under review

ப. ஜீவானந்தம்

From Tamil Wiki
Revision as of 09:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ப. ஜீவானந்தம்
ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், காந்தியவாதி, அரசியல்வாதி. களச்செயல்பாட்டாளர். எழுத்து, பேச்சு, இதழியல், அரசியல் என யாவையும் தான் நம்பிய கொள்கைகள், சிந்தனைகளுக்கான ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் பணி செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ப. ஜீவானந்தம் நாகர்கோயில் பூதப்பாண்டியில் பட்டத்தார் பிள்ளை, உமையம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 21, 1907-ல் பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

தனிவாழ்க்கை

ப. ஜீவானந்தம் மனைவியுடன்

ப. ஜீவானந்தம் கடலூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குமுதா என்ற பெண். மகள் பிறந்த சில நாள்களில் கண்ணம்மா காலமானார். 1948-ல் பத்மாவதியை கலப்புத் திருமணம் செய்தார். இவர்களுக்கு உஷா, உமா என்ற இரு மகள்கள். மணிக்குமார் என்ற மகன்.

நாடக வாழ்க்கை

ப.ஜீவானந்தம் நாடகம் அரங்காற்றுகை செய்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸுக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்தார். ’ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அதில் நடித்தார். 1954-ன் இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்த அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. இவை மத நோக்கங்களைப் புண்படுத்தும் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காக என அறிந்து ப. ஜீவானந்தம் எதிர்த்தார்.

ஆசிரியப்பணி

ப. ஜீவானந்தம் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜ குருகுலத்தில் ஆசிரியர் பணி செய்தார். அங்கு நிலவிய சாதியப்பாகுபாடு காரணமாக அதிலிருந்து விலகி காரைக்குடி அருகில் சிராவயல் காந்தி ஆசிரமத்தைத் தொடங்கினார். ஆசிரம மாணவர்களுக்கு காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு, பாரதியார் பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டன. சிராவயல் ஆசிரமம் நடத்தி வந்த காலத்தில் சங்ககால இலக்கியம் முதல் மகாகவி பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் ஜீவா வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டார். தனித்தமிழ்வாதத்தின் மேல் பற்று கொண்டு தன் பெயரை 'உயிர் இன்பன்' என மாற்றிக் கொண்டார். சேரிகளுக்குச் சென்று ஆசிரியப்பணி செய்தார்.

அரசியல் வாழ்க்கை

சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியவில்லை. 1952-ல் சட்டசபையில் நடந்த மதுவிலக்கு பற்றிய விவாதத்தில் ஜீவாவின் தரப்பு வெகுவாக பேசபப்ட்டது.

ப. ஜீவானந்தம் நண்பர்களுடன்
காங்கிரஸ்

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் ப. ஜீவானந்தம் பங்கேற்றார். திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு கதர் அணியத் தொடங்கினார். பகத்சிங்கின் தூக்கு தண்டனை அவரைப் பாதித்தது. அவரின் புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். தன் ஊரில் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். பதினேழு வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தீண்டாமைக்கு எதிராக நண்பர்களைத் திரட்டி ஆலய நுழைவுப் பிரவேசம் செய்தார்.1931-ல் ப. ஜீவானந்தம் கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே இவரின் முதல் அரசியல் பிரவேசம். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932-ல் சிறை சென்றார்.

பொதுவுடமைக் கட்சி

ப. ஜீவானந்தம் 1930-களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ப. ஜீவானந்தம் சீனப் படையெடுப்பை எதிர்த்து பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில்(1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களைக் கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயில்வதை முதன்மைப்படுத்திக் கொண்டார்.

