under review

கடிகைமுத்துப் புலவர்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கடிகைமுத்துப் புலவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். எட்டயப்ப மன்னரின் அவைக்களப் புலவர். எட்டயப்ப மன்னர், சிவகிரி ஜமீன், ஊற்றுமலை ஜமீன் மீது பாடல்கள் பாடினார். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது பாடல்கள் அறிஞர்களால் தொகுக்கப்பட்டன.

வாழ்க்கைக் குறிப்பு

கடிகைமுத்துப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள(தற்போது தூத்துக்குடி மாவட்டம்) எட்டயபுரத்தில் பிறந்தார். அவ்வூரின் அரசன் ஜகவீரராம வேங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கரின் சமஸ்தான வித்துவானாக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கடிகைமுத்துப் புலவரின் பாடல்கள் உருவக அலங்கார வர்ணனைகள் கொண்டவை. கடிகைமுத்துப் புலவர் எட்டயபுர மன்னர் மீது நூறு செய்யுள் கொண்ட கழிக்கரைப்புலம்பல் என்ற சமுத்திரவிலாசம் என்ற நூலை எழுதினார். அவர் மீது காமரசமஞ்சரி எனும் நூலையும் பாடினார். ஊற்றுமலை ஜமீன் மீது மதன வித்தார மாலை எனும் பிரபந்தத்தைப் பாடினார்.

620 செய்யுள்கள் (தமிழ் புளூட்டாக்கின் ஆசிரியர் 325 பாடல்கள் என்பார்) கொண்ட 'திக்குவிஜயம்' என்ற நூலை எழுதினார். திக்குவிஜயம் பாடல்கள் சிவகிரியின் ராஜா வரகுணராம வன்னியனைப் பாட்டுடைத்தலைவனாக்கி அவனது செல்வம், சிறப்பு, பராக்கிரமங்களை பாடியது. தனிப்பாடல்கள் பல பாடினார். 'திருவிடைமருதூரந்தாதி' பாடினார். உமறுப்புலவர் இவரின் மாணவர்.

திருவாளங்காடு ஆறுமுகசுவாமிகளின் தனிப்பாடல் திரட்டு நூலில் நூற்றி முப்பது பாடல்கள் உள்ளன. இதிலுள்ள முதல் பாடலை சதாசிவம்பிள்ளை எடுத்தாண்டுள்ளார். கா.சுப்பிரமணியபிள்ளை தனிப்பாடல் திரட்டு நூலில் இவரின் நூற்றியேழு பாடல்கள் உள்ளன. தனிப்பாடல் திரட்டு நூலில் கடிகைமுத்து புலவரின் இருநூற்று நாற்பத்தியாறு பாடல்கள் உள்ளன. அவை மடக்கு, பின்முடுகு வெண்பா வெண்டுறை, முன்முடுகு வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கொச்சகம் முதலிய யாப்பமைதிகளைக் கொண்டவை. இவை வெங்கடேசு ரெட்டமனின் மீது தலைவி ஒருத்தி காதல் கொண்டு பாடுவதாக அமைந்துள்ளன.

பாடல் நடை

  • தனிப்பாடல்

கருப்பஞ் சிலையு மோர்கரமே
கண்டே னானுஞ் சூகரமே
காமப் பயிலு மூர்க்கரமே
கணையைத் தொடுத்தான் சீக்கிரமே
வருத்தம் புரிவா ரநேகரமே
வல்லார் மடவார் நிசகரமே
மாமால் வெங்க டேசுரட்டன்
வருவான் வருவா னென்றிருந்தேன்

நூல்கள் பட்டியல்

  • சமுத்திரவிலாசம்
  • காமரசமஞ்சரி
  • திக்குவிஜயம்
  • திருவிடைமருதூரந்தாதி
  • மதன வித்தார மாலை

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page