under review

யூ. ஆர். அனந்தமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 19:10, 18 July 2022 by Tamizhkalai (talk | contribs)
யூ.ஆர்.அனந்தமூர்த்தி

யூ. ஆர். ஆனந்தமூர்த்தி. [உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி ]. [21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014]. கன்னட மொழி எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். நவீன இலக்கியத்தில் இந்திய அளவி்லும் கன்னடத்திலும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். ஞான பீடம், பத்ம பூஷன் ஆகிய இந்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றவர். இவரின் பல படைப்புகள் இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவஸ்தை, சம்ஸ்காரா, பிறப்பு ஆகிய நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இளமை, கல்வி

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மெலிகே

என்ற ஊரில் பிறந்தார். தந்தை உடுப்பி ராஜகோபாலச்சாரியா, தாய் சத்தியபாமா. பிராமண குடும்பத்தில் பிறந்த அனந்தமூர்த்தி தூர்வசபுரா (Doorvasapura), தீர்த்தஹள்ளி, மைசூர் ஆகிய இடங்களில் மரபான சமஸ்கிருத வழியில் பள்ளி கல்வி கற்றார். மைசூர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேல் படிப்பிற்க்காக காமன்வெல்த் ஊக்கத்தொகையில் இங்கிலாந்து படிக்கச்சென்றார். அங்கு, 1966-ஆம் ஆண்டு பெக்கிங்கம் பல்கலைகழகத்தில் "1930-ல் அரசியலும் புனைவும்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் அவர் மனைவியும்

தனிவாழ்க்கை

மனைவி எஸ்தர். கிறிஸ்தவரான எஸ்தருக்கும் யூ.ஆர். அனந்தமுர்த்திக்கும் 1956-ல் காதல் திருமணம் நடந்தது.மகன் சரத். மகள் அனுராதா. யூ. ஆர். அனந்தமூர்த்தியின் மருமகன், விவேக் ஷான்பாக் என்ற கன்னட எழுத்தாளர். 'காச்சர் கோச்சர்' என்ற அவருடைய நாவல் தமிழில் கிடைக்கிறது. [பார்க்க:காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக்]

யூ.ஆர்.அனந்தமூர்த்தி3.jpg

தொழில், பொதுவாழ்க்கை

யூ. ஆர். அனந்தமூர்த்தி 1970-ஆம் ஆண்டிலிருந்து மைசூர் பல்கலைகழத்தில் ஆங்கில துறை பேராசிரியராகப் பணியாற்றினார். 1987-ல் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்தார். 1992-ல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராகவும் 1993-ல் சாகித்ய அக்காதமியின் தலைவரகவும் இருந்தார். இந்தியாவின் பல முக்கியமான பல்கலைகழங்களில் வருகைதரும் பேராசிரியராக இருந்துள்ளார். 1990-களில் சோவியத் யூனியன், ஹங்கேரி, பிரான்ஸ், கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளை, 1993-ல் சீனாவைப், பார்வையிட்ட இந்திய எழுத்தாளர் குழுவில் இடம்பெற்றார்.

யூ.ஆர். அனந்தமூர்த்தி மைசூர் ரேடியோவில் செய்த சிவராம் காரந்த், கோபாலகிருஷ்ண அடிகள், ஆர். கே. நாராயணன், ஆ. கே. லக்‌ஷ்மணன், கே.எம். கரியப்பா ஆகிய கன்னட எழுத்தாளர்களின் நேர்காணல் வரிசை முக்கியமானதாக கருதப்படுகிறது. 2004-ல் லோக்சாபா தேர்தலில் போட்டி இட்டு தோல்வி அடைந்தார். 2006-ல் மாநிலங்களவைக்கான ராஜ்யசபா தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். தொடர்ந்து கன்னட அறிவியக்க சூழலிலும் அரசியல் சூழலிலும் தீவிரமான விவாதங்களை உருவாக்கியவராகவும் யூ.ஆர். அனந்தமூர்த்தி அறியப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு யூ. ஆர். அனந்தமூர்த்தியின் பல படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 6 நாவல்கள், 1 நாடகம், 8 சிறுகதை தொகுப்புகள், 3 கவிதை தொகுப்புகள், இலக்கிய விமர்சனம் சார்ந்த 8 கட்டுரை தொகுப்புகள் ஆகியவை யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய நூல்கள். 1994-ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருதைப் பெற்றார்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தி4.jpg

