under review

என் தலைக்கு எண்ணெய் ஊத்து (கிராமிய விளையாட்டு)

From Tamil Wiki
Revision as of 13:34, 19 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: En Thalaikku Enney Oothu (Village Sports). ‎


என் தலைக்கு எண்ணெய் ஊத்து ஐந்து பெண்கள் கூடி விளையாடும் கிராமிய விளையாட்டு. இதில் நான்கு மூலையிலும் நான்கு பேர் நின்றுகொள்வார்கள். நடுவில் ஐந்தாவதாக ஒருவர் மற்ற நால்வரையும் நோக்கிப் பாடி வருவதாக இவ்விளையாட்டு அமையும்.

விளையாடும் முறை

இவ்விளையாட்டில் நடுவில் இருப்பவர் இடது கையை தலையில் வைத்துக் கொண்டும் வலது கையை முன்னால் நீட்டிக் கொண்டும் உள்பக்கமாக நான்கு மூலைக்கும் "என் தலைக்கு எண்ணெய் ஊத்து, எருமை மாட்டுக்குப் புல்போடு" என்று பாடிக் கொண்டே சுற்றி வருவார். நான்கு மூலையில் நிற்பவர்களும் இடம் மாறி ஓடி நிற்பார்கள். அப்படி அவர்கள் இடம்மாறும் போது பாடி வருபவர் அவர்களைத் தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் பாடி வரவேண்டும்.

விளையாடும் போது முள் தைத்து விடுவது போன்ற எதிர்பாராத சமயங்களில் "தூ--ச்சி" என்று சத்தம் போட்டுச் சொல்லி விளையாட்டிலிருந்து தற்காலிக விலகுதல் பெறுவர். விளையாடும் போது மூன்று தடவைகள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை முக்கா முக்கா மூணுதரம் என்று சொல்வார்கள்.

கண்ணைக் கட்டிக் கொண்டு பிடித்துவரும் படி விளையாடுவதும் உண்டு. அதில் கண் கட்டியிருக்கும் ஐந்தாவது பிள்ளையை ஜாக்கிரதையுடன் மற்ற பிள்ளைகள் நெருங்கி, "இந்தா இந்தா வாழைப்பழம் இனிச்சிக் கிடக்கும் வாழைப்பழம்" என்று சொல்லி எச்சம் காட்டுவார்கள்.

இவ்விளையாட்டில் ’அசிங்கத்தை’ மிதித்துவிட்டவன் அல்லது முடி வெட்டிக் கொண்டு குளிக்காமல் இருப்பவனை மற்றப் பிள்ளைகள் கிட்டே வரவிட மாட்டார்கள். வம்புக்கு இவன் மற்றவர்களைத் தொடத் துரத்துவான். அப்போது மற்றப்பிள்ளைகள் "என் பேர் மானம்; என்னைத் தொட்டால் பாவம்" என்று சொல்லி எச்சிலைத் தொட்டு தொப்புளில் வைத்துக் கொள்வர். இவனும் அவர்களைத் தொடமாட்டான். இவர்களைத் தொட்டால் பாவமென்றும் அவனும் நினைப்பான்.

விளையாட்டில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்து விடும். அதைத் தொடர்ந்து பதிலுக்குப் பதிலாக தவறுகள் செய்யப்பட்டு விளையாட்டின் நோக்கமே பாழ்பட்டுப் போகும். பேசிச் சீர்திருத்த முடியாதபோது, "அழிச்சிக் குளிச்சி விளையாடுவோம்" (முதல்லெயிருந்து) என்று சொல்லப்படும். எல்லோரும் விளையாட்டு நின்று போய்விடக்கூடாதே என்ற ஆர்வத்தில் உடனே இதை ஏற்றுக் கொள்வார்கள். ஆட்டை முதலிலிருந்து தொடரும்.

வெகுநேரம் விளையாடி முடிந்ததும், இனி வீட்டுக்குத் திரும்ப வேண்டியது தான் என்பதை, "அவுக அவுக வீட்டுக்கு அவரைக் கஞ்சி குடிக்கப் போங்க பிள்ளை பெத்த வீட்டுக்கு புளியங்கஞ்சி குடிக்கப் போங்க" எனப் பிள்ளைகள் கூவி விடை பெற்றுப் போவார்கள்.

விளையாடுபவர்கள்

  • ஐவர் - நான்கு பேர் ஒவ்வொரு மூலையிலும் ஒருவர் நடுவிலுமாக விளையாடுவர்.

உசாத்துணை

  • கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி.ராஜநாராயணன்


✅Finalised Page