ம.ந.ராமசாமி
ம.ந.ராமசாமி ( 1927- தமிழ் எழுத்தாளர். கல்கி, கணையாழி முதலான இதழ்களில் சிறுகதைகளும் இலக்கியவிமர்சனக் குறிப்புகளும் எழுதியவர். ஆங்கிலத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்களும் செய்திருக்கிறார்.
பிறப்பு, கல்வி
ம.ந.ராமசாமி 15 மே 1927ல் மானாமதுரையில் பிறந்தார். மானாமதுரையில் ஆரம்பப்பள்ளிக் கல்வி. தாராபுரத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ராணுவ வீரர்களுக்கான கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். பின்னர் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
ம.ந.ராமசாமியின் முதல்கதை ‘தியாகி யார்?’ 1947ல் நவயுவன் என்னும் இதழில் வெளியாகியது. தொடர்ந்து கல்கி , கலைமகள், சிவாஜி, செம்மலர் முதலிய இதழ்களில் சிறுகதைகளை எழுதினார். வாழத்துடிப்பவர்கள் முதல் சிறுகதைத் தொகுதி. இவர் கணையாழி இதழில் எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை விவாதங்களை உருவாக்கியது. அதில் தந்தைக்கு சிரார்த்தம் செய்யும் மகன் அதிலுள்ள ’யன்மே மாதா பிரலுலோபசரதி’ என்னும் மந்திரம் (என் தாய் மாறானவழியில் என்னை பெற்றிருந்தாலும்) தன் தாயை அவமதிப்பது என்றும், தன் தாய் தன்னை குழந்தைப்பருவம் முதல் பேணிவளர்த்தவள் என்றும், பெண்ணைப்பழிக்கும் அந்த மந்திரத்தைச் சொல்லமுடியாது என்றும் கூச்சலிட்டு புரோகிதர்களை அனுப்பி வைக்கிறான். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட மந்திரங்கள் நவீன கால மனிதனுக்கு எதற்கு என்கிறான். ம.ந.ராமசாமியின் படைப்புகளில் பரவலாக அறியப்பட்டது இது ஒன்றே.
ம.ந.ராமசாமி திருவாழத்தான் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார்.
நூல்கள்
சிறுகதை
- வாழத்துடிப்பவர்கள்
- அன்னம்மா
- ரத்திக்கல்குவியல்
- பாகிஸ்தானிலிருந்து
- குலக்கொடி
நாவல்கள்
- சிரிப்பின் நிழல்
- நாதலயம்
- நாலாவான்
- மந்திரபுஷ்பம்
- தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை
- சதுரங்கப்பட்டணம்
- கனவுபூமி
குறுநாவல்கள்
- மாதே ஸ்வதந்திரதேசம்
- அறுபத்தொன்பது விழுக்காடு
- ஓவியங்கள் நிறைந்த அறை
- ஜீவாத்மா