being created

லக்ஷ்மி

From Tamil Wiki
லக்ஷ்மி

லக்ஷ்மி (லட்சுமி) (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பொதுவாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதியவர், தொழில்முறை மகப்பேறு மருத்துவர்.

பிறப்பு, கல்வி

திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட லக்ஷ்மி, மார்ச் 23, 1921 அன்று சீனிவாசன், பட்டம்மாள் (சிவகாமி) தம்பதிக்கு மூத்த மகளாய் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன் ஒரு மருத்துவர்.

சிதம்பரம் அம்மாபேட்டையின் திண்ணை பள்ளியிலும் பின்னர் தொட்டியம் ஆரம்ப பள்ளியிலும் ஆரம்ப கல்வி கற்றார். முசிறி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியின் உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உயர்நிலை கல்வி கற்றார். திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து, பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

லக்ஷ்மி

சென்னையில் மருத்துவராக இருந்த லக்ஷ்மி, இலங்கையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில், தென்னாப்பிரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரும் பத்திரிக்கையாளருமான கண்ணபிரானை சந்தித்தார். 1955ம் ஆண்டு கண்ணபிரானை மணந்து, தென்னாப்பிரிக்காவிற்கு சென்றார். அங்கும் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் உண்டு. லக்ஷ்மியின் கணவர், 1966ம் ஆண்டு மறைந்த பின்பும், 1977 வரை தென்னாப்பிரிக்காவில் பணியாற்றினார். அதன் பின் சென்னையில் தன் வாழ்வின் இறுதி வரை வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

Book.jpg

லக்ஷ்மியின் முதல் சிறுகதை 'தகுந்த தண்டனையா?' ஆனந்த விகடன் இதழில் 1940ம் ஆண்டு வெளியாகியது. இச்சிறுகதை எழுதும் போது அவர் மருத்துவ கல்லூரி மாணவி. கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் வந்த போது, ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. வாசன் அவர்களை சந்தித்து பெற்ற வாய்ப்பினால் இந்த சிறுகதையை எழுதியதாக லக்ஷ்மி கூறியுள்ளார்.

சில சிறுகதைகளுக்கு பின் அவரது முதல் நாவல் 'பவானி'யும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. படிப்பு முடியும் முன்பே 'பெண்மனம்' நாவலும் எழுதினார். லக்ஷ்மியின் பெரும்பான்மையான நாவல்கள் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்தன. மகப்பேறு மருத்துவரான லக்ஷ்மி, தன் துறை சார்ந்து தாய்மை, குழந்தை மருத்துவம் குறித்து ஆறு நூல்கள் எழுதி இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்த போது, தன் அனுபவங்களை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார். இந்த கட்டுரைகள் பின்பு 'தென் ஆப்ரிக்காவில் பல ஆண்டுகள்' என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப் பட்டன. தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பெண்ணான காவிரியின் இந்திய பயண அனுபவங்களை விவரிக்கும் லக்ஷ்மியின் நாவலான 'ஒரு காவிரியை போல', 1984 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இந்த நாவல் குங்குமம் இதழில் தொடராக வெளி வந்தது.

லக்ஷ்மியின் மாணவ பருவத்தில் நம் சமூகத்தின் பெண் கல்வியின் நிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளின் சித்திரம், லக்ஷ்மியின் சுயசரிதையான 'ஒரு கதாசிரியையின் கதை'யில் உள்ளது. குங்குமம் இதழில் தொடராக வெளியான 'ஒரு கதாசிரியையின் கதை' பின்பு நூல் வடிவில் இரு தொகுதிகளாக பூங்கொடி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது.

திரைப்பட பங்களிப்பு

லக்ஷ்மியின் 'பெண் மனம்' நாவல் 'இருவர் உள்ளம்' என்ற பெயரிலும், 'காஞ்சனையின் கனவு' நாவல் 'காஞ்சனா' என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளி வந்தன.

இலக்கிய இடம்

லக்ஷ்மியின் நாவல்கள் குடும்ப பின்னணியில் பெண்களை மையமாக கொண்டு எழுதப்பட்டவை. லக்ஷ்மியின் படைப்புகளில் பெண்கள், பல இன்னல்களை சந்தித்தாலும் தங்களது விழுமியங்களில் சமரசம் செய்யாதவர்களாய் இருந்தனர். அப்போதைய காலகட்டத்தில், அதிகம் வெளி உலகை அறிந்திராத, ஓரளவு வாசிக்கும் பயிற்சி உடைய பெண்களும் லக்ஷ்மியின் கதைகளை படிக்க முடிந்தது. இதனால் பெண்கள் விரும்பும் எழுத்தாளராய் லக்ஷ்மி இருந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன், லக்ஷ்மியின் நாவல்களான 'அரக்கு மாளிகை' மற்றும் 'காஞ்சனையின் கனவு' இரண்டையும் பரப்பிலக்கிய வகையில் சமூக மிகு கற்பனை (social romances) பிரிவில் பட்டியலிடுகிறார்.

