under review

ரா.கி.ரங்கராஜன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 98: Line 98:
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}

Revision as of 08:04, 15 June 2022

ரா.கி.ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன்(அமர்ந்திருப்பவர்) நன்றி சொல்வனம்

ரா.கி.ரங்கராஜன் (அக்டோபர் 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதிய எழுத்தாளர். குமுதம் இதழில் உதவியாசிரியராக பணியாற்றிய இதழாளர். ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி முதலிய நாவல்களை தமிழாக்கம் செய்த மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு,கல்வி

ரா.கி.ரங்கராஜன் அக்டோபர் 5, 1927-ல் கும்பகோணத்தில் ராயம்பேட்டை ரெட்டியார்குள வடகரையில் பிறந்தார். தந்தையார் மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சம்ஸ்கிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமஸ்கிருதப் பண்டிதர். ரா.கி.ரங்கராஜனின் தந்தை உபநிடதங்களுக்குத் தமிழில் உரைகள் எழுதியிருக்கிறார். பள்ளியிறுதி முடித்தபின் கல்லூரியில் சேர்ந்த ரா.கி.ரங்கராஜன் படிப்பை முடிக்கவில்லை.

தனிவாழ்க்கை

ரா.கி.ரங்கராஜனின் மனைவிபெயர் கமலா.

இதழியல்

ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன்

கல்லூரி நாட்களிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்திய ரா.கி.ரங்கராஜன் 1946-ல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் ’சக்தி’ வை.கோவிந்தன் நடத்திவந்த ‘காலபைரவன்’ என்னும் மாத இதழில் உதவியாசிரியராக சேர்ந்தார். அப்போது கண்ணதாசன், தமிழ்வாணன், கு.அழகிரிசாமி முதலியோருக்கு நெருக்கமானார். பெரியசாமி தூரன் நடத்திய காலசக்கரம் இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். குமுதம் குழுமம் சிறுவர்களுக்காக நடத்திவந்த ஜிங்லி என்னும் இதழில் ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் குமுதத்தின் ஆசிரியர் குழுமத்தில் இணைந்தார். எஸ்.ஏ.பி.அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன், புனிதன் நால்வரும் குமுதத்தை தமிழகத்தின் முதன்மையான வணிகப்பத்திரிக்கையாக வளர்த்தெடுத்தனர். பதினாறாயிரம் பிரதிகளில் இருந்து ஆறுலட்சம் பிரதிகள் விற்கும் இதழாக குமுதம் மாறியது. ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றினார்.

ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் பல பெயர்களில் பல இதழியல் எழுத்துக்களை எழுதிக்குவித்தார். வினோத் என்னும் பெயரில் திரைச்செய்திகள், கிருஷ்ணகுமார் என்னும் பெயரில் மாயநிகழ்வுகள் எழுதினார். ஹன்ஸா, சூர்யா, மாலதி, அவிட்டம் என அவருடைய புனைபெயர்கள் பல. குமுதத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் ராயப்பேட்டை டைம்ஸ் என்னும் வட்டார இதழிலும் ,துக்ளக் ( டெலி விஷயம்)  கல்கி ( சைட்ஸ் ஆன் )   அண்ணா நகர் டைம்ஸ் (  நாலு மூலை ,)  போன்ற இதழ்களிலும் எழுதி வந்தார்

ரா.கி.ரங்கராஜன் முதல் கதை

இலக்கியவாழ்க்கை

ரா.கி.ரங்கராஜனின் முதல் கதை ‘உடன்பிறப்பு’ஆனந்த விகடனில் ஜனவரி 26, 1947-ல் ஸிம்ஹாவின் ஓவியத்துடன் வெளியாகியது. குமுதத்தில் வெளியான ’அடிமையின் காதல்’ என்னும் சரித்திரநாவல் அவர் எழுதிய முதல் தொடர். சென்னை ஆங்கிலேயர் கைக்குச் செல்வதற்கு முன் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அடிமைவணிகம் பற்றிய கதை அது. அதன்பின் பலபெயர்களில் பல தொடர்கதைக்களை எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகளில் படகுவீடு, புரபசர் மித்ரா, கையில்லாத பொம்மை, பதினெட்டாவது படி ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. கடைசியாக அவர் ஆனந்த விகடனில் எழுதிய ‘நான் கிருஷ்ணதேவராயன்’ என்னும் நாவலும் புகழ்பெற்றது.