இலக்கிய இடம்

யூ.ஆர். அனந்தமூர்த்தி நவீனத்துவ காலகட்டதை சேர்ந்த எழுத்தாளர். அக்காலகட்டம் உலகம் முழுக்க ஒரே விதமாக மைய வினாக்களை எழுப்பும் படைப்புகள் வந்து கொண்டிருந்த காலம். மலையாளத்தில் தோட்டியின் மகனை தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய ஆண்டு 1946. அதை தமிழில் சுந்தராமசாமி மொழிபெயர்த்தது 1951-1952-ல். தமிழில் ஜெயகந்தாந்தனின் சில நேரம் சில மனிதர்களை வெளியான ஆண்டு 1970. யூ. ஆர். அனந்தமூர்த்தியின் முதல் நாவலான 'சம்ஸ்காரா' இதே வரிசையில் வரகூடிய நாவல். 1965-ல் எழுதபட்ட இந்த நாவல் இலக்கிய சூழலிலும் சமூகத்திலும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் உருவாக்கிய படைப்பு. தோட்டியின் மகன், சில நேரங்களில் சில மனிதர்கள், சம்ஸ்காரா ஆகிய மூன்று நாவல்களுமே பிராமண ஆதிக்கம், ஆச்சாரம், தீண்டாமை, சாதி, மூடநம்பிக்கை, அதன் வாயிலாக செய்யப்படும் சுரண்டல், பெண் அடிமை, சமூக விமர்சனம், சுயசாதி விமர்சனம் ஆகியவற்றை மைய கருவாக கொண்ட நாவல்கள். எழுத்தாளர்கள் வழியாக ஒரு காலகட்டம் தன்னை எழுதிகொள்ளும் விந்தையை எழுப்பகூடியது இந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகளுக்குள்ளே இருக்கும் ஒற்றுமை.

அரசியல் அதிகாரம் வழியாக உண்மையான சமூக மாற்றம் சாத்தியமா, நேர்மையும் கொள்கையும் சமரசமற்று இயங்குவதற்கான இடத்தை கட்சி அரசியலும் அதிகார அரசியலும் கொண்டுள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பி, விசாரித்த நாவல் ' சமஸ்காரா'. அகத்தையும் அதன் அனைத்து பாவனைகளையும் காட்டும் உளஆய்வு முறையை கொண்ட யூ.ஆர். அனந்த மூர்த்தியின் படைப்புகள், மறுபுறம் சமூகத்தில் தேவைபடும் பொருளாதார அதிகார சமத்துவம், அதை உண்டாகும் அரசியல் கலாச்சார மாற்றம், ஆகிய புறவிஷயங்களை குறித்த தேடலையும், அதன் நிதர்சன சாத்தியத்தையும் எல்லைகளையும் காட்டுகின்றன. தனிமனித அகமும் சமூகமும் ஒன்றை ஒன்று கண்டுக்கொள்ளவதையும் தன்னை மற்றதில் பார்த்துக்கொள்வதையும் காட்டகூடியது யூ. ஆர். அனந்தமூர்த்தியின் படைப்புலகம்.

இறப்பு

யு.ஆர். அனந்தமூர்த்தி 22 ஆகஸ்ட் 2014 அன்று பெங்களூரில் காலமானார்

முக்கிய விருதுகள்

  • 1998, பத்ம பூஷன் விருது
  • 1994, ஞான பீட விருது
  • 1984, மாநில அரசின் ராஜ்யோத்ஸவா (Rajyothsava) விருது
  • 2013, புக்கர் பரிசுக்கான பரிந்துரை

தமிழில் கிடைக்கும் நூல்கள்

  • சம்ஸ்காரா - அடையாளம் பதிப்பகம்
  • அவஸ்தை - காலச்சுவடு பதிப்பகம்
  • பிறப்பு - காலச்சுவடு பதிப்பகம்

திரைப்படம்

சம்ஸ்காரா, பாரா, அவஸ்தை, மௌனி மற்றும் தீக்ஷா ஆகிய யூ.ஆர். ஆனந்தமூர்த்தியின் நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன..

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.