றார்.
  • 1994 முதல், தொழிலாளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மே 1 ஏற்பாட்டுக் குழு, தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின் நிரந்தர அமைப்பாளராக மாறியது. அருட்செல்வன் 'மலேசியாவில் தொழிலாளர் தினக் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

அரசியல் ஈடுபாடு

மலேசிய சோசியலிஸ்ட் கட்சி 1998-ல் தொடங்கப்பட்டது. இக்கட்சி தொழிலாளர்நலன், வீட்டுடைமை, இன, மத அரசியல் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, அதிகார முறைகேடு, சூழலியல் மாசு போன்றவற்றிற்காகக் குரல்கொடுக்கும் நிலைபாட்டைக் கொண்டிருந்ததால் இளமையிலேயே சமூகஉணர்வும் போராட்டக்குணமும் கொண்டிருந்த அருள்செல்வம் இக்கட்சியில் இணைந்தார். அருள்செல்வம் 1998-லிருந்து 2015 வரை மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2008, 2013-ம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அருள்செல்வம் மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

நூல்கள்

  • Sambutan Hari Buruh di Malaysia- Merenung kembali sejarah sepuluh tahun(1994-2003), Pusat Pembangunan Masyarakat, 2003
  • Dari Kuliah ke Jalanraya , SIRD, JERIT, 2007
  • Breamer.....Bila perempuan Tua dan anak muda bangkit, Gerakbudaya, PSM , 2013
  • Mengapa 10 tahun untuk daftar PSM, PSM Centre, 2020


✅Finalised Page