under review

வள்ளுவர் கோட்டம்

From Tamil Wiki
Revision as of 15:31, 27 July 2022 by Siva Angammal (talk | contribs)
வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். . வள்ளுவர் கோட்டம், சென்னை கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ்  சந்திப்புக்கு அண்மையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

கட்டப்பட்ட காலம்

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கான நினைவிடமாக வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கு 1973- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27- ஆம் நாள் அப்போதைய தமிழ்நாடு  முதல்வர் கலைஞர் மு. கருணாநியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1976- ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் நாள் அப்போதய  இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகம்மதுவால் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

அமைப்பு

வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அமைப்புகள் சிற்பத்தேர் மற்றும் அரங்கம் ஆகும். இவற்றை வடிவமைத்தவர் கணபதி ஸ்தபதி.

சிற்பத் தேர்

வள்ளுவர் கோட்டத்தில் பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு  யானைகள்  இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

சிற்பத் தேர்

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.  எண்கோண  வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் தூண்கள்  அமைந்துள்ளன. இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத்  தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அரங்கம்
திருக்குறள் செதுக்கப்பட்ட கற்பலகை

வள்ளுவர் கோட்டத்தில், 220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இந்த அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.  இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது.  இது குறள் மணிமாடம் என்ற பெயரால்  அழைக்கப்படுகின்றது. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், திருகுறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளன.

வேயா மாடம்

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ்வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தின் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத்தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.

சுற்றாடல்

சிற்பத்தேர் மற்றும் அரங்கத்தைச்  சுற்றியுள்ள பகுதிகளில்,  பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரும் மரங்களும் நடப்பட்டு,  பூங்காவாகப்  பராமரிக்கப்பட்டு வருகின்றது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.