ரா.கி.ரங்கராஜன் கதை அறிவிப்பு 1958
மொழியாக்கம்

ரா.கி.ரங்கராஜன் புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். அவருடையது மூலத்தை தழுவி எழுதும் பாணி. ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் தன்வரலாற்று நாவலை 1972-ல் பட்டாம்பூச்சி என்ற பெயரில் அவர் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். ஜெயராஜ் வரைந்த நிழல்வெட்டு ஓவியங்களுடன் வந்த மிகப்புகழ்பெற்ற தொடர் அது. (பார்க்க பட்டாம்பூச்சி)

கட்டுரைகள்

ரா.கி.ரங்கராஜன் புகழ்பெற்ற கட்டுரைத்தொடர்களையும் எழுதியிருக்கிறார். நீங்களும் முதல்வராகலாம், எங்கிருந்து வருகுவதோ போன்ற கட்டுரைகள் பரவலாக வாசிக்கப்பட்டவை. பெரியசாமித் தூரன் பற்றி ‘தூரன் என்னும் களஞ்சியம்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார்

திரைப்படம்

ரா.கி.ரங்கராஜனின் படகுவீடு என்னும் நாவல் சுமைதாங்கி(1962) என்னும் பெயரில் திரைப்படம் ஆகியிருக்கிறது. மகாநதி உடபட பல படங்களின் விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.

மறைவு

ரா.கி.ரங்கராஜன் ஆகஸ்ட் 18, 2012-ல் மறைந்தார்.

நூல்கள்

நாவல்கள்
  • உள்ளேன் அம்மா
  • ஊஞ்சல்
  • ஒரு தாய், ஒரு மகள்
  • தர்மங்கள் சிரிக்கின்றன
  • நான் கிருஷ்ண தேவராயன் - 1
  • நான் கிருஷ்ண தேவராயன் - 2
  • படகு வீடு
  • மூவிரண்டு ஏழு
  • வயது பதினேழு
  • புரொபசர் மித்ரா
  • சின்னக் கமலா
  • மறுபடியும் தேவகி
  • பல்லக்கு
  • அடிமையின் காதல்
  • இது சத்தியம்
  • முதல் மொட்டு
  • அழைப்பிதழ்
  • ராசி
  • கையில்லாத பொம்மை
  • ஒளிவதற்கு இடமில்லை (1,2)
  • ஹவுஸ்ஃபுல்
  • ஒரு தற்கொலை நடக்கப் போகிறது
  • விஜி
  • இன்னொருத்தி
  • நாலு திசையிலும் சந்தோஷம்
  • ஒரே ஒரு வழி
  • பந்தயம் ஒரு விரல்
  • ஹேமா ஹேமா ஹேமா
  • அழைப்பிதழ்
  • ஒரு தாய் ஒரு மகள்
  • ஹவுஸ்புல்
கதைகள்
  • கன்னா பின்னா கதைகள்
  • காதல் கதைகள்
  • திக்-திக் கதைகள்
  • ட்விஸ்ட் கதைகள்
  • கோஸ்ட்
  • க்ரைம்
கட்டுரைகள்
  • எப்படிக் கதை எழுதுவது
  • அடிகளார் ஓர் உறவுப் பாலம்
  • தூரன் என்ற களஞ்சியம்
  • நான் ஏன்?
  • எங்கிருந்து வருகுவதோ?
  • ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
  • நீங்களும் முதல்வராகலாம்
  • அங்குமிங்குமெங்கும்
  • அவன்
  • நாலு மூலை
மொழியாக்கங்கள்
  • Papillon - Henri Charrière (பட்டாம்பூச்சி)
  • If Tomorrow Comes - Sidney Sheldon (தாரகை),
  • The Stars Shine Down - Sidney Sheldon (லாரா)
  • Rage of Angels - Sidney Sheldon (ஜெனிஃபர்)
  • A Twist in the Tale - Jeffrey Archer (டுவிஸ்ட் கதைகள்)
  • The Terminal Man - Michael Crichton (அபாய நோயாளி)
  • Invisible Man - Ralph Ellison (கண்ணுக்குத்தெரியாதவன் காதலிக்கிறான்)
  • The Master-Christian - Marie Corelli (புரட்சித்துறவி)
  • The Convict -Felix Milani (இன்னொரு பட்டாம்பூச்சி )

உசாத்துணை


✅Finalised Page