வாசஸ்பதி மிஸ்ரர்

From Tamil Wiki

வாசஸ்பதி மிஸ்ரர் ( பொயு8/9 ஆம் நூற்றாண்டு) வாஸஸ்பதி மிஸ்ரர். இந்திய தத்துவ சிந்தனையாளர். அத்வைத வேதாந்த மரபைச் சேர்ந்தவர். மண்டனமிஸ்ரரின் மாணவர். அத்வைத வேதாந்தத்தில் பாமதி மரபை உருவாக்கியவர். மொழியியலாளர், மீமாம்ச மரபைச் சேர்ந்த இலக்கணநூல்களையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

காலம்

வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரரின் சமகாலத்தவர். சங்கரருடன் விவாதித்து பின் அவருடைய மாணவராகி, வேதாந்த தத்துவஞானியாக ஆன மண்டனமிஸ்ரரின் நேரடி மாணவர். சங்கரரை விட ஒரு தலைமுறை இளையவராக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது

வாசஸ்பதி மிஸ்ரர் அவரே  898 என்னும் தேதியை தன்னுடைய நியாயசூசீநிபந்த என்னும் நூலில் அளிக்கிறார். அது சக ஆண்டா அல்லது விக்ரம ஆண்டா என்ற விவாதம் அறிஞர் நடுவே நீடிக்கிறது. விக்ரம ஆண்டு என்றால் அந்நூல் பொயு 841ல் எழுதப்பட்டது.

வாசஸ்பதி மிஸ்ரர் அவருடைய நூல்களில் பாஸ்கரர், பூஷணர், தர்மோத்தரர் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். பொயு 984ல் வாழ்ந்த உதயணர் வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயவார்த்திக தாத்பரிய டீகா நூலுக்கு நியாயவார்த்திக தாத்பரிய டீகா பரிசுத்தி என்ற பேரில் உரையெழுதியிருக்கிறார்.

வாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி நூலில் உள்ள நூல்களின் மேற்கோள்களில் இருந்து அவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு பிந்தையவர் என்றும் அவர் உதயணருக்கு முன்னால் வாழ்ந்தவர் என்னும் செய்தியால் அவர் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்றும் ஊகிக்கப்படுகிறது. ஆகவே அவர் வாழ்ந்த காலம் பொயும் 841- 900 ஆக இருக்கலாம்.

பின்னாளில் பொயு 1350 வங்காளத்தில் ஒரு வாசஸ்பதி மிஸ்ரர் வாழ்ந்துள்ளார். அவர் ஸ்ரீஹர்ஷரின் கண்டனகண்டகாத்யாய என்னும் மறுப்பு நூலுக்கு கண்டனோத்தாரா என்னும் மறுப்பை எழுதியுள்ளார், அவர் பாமதி மரபுடன் தொடர்புடையவரல்ல.

கல்வி

வாசஸ்பதி மிஸ்ரரின் தொடக்கக் கல்வி மீமாம்சையைச் சார்ந்தது. பட்டமீமாம்சை அறிஞரான மண்டனமிஸ்ரர் அவருடைய நேரடி ஆசிரியர். மண்டனமிஸ்ரர் சங்கரரிடன் வாதத்தில் தோல்வியடைந்து அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார். வாசஸ்பதிமிஸ்ரரும் அம்மரபில் அத்வைத வேதாந்தத்தைச் சார்ந்தவராயினும் பட்டமீமாம்சை, நியாயசாஸ்திரம் இரண்டிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவராக இருந்தார்.

sarva-tantra-sva-tantra.

தனிவாழ்க்கை

வாசஸ்பதி மிஸ்ரர் இன்றைய பிகாரில், மதுபானி என்னும் ஊரில், ஒரு மைதிலி பிராமணக் குடியில் பிறந்தார்.