ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்

From Tamil Wiki
Revision as of 12:32, 8 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "என்றீக்கே என்றீக்கசு (1520-1600) போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர். முதன்முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டவர். == இளமை, கல்வி == என்றிக்கே அடிகள் போர்ச்சுக்கல் நாட்டி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

என்றீக்கே என்றீக்கசு (1520-1600) போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர். முதன்முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டவர்.

இளமை, கல்வி

என்றிக்கே அடிகள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாவிக்கோசாவில் பிறந்தார். இவருடைய மூதாதையர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் 1545இல் கிறித்தவ மதத்தில் சேர்ந்தார்.

தனிவாழ்க்கை

சமயப் பணி செய்ய இந்தியாவுக்கு 1546இல் வந்தார். அண்டிரிக் அடிகளார் என அழைக்கப்பட்டார். தொடக்கக் காலத்தில் கோவாவில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடியில் குடியேறினார்.

இலக்கிய வாழ்க்கை

இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித பிரான்சிசு சேவியரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.

சமயப்பணியும் தமிழ்ப்பணியும்

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டார். கிறித்தவ சமயப் பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமைப் பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார். அடியார் வரலாறு(1586); கிரிசித்தியானி வணக்கம் (1579); கொமபெசயனாயரு (1578); மலபார் இலக்கணம் ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள்.

தம்பிரான் வணக்கம்

தம்பிரான் வணக்கம் இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்ட தமிழ் நூல். இந்நூல் கொல்லம், அக்டோபர் 20, 1578இல் பதிப்பிக்கப்பட்டது. இது போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.

தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தார். தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார். கோன்சால்வசு என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன பாதிரி என்றீக்கே என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் லிசிபனில் வெளியிட்டார்.

பிற பணிகள்

சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார். 1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார். எல்லா மதத்தினரும் அண்டிரிக் அடிகளாரை நேசித்தனர்.

மறைவு

பிப்ரவரி 22, 1600இல் தனது 80வது வயதில் புன்னைக்காயலில் காலமானார். இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நூல் பட்டியல்

  • தம்பிரான் வணக்கம்
  • அடியார் வரலாறு (1586)
  • கிரிசித்தியானி வணக்கம் (1579)
  • கொமபெசயனாயரு (1578)
  • மலபார் இலக்கணம்

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • Anderson, Gerald 1999. Biographical Dictionary of Christian Missions. Wm. B. Eerdmans Publishing. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8028-4680-8.
  • S, Rajamanickam1968. "Padre Henrique Henriques, the Father of the Tamil Press". Second International Tamil Conference Seminar, International Association of Tamil Research, Madras.
  • தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர் - அறிஞர் அண்ட்ரிக் அடிகளார், தி இந்து தமிழ், 12-04-2014

Perera, Simon Gregory 2004. Jesuits in Ceylon in the XVI and XVII Centuries. Asian Educational Services. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1843-5.

  • Various authors 1988. Encyclopaedia of Indian literature vol. 2. Sahitya Akademi. பக். 1669. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1194-0.
  • Mandal, Ranita 2002. Muhammad Shahidullah & His Contribution To Bengali Linguistics. PhD Thesis, கொல்கத்தா பல்கலைக்கழகம். பக். Chapter 3.
  • Kalyanasundaram, K. "Literary Contributions of select list of Tamil Scholars from Overseas". TamilLibrary.org. பார்த்த நாள் 27 சனவரி 2009.