மறைவு

லக்ஷ்மி, தேவி வார இதழில் 'இரண்டாவது மலர் ' தொடர்கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். அந்த கதையை, அவரது சகோதரி நித்யா மூர்த்தி எழுதி முடித்தார்.

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சி கழகம் பரிசு, பெண்மனம் நாவலுக்காக
  • தமிழ் வளர்ச்சி கழகம் பரிசு, மிதிலா விலாஸ் நாவலுக்காக
  • இலங்கை தமிழ் மாநாட்டில் பரிசு, தாய்மை மருத்துவ நூலுக்காக
  • சாகித்ய அகாடமி விருது, 1984, ஒரு காவிரியை போல நாவலுக்காக

நூல்கள்

லக்ஷ்மி ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றி ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரை தொகுதிகள், ஆறு மருத்துவ நூல்கள் எழுதியுள்ளார்.

நாவல்கள்

  • அசோகமரம் பூக்கவில்லை
  • அஞ்சனா புரிந்து கொண்டாள்
  • அடுத்த வீடு
  • அத்தை
  • அதிசய ராகம்
  • அந்திக்கால மோகம்
  • அவள் ஒரு தென்றல்
  • அவள் தாயாகிறாள்
  • அவளுக்கென்று ஒரு இடம்
  • அழகின் ஆராதனை
  • அழகு என்னும் தெய்வம்
  • இதோ ஓர் இதயம்
  • இரண்டு பெண்கள்
  • இரண்டாவது மலர்
  • இரண்டாவது தேனிலவு
  • இருளில் தொலைந்த உண்மை
  • இவளா என் மகள்
  • இன்றும் நாளையும்
  • இனிய உணர்வே என்னை கொல்லாதே
  • உயர்வின் குரல்
  • உயர்வு
  • ஊன்றுகோல்
  • எங்கே அவள்
  • என் மனைவி
  • என் வீடு
  • ஒரு காவிரியைப் போல
  • ஒரு சிவப்பு பச்சையாகிறது
  • ஒரு பைங்கிளி
  • கங்கையும் வந்தாள்
  • கடைசிவரை
  • கதவு திறந்தால்
  • கதாசிரியையின் கதை ( 2 பாகங்கள்)
  • கணவன் அமைவதெல்லாம்
  • கழுத்தில் விழுந்த மாலை
  • காஞ்சனையின் கனவு
  • காளியின் கண்கள்
  • காஷ்மீர் கத்தி
  • கூண்டுக்குள்ளே
  • கூறாமல் சன்னியாசம்
  • கைமாறியபோது
  • கோடை மேகங்கள்
  • சூரியகாந்தம்
  • சொர்க்கத்தின் கதவுகள்
  • திரும்பிப் பார்த்தால்
  • நதி மூலம்
  • நல்லதோர் வீணை
  • நாயக்கர் மக்கள்
  • நியாயங்கள் மாறும் போது
  • நிற்க நேரமில்லை
  • நீலப்புடவை
  • பண்ணையார் மகள்
  • பவளமல்லி
  • பவானி
  • புதைமணல்
  • பூக்குழி
  • பெயர் சொல்ல மாட்டேன்
  • பெண் மனம்
  • பெண்ணின் பரிசு
  • மரகதம்
  • மருமகள்
  • மறுபடியுமா?
  • மிதிலா விலாஸ்
  • மீண்டும் ஒரு சீதை
  • மீண்டும் பிறந்தால்
  • மீண்டும் பெண்மனம்
  • மீண்டும் வசந்தம்
  • முருகன் சிரித்தான்
  • மோகத்திரை
  • ராதாவின் திருமணம்
  • ராமராஜ்யம்
  • ரோஜாவைரம்
  • வீரத்தேவன் கோட்டை
  • வாழ நினைத்தால்
  • ஸ்ரீமதி மைதிலி

சிறுகதைகள்

  • தகுந்த தண்டனையா
  • விசித்திர பெண்கள் (சிறுகதை தொகுதி)

உசாத்துணை







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.