வேலுச்சாமிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:12, 5 March 2022 by Thirumalai.p (talk | contribs) (வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை

வேலுச்சாமிப்பிள்ளை என்பவர் வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கண சுத்தமாக இயற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் எனும் ஊரில் பிறந்தவர்.

பிறப்பு

இவர் தமிழ் மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை என்பவரின் வழிவந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும் சுந்தரம்மாள் என்பவருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.

கல்வி

இவர் சென்னை மில்லர் கல்லூரியில் ஆங்கிலமும், அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த இவருடைய உறவினர் சின்னசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழும் கற்றார். பின் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் மூன்று ஆண்டுகள் தமிழ் நூல்களை பாடங்கேட்டார். பின் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். இவர் உ.வே.சாமிநாதையரின் வகுப்புத்தோழர். பின் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்த பிறகு சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்கள் பாடங்கேட்டார்.

தனிச்சிறப்பு

இவர் தமிழின் மிகவும் சிக்கலான வெண்பா செய்யுள் வகை மாதிரியை மிக எளிதாகவும், விரைவாகவும் பாடும் திறம் பெற்றிருந்தார். இவரின் திறமையைப்பாரட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் "வெண்பாப்புலி" என்ற சிறப்புப் பெயர் அளித்தார்.

பணி

இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாணவர்களுக்கு தமிழ் நூல்களை பாடம் சொல்ல ஆரம்பித்து பின் இவர் பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 முதல் 1920 வரை 30 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இறப்பு

இவர் தன்னுடைய அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார்.

நூல்கள்

இவர், கந்தபுராணத்தை 5663 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை 22-5-1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார். இவர் தேவாரம் பாடப்பெற்ற திருக்கச்சூர் ஆலக்கோயிலுக்கு "திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்" இயற்றி அரங்கேற்றம் செய்தார்.

  • கந்த புராண வெண்பா [5665 வெண்பா]
  • திருவேட்டக்குடிப் புராணம்
  • தில்லைவிடங்கன் புராணம்
  • திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்
  • தேவார சிவதல புராணம்
  • தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை
  • திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி

உசாத்துணை

தமிழ் மூவர் குறிப்புகள்

தமிழ் புலவர் வரிசை