1932 வாய்ப்பூட்டு சட்டத்தில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1932-ன் இறுதியில் பெரியார், சுயமரியாதை இயக்க ஊழியர் கூட்டத்தை சிங்காரவேலர் தலைமையில் கூட்டினார். 1932-ல் சிங்காரவேலருடன் தொடர்பு ஏற்பட்டது. 1933-ல் சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியல் ஹாலில் பெரியார், சிங்காரவேலர், ப. ஜீவானந்தம் ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, நாத்திகக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக 200 பாடல்களை ஜீவா எழுதினார். வர்ணாசிர தர்மத்தையும், சோஷலிஸ சமூகமல்லாத ராம ராஜ்யத்தையும் ஆதரித்துவரும் காந்தியை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

சுயமரியாதைச் சமதர்மக் கட்சி

சுயமரியாதை சமதர்மக் கட்சி, சுயமரியாதை இயக்கத்திற்குள் ஒரு பிரிவாகத் தோன்றி வளர்ந்தது. இந்தப் பிரிவைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள் இந்தியப் பொதுவுடைமையாளர்கள் ம. சிங்காரவேலு, ப. ஜீவானந்தம் என நம்பப்படுகிறது (கோ. கேசவன், 1990). ஆனால் இதை மறுத்து சுயமரியாதை சமதர்மக் கட்சியை உருவாக்குவதில் பெரியாரும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார் என வாதிடப்பட்டுள்ளது (எஸ்.வி. ராஜதுரை - வ.கீதா, 1996).

இவ்வியக்கத்தின் இதழ்களாக ‘சமதர்மம்’, ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது(1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).

இதழியல்

ப. ஜீவானந்தம் ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர். 1961-ல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கினார். அதன் கொள்கைகளைப் பரப்ப ’ஜனசக்தி’ நாளிதழைத் தொடங்கினார். ’தாமரை’ என்ற இலக்கிய இதழை 1959-ல் தொடங்கினார். இவ்விதழ்களில் கட்டுரைகள் பல எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

ப. ஜீவானந்தம் அஞ்சல்தலை

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 'சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்' என்ற நாவலை எழுதினார். சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். 1933-ல் ப. ஜீவானந்தத்தின் முதல் நூலான 'பெண்ணுரிமை கீதாஞ்சலி' என்ற கவிதை நூல் வெளிவந்தது. பொதுவுடமை மேடைகளில் முதல் முறையாக தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர். இலக்கியம் சார்ந்த இவரின் பல மேடைப் பேச்சுகள் புகழ்பெற்றவை.

குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார். நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் பல பாடல்கள் எழுதினார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அவற்றைக் குறித்து எழுதினார். மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவானந்தம் பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். ப. ஜீவானந்தம் எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

மறைவு

ப. ஜீவானந்தம் ஜனவரி 18, 1963-ல் காலமானார்.

ப. ஜீவானந்தம் சிலை

நினைவு

  • தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் ப.ஜீவானந்தத்திற்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது மார்பளவு சிலையும் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளன.
  • ப.ஜீவானந்தத்தின் பெயரால் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி பெயரிடப்பட்டது.
  • சென்னை மேற்கு தாம்பரத்தில், ரயில்வே நிலையம் எதிரில் முழுசிலை அமைக்கப்பட்டுள்ளது. 1995-ல் கி. வீரமணி திறந்து வைத்தார்.

நூல்கள்

  • இலக்கியச்சுவை
  • ஈரோட்டுப் பாதை சரியா?
  • கலை இலக்கியத்தின் புதிய பார்வை
  • சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
  • சமதர்மக் கீதங்கள்(1934)
  • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
  • சோஷலிஸ்ட் தத்துவங்கள்
  • மொழியைப்பற்றி
  • புதுமைப்பெண்
  • பெண்ணுரிமைக் கீதங்கள்(1932)
  • மதமும் மனித வாழ்வும்
தொகுப்பு
  • மேடையில் ஜீவா
  • ஜீவாவின் பாடல்கள்
  • தேசத்தின் சொத்து
மொழிபெயர்ப்பு
  • நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங்(1934)

உசாத்துணை


✅Finalised Page