under review

அஜந்தகுமார்

From Tamil Wiki
அஜந்தகுமார்

அஜந்தகுமார் (த. அஜந்தகுமார்) (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1984) ஈழத்து தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், இதழியல் விமர்சனம் எழுதி வருகிறார். உயர்வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஜந்தகுமார் யாழ்ப்பாணம், கரவெட்டியில் தருமராசா, கமலாதேவி இணையருக்கு மகனாக ஆகஸ்ட் 28, 1984-ல் பிறந்தார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றார். அங்கு உதவி விரிவுரையாளராகவும் பணிசெய்தார்.

இதழியல்

அஜந்தகுமார் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உதவியுடன் 'துளிர்' சஞ்சிகையின் ஆசிரியராகவும், 'புதியதரிசனம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அஜந்தகுமார் கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், இதழியல் விமர்சனம் எழுதி வருகிறார். 'தனித்துத் தெரியும் திசை', 'ஒரு சோம்பேறியின் கடல்', 'படைப்பின் கதவுகள்', 'அப்பாவின் சித்திரங்கள்' (2013) என்னும் அப்பா பற்றிய நினைவுக் கவிதை நூல் ஆகியன இவரது நூல்கள். செ.கதிர்காமநாதன் படைப்புகள் தொகுதியின் இணைத் தொகுப்பாசிரியர். துளிக்காற்று என்ற பயிற்சிப் பட்டறைக் கவிதைகள் நூலின் தொகுப்பாசிரியர். கலைமுகம், ஞானம், புதிய தரிசனம், தாயகம், அம்பலம், நடுகை, ஜீவநதி, தெரிதல் ஆகிய ஈழத்து இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார். வார்ப்பு, காற்றுவெளி, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

அஜந்தகுமார் 2010-ல் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், 2011-ல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரை வாசித்தார். ஞானம் பரிசுக் கதைத் தொகுதிகளான 'கொக்கிளாய் மாமி', 'சிறைப்பட்டிருத்தல்', 'கருமேகம் தாண்டிய நிலவு' ஆகிய தொகுதிகளிலும் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடான 'பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்' ஆகிய தொகுதிகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. உயர்வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைகள், உரைநடைக்கோவை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

”எனது அனுபவங்களையும் சமூக மெய்ம்மைகளையும் இலக்கியம் ஆக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை இயக்குகின்றது.” என அஜந்தகுமார் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதை
  • ஒரு சோம்பேறியின் கடல் (அம்பலம் வெளியீடு, 2009)
  • அப்பாவின் சித்திரங்கள் (2013)
கட்டுரைகள்
  • தனித்துத் தெரியும் திசை (புதிய தரிசனம் வெளியீடு)
  • படைப்பின் கதவுகள் (2013)
ஆய்வு
தொகுப்பாசிரியர்
  • செ.கதிர்காமநாதன் படைப்புகள் (இணைத் தொகுப்பாசிரியர்)
  • துளிக்காற்று (பயிற்சிப் பட்டறைக் கவிதைகள்)
  • தமிழ்ச் சிறுகதைகள்
  • உரைநடைக்கோவை
படைப்பு வெளிவந்த தொகுப்பு
  • கவியில் உறவாடி (ஜீவநதி வெளியீடு)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page