under review

ம.வே.பசுபதி

From Tamil Wiki
Revision as of 10:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ம.வே.பசுபதி
ம.வே.பசுபதி1

ம.வே.பசுபதி (ஆகஸ்ட் 21, 1942-ஜனவரி 29,2022 ). தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர்.பழஞ்சுவடிகளை ஆராய்ந்து, பல உரை நூல்களை எழுதிய தமிழறிஞர். பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார். உ.வே.சா நூலகத்தின் காப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தமிழ்ப்பணிகளுக்காக தமிழக அரசின் உ.வே.சா விருதைப் பெற்றார்

பிறப்பு, கல்வி

ம.வே.பசுபதி (மந்திரவேதி வேங்கடராமையா பசுபதி) கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் ஆகஸ்ட் 21, 1942 அன்று கல்வெட்டாய்வாளரும், தமிழறிஞமான கா.ம.வேங்கடராமையா வுக்கும் அன்னபூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

தனி வாழ்க்கை

ம.வே.பசுபதி 1961 முதல் 1967 வரை அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1967 முதல் 1987 வரை தாம் படித்த திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி 1988 முதல் 2001 வரை அக்கல்லூரியின் முதல்வர் நிலையில் பணியாற்றினார். 2000-ம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.2002-ம் ஆண்டில் உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் (curator) பொறுப்பேற்றார்.

இலக்கியப் பணி

tamildigitallibrary.in
ஸ்ரீ குமரகுருபரர் மார்கழி 1987

ம.வே.பசுபதி ஓலைச்சுவடிகளிலிருந்து 23 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 15 சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார். பழந்தமிழ் நூல்களை மூலங்களுடன் ஒப்பிட்டு, பாடபேதம் நோக்கிப் பதிப்பிப்பதில் நிபுணர் என அறியப்பட்டார்

உ.வே.சா நூலகப் பணிகள்

உ.வே.சா நூலகத்தில் பணியில் இருக்கையில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் உரைநடை நூல்களைப் பதிப்பித்து நான்கு பகுதிகளாக வெளியிட்டார். பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது.

செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்னும் தலைப்பில் தமிழின் தொன்மையான இலக்கண இலக்கிய நூல்களை நாற்பத்தொரு தொகுதிகளாக வெளியிட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்புப் பதிப்பு பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடி மூலங்களுடன் விரிவாக ஒப்பிட்டு முறையான பாடவேறுபாட்டுக்குறிகளுடன் வெளிவந்துள்ள மாபெரும் ஆய்வுத் தொகை. சென்ற ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்த முதன்மையான ஆய்வுப்பணியாக இது கருதப்படுகிறது. இப்பதிப்பில் பழந்தமிழிலக்கியங்கள் முறையாகப் பதப்பிரிப்பு செய்யப்பட்டிருந்தன.

இதழியல்

பசுபதி திருப்பனந்தாள் மடம் வெளியிட்ட குமரகுருபரர் என்னும் சைவ இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

சொற்பொழிவு

ம.வே.பசுபதி புகழ்பெற்ற இலக்கிய சொற்பொழிவாளர். தமிழ் பக்தி இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து ஏராளமான உரைகளை ஆற்றியிருக்கிறார்

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் திரு.வி.க.வின் மேடைத் தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொலைக்காட்சிகளில் அவரது பல உரைகள் ஒளிபரப்பாகியிருக்கின்றன.

இலக்கியச் செயல்பாடுகள்

தனது தந்தையார் கல்வெட்டாரய்ச்சியாளர் மற்றும் தமிழறிஞராகிய கா.ம. வேங்கடராமையா வின் வலைத்தளத்தை உருவாக்கி நிர்வகித்தார். தேசியசிந்தனைக் கழகம் என்னும் கலாச்சார அமைப்பின் மாநிலத்தலைவராக பணியாற்றினார்.

விருதுகள்

அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்மைக்காக 2013 -ம் ஆண்டு தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றார்.

இறப்பு

ம.வே.பசுபதி ஜனவரி 29,2022 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

ம.வே.பசுபதி தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் முன்னர் பார்வைக்கு வராத பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகளை தொகுத்து, உரியவற்றை தேர்வுசெய்து, ஏற்கனவே வெளிவந்த பதிப்புகளின் பாடபேதங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவர் 'செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்' 21-ம் நூற்றாண்டு தமிழ் பதிப்பியக்கத்தின் முதன்மைச் சாதனை.

படைப்புகள்

  • பெயரகராதி
  • நீதி நூல்கள் விளக்கவுரை
  • கவிஞனின் சுவைநயம்
  • பாவேந்தரின் பாநயம்
  • கம்ப சிகரங்கள்
  • புதிய திருவள்ளுவமாலை
  • அகராதி நிகண்டு
  • விசேடன விளக்கம்
  • மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது
  • பண விடு தூது( 3 நூல்கள்)
  • மூவருலா
  • பாடு மொழிப் பதினெட்டு
  • திருப்புடை மருதூர் புராணம்
  • ஒருத்துறைக் கோவை இரண்டு
  • யாப்பருங்கலக் காரிகை புத்துரை
  • சுபத்திரை கல்யாணம்
  • உமையம்மை திருப்புகழ்
  • சண்முகப் பாட்டியல் பொருத்த வினா விடை
  • கிருஷ்ண லீலை
  • கற்பகவல்லி நாயகி மாலை

விருதுகள்,பரிசுகள்

தமிழக அரசின் உ.வே.சா விருது(2013)

உசாத்துணை


✅Finalised Page