வ.சு. செங்கல்வராய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:27, 2 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "வ. சு. செங்கல்வராய பிள்ளை (ஆகஸ்ட் 15, 1883 - ஆகஸ்ட் 25, 1971) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். மரபு வழி புராணங்களைச் சேகரித்து பதிப்பித்ததும், சைவ நூல்களை எழுதியமையும், திருப்புகழ் பதிப்பு முயற்ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வ. சு. செங்கல்வராய பிள்ளை (ஆகஸ்ட் 15, 1883 - ஆகஸ்ட் 25, 1971) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். மரபு வழி புராணங்களைச் சேகரித்து பதிப்பித்ததும், சைவ நூல்களை எழுதியமையும், திருப்புகழ் பதிப்பு முயற்சியும் தமிழ் இலக்கியத்திற்கு இன்றியமையாதது.

பிறப்பு,கல்வி

தென் ஆற்காடு பகுதியில் மஞ்சள் குப்பம் கிராமத்தில் வடக்கு பட்டு சுப்பிரமணிய பிள்ளை ஆகஸ்ட் 15, 1883 மகன்தான் வ.சு.செங்கல்வராய பிள்ளை. 1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக்கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.

1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் மெய்யியல் பட்டமும், பின்னர் அதே கல்லூரியில் தமிழ்ல் முதுமாணிப் பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து மலையாளமும், தமிழும் பாடமாக எடுத்து எம்.ஏ. முடித்தார். சென்னை மில்லர் கல்லூரியில் படிக்கும்போது செங்கல்வராய பிள்ளையின் பேராசிரியர்களாக பரிமாற்கலைஞரும், மறைமலையடிகளும் இருந்தனர்.

தனிவாழ்க்கை

1907-ல் தனுக்கொடியைத் திருமணம் செய்தார். தனுக்கொடி இறந்தபின் இரண்டாவது திருமணமும் அவரும் இறந்து போகவே தன் 47 வயதில் மூன்றாவது திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள். எம்.ஏ முடித்த உடன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்து கடைசியில் சென்னை மாநிலப் பத்திரப் பதிவுத் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்து 1938-ல் ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

செங்கல்வராய பிள்ளை நாற்பது நூல்களைப் படைத்துள்ளார். இவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன. பன்னிரு திருமறைகளையும், திருப்புகழையும் படித்துக் குறிப்பு எடுத்திருக்கிறார். திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது. தேவார ஒளிநெறி, திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார்.

விருதுகள்

  • பி.ஏ. படிப்பில் மாநிலத்தில் முதல் நிலை பெற்றதற்காக Frankilin Gell Gold Medal வாங்கினார்.
  • இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் பட்டங்களை வழங்கியது.
  • சித்தாந்த கலாநிதி, செந்தமிழ்மாமதி, தணிகை மணி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
  • தெ.பொ.மீ-யின் பரிந்துரையின் பேரில் 1969-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு பி.லிட் பட்டம் அளித்து கௌரவித்தது.
  • செங்கல்வராய பிள்ளை படைப்புகளை தமிழக அரசு 2010-11 அறிக்கையில் நாட்டுடைமை ஆக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

நூல்கள் பட்டியல்

  • திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்,
  • தணிகைப் பதிகம்,
  • தணிகைத் தசாங்கம்,
  • வேல்ப்பாட்டு,
  • சேவல்பாட்டு,
  • கோழிக்கொடி,
  • தணிகைக் கலிவெண்பா,
  • திருத்தணிகேசர் எம்பாவை,
  • திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி,
  • மஞ்சைப் பாட்டு,
  • வள்ளி திருமணத் தத்துவம்,
  • வள்ளி-கிழவர் வாக்குவாதம்
  • முருகவேள் பன்னிரு திருமுறை

இறுதிக்காலம்

90 வயது வரை வாழ்ந்த செங்கல்வராய பிள்ளை கடைசி வரை தமிழுக்காகப் பணியாற்றியுள்ளார். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் திருவிசைப்பா பற்றி ஆராய்ச்சி நூலை வெளியிட்டிருக்கிறார். ஆகஸ்ட் 25, 1971-ல் காலமானார்.

உசாத்துணை