under review

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

From Tamil Wiki

அம்போதரங்க உறுப்பு அமைந்த ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். அம்போதரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று பொருள். கரையை அடைய அடைய அலையின் உயரம் சுருங்குவது போல பாடல் அமைப்பு இருப்பதனால் இப்பெயர் வந்தது.

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா இலக்கணம்

முதலில் தரவு வரும். அத்தரவு ஆறு அடியாக வரும்.

தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிற்றெல்லை இரண்டடி; அடிப் பேரெல்லை நான்கடி.

தாழிசைகளுக்குப் பின்னர் அம்போதரங்க உறுப்பு வரும். முதலில் நான்கு சீர்களைக் கொண்ட இரண்டடிகள் பொருள் தொடர்ச்சியுடன், ஒரே எதுகை அமைப்புப் பெற்று, இரண்டு எண்ணிக்கையில் வரும். இது நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம் எனப்படும். இது பேரெண் எனவும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம் வரும். அது அளவெண் எனப்படும். இதைத் தொடர்ந்து சிந்தடிகள் எட்டு வரும். இது இடையெண் எனப்படும். சிந்தடிகள் நான்காக வருவதும் உண்டு.

இடையெண்ணைத் தொடர்ந்து இறுதியாகக் குறளடிகள் பதினாறு வரும். இது சிற்றெண் எனப்படும். சிற்றெண் எட்டடியாக வருவதும் உண்டு.

இவ்வாறு வரும் அம்போதரங்க உறுப்பிற்குப் பின் ஒரு தனிச்சொல் வரும். தனிச்சொல்லைத் தொடர்ந்து ஆசிரியச் சுரிதகமோ வெள்ளைச் சுரிதகமோ கொண்டு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா முடிவடையும்.

உதாரணப் பாடல்

(தரவு)

கெடலரும் மாமுனிவர் கிளந்துடன் தொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழலுவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க
வார்புனல் இழிகுருதி அகலிட முடிநனைப்பக்
கூருகிரால் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்

(தாழிசை)

முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? (1)
கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க
வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்மலைந்து
சேணுயர் இருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ? (2)
படுமணி யினநிரை பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக
எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?' (3)

(அம்போதரங்கம்)

இலங்கொலி மரகத மெழில்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை

(மேற்கண்டது பேரெண் எனப்படும்)

கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை;
தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை;
ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை;
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை.

(மேற்கண்டது அளவெண்)

போரவுணர்க் கடந்தோய் நீ
புணர்மருதம் பிளந்தோய் நீ
நீரகலம் அளந்தோய் நீ
நிழல்திகழ்ஐம் படையோய் நீ

(மேற்கண்டது இடையெண்)

ஊழி நீ
உலகு நீ
உருவும் நீ
அருவும் நீ
ஆழி நீ
அருளும் நீ
அறமும் நீ
மறமும் நீ

(இவை சிற்றெண்)

என வாங்கு

(இது தனிச்சொல்)


(சுரிதகம்)

அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்
தொன்று முதிர்கட லுலக முழுதுடன்
ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே

- இப்பாடல், முச்சீரடியும் இருசீரடியும் நான்கும் எட்டுமாய் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா.

உசாத்துணை


✅Finalised Page