under review

பெரும்பாணாற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 09:30, 5 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் .

பெரும்பாண் - பெரிய பாண் எனப் பொருள்படும். பெரிய பாணாவது, பெரும் பண். பெரிய பண்ணைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் இருந்தனர். அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர். பெரும்பாணரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர்[1].

நூல் அமைப்பு

பெரும்பாணாற்றுப்படை 500 அடிகளில் அகவல்பாவால் (ஆசிரியப்பா) ஆனது. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல்வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த புறத்திணை நூல்.

  • பாணனது யாழின் வருணனை (1-16)
  • பாணனது வறுமை (17-22)
  • பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்துரைத்தல் (23-28)
  • திரையனது சிறப்பை அறிவித்தல் (28-38)
  • திரையனது ஆணை (39-45)
  • உப்பு வணிகர் செல்லும் நெடிய வழி (46-65)
  • வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி (66-82)
  • எயிற்றியர் குடிசை (83-88)
  • புல்லரிசி எடுத்தல்(89-94)
  • எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
  • பாலை நிலக் கானவர்களின் வேட்டை (106-117)
  • எயினரது அரணில் பெறும் பொருள்கள் (118-133)
  • குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும் (134-147)
  • கோவலர் குடியிருப்பு (147-168)
  • முல்லை நிலக் கோவலரின் குழலிசை (169-184)
  • முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன (184-196)
  • மருத நிலத்தைச் சேர்ந்த முல்லை நிலம் (196-206)
  • மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் - நாற்று நடுதல் (206-212)
  • நெல் விளைதற் சிறப்பு (213-228)
  • நெல் அரிந்து கடா விடுதல் (229-242)
  • மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள் (243-256)
  • ஆலைகளில் கருப்பஞ்சாறு அருந்துதல் (257-262)
  • வலைஞர் குடியிருப்பு (263-274)
  • வலைஞர் குடியில் பெறும் உணவு (275-282)
  • காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப்போதல் (283-296)
  • அந்தணரது உறைவிடங்களில் பெறுவன (297-310)
  • நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு (311-319)
  • கடற்கரைப்பட்டினம் (319-336)
  • பட்டினத்து மக்களின் உபசரிப்பு (336-345)
  • ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை (346-351)
  • தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம் (351-362)
  • ஒதுக்குப்புற நாடுகளின் வளம் (362-371)
  • திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும் (371-392)
  • கச்சி மூதூரின் சிறப்பு (393-411)
  • இளந்திரையனின் போர் வெற்றி (412-421)
  • அரசனது முற்றச் சிறப்பு (422-435)
  • திரையன் மந்திரிச் சுற்றத்தோடு அரசு வீற்றிருக்கும் காட்சி (436-447)
  • பாணன் - அரசனைப் போற்றும் வகை (448-464)
  • பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல் (465-480)
  • பரிசு வழங்குதல் (481-493)
  • இளந்திரையனது மலையின் பெருமை (493-500)

என்று 500 வரிகளில் இந்நூலின் கருத்து இயற்றப்பட்டுள்ளது[2].

உரை நூல்கள்

  • பத்துப்பாட்டு (2 பகுதிகள்) - பொ. வே. சோமசுந்தரனார் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • நச்சினார்க்கினியர் உரை - உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
  • பெரும்பாணாற்றுப்படை உரை - அருளம்பலம், சு. - யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலை, 1937[3]

பாடல் நடை

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு . . .
வழங்க தவாஅ பெரு வளன் எய்தி
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும் . . . .[23 - 28]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page