காசியபன்
To read the article in English: Kasiyaban.
காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) தமிழில் கவிதைகளும், அசடு என்னும் நாவலும் எழுதிய எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி.
பிறப்பு, கல்வி
காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தி தமிழை இரண்டாமொழியாக எடுத்து படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும்.
இலக்கிய இடம்
காசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.
காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதியிருக்கிறார்.
காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். 'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்னன் குறிப்பிடுகிறார்.[1]
படைப்புகள்
- அசடு - நாவல் (1978)
- கிரகங்கள் நாவல் (1980)
- வீழ்ந்தவர்கள் - நாவல்
- பேசாத மரங்கள் - கவிதை தொகுதி
- கோணல் மரம் - சிறுகதைகள்
✅Finalised Page