வெள்ளிவீதியார்

From Tamil Wiki
Revision as of 10:11, 23 September 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

வெள்ளிவீதியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்  ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளிவீதியாரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெண்பாற்புலவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன் என தனது பாடலில் குறிப்பிடுவதைக் கொண்டு வெள்ளிவீதியாரும் ஆதிமந்தியாரும் ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகிறது. வெள்ளிவீதியாரின் பாடல்கள் அனைத்தும் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. வெள்ளிவீதியார், தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றையே பாடல்களாக வடித்துள்ளதாக நச்சினார்க்கினியர் தனது  உரையில் குறிப்பிடுகிறார்.

சங்ககால பெண்பாற் புலவர்களில்  ஒருவரான ஔவையார் இந்த வெள்ளிவீதியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிவீதியார் பாடல்கள்

வெள்ளிவீதியார் இயற்றியதாக கீழ்காணும் 13 பாடல்கள் சங்க இலக்கிய தொகையில் இடம்பெற்றுள்ளன;

  • அகநானூறு 45, 362
  • குறுந்தொகை 27, 44, 58, 130, 146, 149, 169, 386
  • நற்றிணை 70, 335, 348

ஔவையார் பாராட்டு

தலைவன் பொருள்செயப் பிரியப்போவதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். தலைவி தானும் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். அப்போது வெள்ளிவீதி போலச் செல்ல விரும்புகிறேன் என்கிறாள்  (அகம் 147).

ஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது.

பாடல்கள்

சங்க இலக்கிய தொகை நூலில் இடம் பெற்றுள்ள வெள்ளிவீதியாரரின் 13 பாடல்களும் அவற்றிற்கான எளிய பொருளும்;

அகநானூறு 45

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்

ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,

கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,

நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,

ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்

காடு இறந்தனரே, காதலர். மாமை,

அரி நுண் பசலை பாஅய், பீரத்து

எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,

அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்

தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,

புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்

இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,

காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,

ஆதிமந்தி போல, பேதுற்று

அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,

கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,

வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய

உடை மதில் ஓர் அரண் போல,

அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!

(திணை - பாலை)

எளிய பொருள்;

உழிஞ்சில் நெற்று ஆடுகளப் பறை போல ஒலிக்கும் கோடையில் அவர் சென்றார்.

நீர் இல்லாத ஆற்றுவழி அது.

ஆள் நடமாட்டம் இல்லாத வழி அது. உழுவைப்புலி களிற்றைக் கொன்று தின்றுவிட்டுத் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் வழி அது. அவர் சென்ற வழியை எண்ணிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். அதனால் என் மேனியில் பசலை பாய்ந்துவிட்டது. குறுக்கைப் பறந்தலைப் போரில்  திதியனின் காவல் மரமான புன்னையை அன்னி என்பவன் வெட்டிச் சாய்த்தபோது வயிரியர் யாழிசைத்து இன்னிசை எழுப்பியது போல ஊரெல்லாம் வாயினிக்கப் பேசுகிறது. ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன். வானவரம்பன் தாக்கியபோது, ஒரே ஒரு மதிலரணும் உடையும்போது ஊரார் தூங்காமல் கிடந்தது போல நான் உறக்கமின்றிக் கிடக்கிறேன்.

அகநானூறு 362

பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்

தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;

வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,

பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,

முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு

கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை

எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,

நசை தர வந்த நன்னராளன்

நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,

இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;

எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்

சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,

சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்

இலங்கு வெள் அருவி போலவும்,

நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!

(திணை - குறிஞ்சி)

எளிய பொருள்;

ஆற்று வெள்ளம் பாய்ந்து வருகிறது. யானையுடன் போராடிய புலி குகையில் முடங்கிக் கிடக்கிறது. அங்கே அதன் பெண்புலி இருக்கிறது. இந்தக் காட்டு வழியில் யாரும் வருவதில்லை. இப்படிப்பட்ட வழியில் இருட்டிவிட்டதே என்று எண்ணாமல் வேல் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு உன்னை அடையலாம் என்னும் நப்பாசையால் இந்த நன்னராளன் (நல்லவன்) வந்துள்ளான்.

அவன் நினைவு பழுதாகும்படி உன்னை அடையாமல் வெறுமனே திரும்புவானாகில் நான் உன்னுடன் வாழ மாட்டேன்.

குளிர்ந்த சோலையில் கொட்டும் அருவி போல் நிலா வெளிச்சம் இருக்கிறது. நினைத்துப் பார்

குறுந்தொகை 27

கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குலென் மாமைக் கவினே.

(திணை - பாலை)

எளிய பொருள்;

என் மேனி அழகு எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் பயன்படாமல் பசலை தின்றுவிட்டுப் போகட்டும். கன்றுக் குட்டியும் குடிக்காமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நல்ல பசுவின் மடியிலுள்ள இனிய பால் நிலத்தில் கொட்டிவிட்டது போல என் அழகு பயனில்லாமல் போகட்டும்.

குறுந்தொகை 44

காலே பரிதப் பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே

(திணை - பாலை)

எளிய பொருள்;

கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; நிச்சயமாக இந்த உலகத்தில் நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர் அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

குறுந்தொகை 58

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

(திணை - குறிஞ்சி)

எளிய பொருள்;

இடித்துரைக்கும் நண்பரே நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நன்று; எனது விருப்பம் அது; சூரியன் வெயில் எறிக்கும் வெம்மையையுடைய பாறையினிடத்தே கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப்போல என்பாலுண்டான இக்காமநோய் பரவியது; பொறுத்துக்கொண்டு நீக்குதற்கு அரிதாயிருக்கின்றது.

குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரும் உளரோநம் காதலோரே

(திணை - பாலை)

எளிய பொருள்;

தோழி! நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போலப் பூமியைத் தோண்டி உள்ளே புகார்; ஆகாசத்தின் கண் ஏறார்; குறுக்கிடுகின்ற பெரிய கடலின்மேல் காலினால் நடந்து செல்லார்; நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ? இரார்.

குறுந்தொகை 146

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே

(திணை - குறிஞ்சி)

எளிய பொருள்;

தண்டு ஊன்றிய கையும் நரைத்த தலையில் தலைப்பாகையும் கொண்டிருக்கும் முதியவர்கள் அவையாக ஒன்றுகூடி (மணம் பேசும்போது) “நன்று நன்று, இன்று பெரிதும் நல்ல நாள்” எனக் கூறுகின்றனர். நம் ஊரில் பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து வைக்கும் மக்களும் இருக்கிறார்கள் போல் இருக்கிறது

குறுந்தொகை 149

அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை

தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்

தாங்கு மளவைத் தாங்கிக்

காம நெரிதரக் கைந்நில் லாவே.

(திணை - பாலை)

எளிய பொருள்

தோழி! நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் கூடவே இருந்து வருந்தியது. இனிமேல், வெண்ணிறமான பூக்களையுடைய கரும்பிற்குப் போடப்பட்ட உயர்ந்த மணலையுடைய பாத்தி, வெள்ளம் பெருகி வந்ததால் அழிந்து விழுந்ததைப்போல,  பொறுக்கும் அளவிற்குப் பொறுத்து, காமம் நெருங்கித் தாக்கியதால், நாணம் என்பால் நிலைபெறாமல் போய்க்கொண்டிருக்கிறது.

குறுந்தொகை 169

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்

றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்

நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே

பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல

எமக்கும் பெரும்புல வாக

நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே

(திணை - மருதம்)

எளிய பொருள்;

நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள் பாலை நிலத்திற் செல்லும் யானையினது மலையைக் குத்திய கொம்பைப் போல விரைவாக முறிவனவாக; எமது உயிர் பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி உம்மையும் யாம் பெறேமாய் அழிக.

குறுந்தொகை 386

வெண்மணல் விரிந்த வீததை கானல்

தண்ணந் துறைவன் தணவா ஊங்கே

வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்

மாலையோ அறிவேன் மன்னே மாலை

நிலம்பரந் தன்ன புன்கணொடு

புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே

(திணை - நெய்தல்)

எளிய பொருள்

'தோழி! வெள்ளிய மணல் பரவிய மலர்கள் செறிந்த சோலையையுடைய தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன் என்னைப் பிரியாதமுன்காலத்தில் யான்! தூய அணிகலன்களை யணிந்த மகளிர் விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; இனி அது கழிந்தது! அம்மாலைக் காலம் பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு தனிமையைஉடையதாதலை அப்பொழுது அறியேன்.

நற்றிணை 70

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!

துறை போகு அறுவைத் தூ மடி அன்ன

நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!

எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,

சினைக் கௌற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,

அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்

இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

(திணை - மருதம்)

எளிய பொருள்;

சிறிய வெளிய குருகே ! சிறிய வெளிய குருகே ! நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற மடிபோன்ற நன்னிறம் விளங்கிய சிறகினையுடைய சிறிய வெளிய குருகே !; அவ்விடத்துள்ள இனிய புனல் இவ்வூரின்கண்ணே வந்து பரக்கின்ற கழனியையுடைய நல்ல ஊரினையுடைய என் காதலர் பாலேகி; என்னுடைய கலன்கள் கழலுகின்ற துன்பத்தை இதுகாறுஞ் சொல்லாதோய்; நீ எம்மூரினையடைந்து எமது ஒள்ளிய பொய்கையினது துறையிலே புகுந்து துழாவிச் சினையுள்ள கௌ¤ற்றுமீனைத் தின்றனையாகி அப்பால் அவருடைய ஊர்க்குச் செல்வாயாக; எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத்தக்க அனைய அன்பினையுடையையோ ? அன்றேல் பெருமறதியையோ ? ஒன்றினை ஆராய்ந்து கூறிக்காண் !

நற்றிணை 335

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்

பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;

ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்

பல் பூங் கானல் முள் இலைத் தாழை

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு

மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

அன்றிலும் என்புற நரலும்; அன்றி,

விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்

யாமம் உய்யாமை நின்றன்று;

காமம் பெரிதே; களைஞரோ இலரே!

(நெய்தல் - திணை)

எளிய பொருள்;

திங்கள் வானை உழுதுகொண்டிருக்கிறது.

கடல் அலையால் உறங்கவில்லை.

கடலலை (ஓதம்) வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது.

தாழை மணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.

தாழைமேல் இருக்கும் அன்றில் பறவையும் தன் துணையுடன் நரலுகிறது (ஒலித்துக்கொண்டிருக்கிறது.

என் யாழ் என் விரல் தடவாமல் ஏங்குகிறது.

என் காமம் மிகப் பெரியது. அதைக் களைபவர் இல்லை. .

நற்றிணை 348

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,

பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;

ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,

கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;

கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;

யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு

கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:

அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?

உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?

(நெய்தல் - திணை)

எளிய பொருள்;

நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே?

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்