under review

பாத்துமாவின் ஆடு

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாத்துமாவின் ஆடு

பாத்துமாவின் ஆடு. புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய மலையாள நாவல். 'பாத்துமாயுடைய ஆடு' என்ற மூலபெயர் கொண்ட இந்த நாவல், 1959-ல் வெளியான பஷீரின் 10-ஆவது நாவல். பஷீரின் ஆளுமை வெளிப்படும், மற்றும் வாழ்க்கையில் அனைத்தும் சிரிப்பாக மாறும் தருணங்கள் நிறைந்த இந்த நாவல் பஷீரின் படைப்புகளில் சிறந்தது என்று கருதப்படுகிறது. பஷீர் வாழ்க்கையின் மீது கொண்ட விலக்கமும் காதலும்தான் பாத்துமாவின் ஆடு நாவலை சிறந்த படைப்பாக்குகிறது. தமிழில் 'பாத்துமாவின் ஆடு' நாவலுக்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் உள்ளன.

தமிழ் பதிப்பு

பாத்துமாவின் ஆடு நாவல் குளச்சல்.மு.யூசூஃபால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது ( டிசம்பர் 2010-ல் முதல் பதிப்பு, ஜூலை 2015-ல் மூன்றாவது பதிப்பு). குமாரி சி.எஸ். விஜயத்தின் மொழியாக்கத்தை தேசிய புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டில் குளைச்சல் மு. யூசப்பின் மொழிபெயர்ப்பே விமர்சகர்களால் பரிந்துரைக்கபடுகிறது.

வைக்கம் முகமது பஷீர்

ஆசிரியர் பற்றிய குறிப்பு

இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் ஒருவரெனக் கருதப்படும் வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994) நவீன மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி, எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது.

கதைச்சுருக்கம்

பஷீரும் அவருடைய குடும்பமும்தான் இந்த நாவிலின் கதை. எழுத்தாளரான பஷீரை அவருடைய குடும்பம் எப்படி கையாள்கிறது இவர் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் நாவலின் மையம். தலையோலபரம்பு என்ற ஊரில் வசிக்கும் கதைசொல்லியான பஷீரும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நாவலின் கதாபாத்திரங்கள். திருமணம் செய்துகொள்ளாது நாடோடியை போல வாழும் கதை சொல்லி பஷீர் சில மாதங்கள் தன்னுடைய சொந்த வீட்டுக்கு வந்து வசிக்க நேரும் பொழுது, தனக்கும் தன் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் கதையைச் சொல்லத் துவங்குகிறார்.

பஷீர் குடும்பத்தின் பெண்களும் ஆண்களும் தங்களின் நலனுக்காக அவரை பயன் படுத்திக்கொள்கிறார்கள், அதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிபோட்டு கொள்கிறார்கள். பஷீரின் தங்கை பாத்துமா. திருமணம் ஆகி பக்கத்து தெருவில் வசிக்கிறாள். அவள் தன்னுடைய ஆட்டையும் மகளையும் அழைத்துகொண்டு பிறந்த வீட்டுக்கு தினம் தினம் வந்து விடுகிறாள். பாத்துமாவின் குடும்பமும் அவளுடைய ஆடும் பஷீரின் வீட்டை உண்டு வளர்கின்றன. பாத்துமாவின் ஆடு வாசலில் இருக்கும் பலா மரத்தின் சருகுகளை உண்டது போதாமல் பஷூரின் விற்காத நாவல் கட்டுகளையும், கையெழுத்து பிரதிகளையும் உண்கிறது. 'அப்துல் காதர்' என்ற பஷீரின் சகோதரன், 'ஹனீபா' என்ற தங்கையின் கணவன் ஆகியோர் பஷீரின் பணத்தை பொய்க்காரணங்கள் கூறி எடுத்துகொள்கிறார்கள் . தன்னைடைய பெருந்தன்மையும் தன்னலமற்ற சுபாவத்தையும் திருமணம் ஆகாதவன் என்ற காரணத்தையும் பயன்படுத்திக்கொண்டு 'இக்கா' என்று அன்போடு அழைத்து சுரண்டும் குடும்பதினரிடயே வாழ்கிறார் பஷீர். பஷீரின் அம்மாவும் கூட சில நேரங்களில் இதையே செய்கிறார். இவை அனைத்தையும் பஷீர் நையாண்டியோடும் பெரும் பிரியத்தோடும் பார்க்கிறார், அவரவரின் நியாங்களே அவர்களை அப்படி செய்ய வைக்கிறது என்று வாசகர்களுக்குக் காட்டுகிறார், இவ்வளவு போட்டிகளுக்கும் தன்னலத்துக்குமிடையில் உறவுகள் முறியாது நீடிக்கும் காரணம் குறித்த வினாவை எழுப்புகிறார். வயதாகி தான் சிறுவயதில் விளையாடிய அதே விளையாட்டை விளையாடும் பேரக்குழந்தகளை பார்ப்பதைப் போல பார்த்து கதையை சொல்கிறார் பஷீர்.

இலக்கிய இடம்

பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பச்சித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப் பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை அற்புதமான நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான்.

பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். விமர்சகர் கல்பற்றா நாராயணன் எழுதுகிறார் "அபாரமான பசியுள்ளது பாத்துமாவின் ஆடு. பசியில் அதற்கு ருசி வளர்கிறது. எல்லா இலையும் தித்திக்கும் பெருங்காடு அதன்முன் விரிந்து நிற்கிறது. பலா இலை, சாம்ப மரச்சருகுகள், பஷீரின் புத்தகங்கள், அபியின் சட்டை எல்லாமே அதற்கு இனிய உணவுதான்" [ ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்] அந்த அற்புதமான ஆடு வேறு ஏதுமல்ல, பஷீரின் கனிந்த ஆன்மாதான். மானுடம் மீதான அளவிறந்த அன்பே பஷீரின் தரிசனம். மனிதனின் குரூரத்தை, சுயநலத்தை, அற்பத்தனத்தை அது முடிவின்றி மன்னிக்கிறது. உள்ளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது. பஷீரின் மொத்த படைப்புலகிலும் தீமையின் துளிகூட இல்லை. கசப்போ கோபமோ எங்கும் இல்லை. தேவர்களின் பார்வையில் மானுட வாழ்வு இப்படித்தான் இருக்கும் போலும்." என்று எழுத்தாளர் ஜெயமோகன் 'வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். [1]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page