being created

மௌனி

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

Work in process, being created by User:Kalpakam

மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) மணிக்கொடி இதழில் எழுதிய தமிழ் எழுத்தாளர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் தறிக்கெட்ட தன்மையை தேர்ந்த மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, 1907ம் ஆண்டு, ஜூலை 27, தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியில் பிறந்தார். உயர் நிலைக் கல்வி வரை கும்பகோணத்தில் பயின்றார். பின் 1929ம் ஆண்டு, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருக்கு மௌனி என்ற புனைபெயரை சூட்டியது மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா.

தனி வாழ்க்கை

திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மௌனியின் முதல் மகனும் மூன்றாவது மகனும் விபத்துக்களில் மரணமடைந்து விட்டனர். தத்துவத்தில் உயர் படிப்பு படித்த இரண்டாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து ஜூலை 6, 1985 காலமானார்.

இலக்கிய படைப்புகள்

கும்பகோணத்தில் நடந்த ஒரு மகாமகம் விழாவில் மௌனியை தற்செயலாக சந்தித்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா, அவரை கதை எழுத சொன்னதாக மௌனியே பதிவு செய்திருக்கிறார். அதன் பின், மௌனியின் முதல் கதை 'ஏன்?', 1936ம் ஆண்டு பிப்ரவரி மாத மணிக்கொடி இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தேர், பிரபஞ்ச கானம் என்ற கதைகள் மணிக்கொடியில் வெளியாயின.

புத்திர சோகம் சூழ்ந்த அவரது வாழ்க்கை, வாழ்வின் நிச்சயமின்மை குறித்து அவரை எழுத தூண்டியிருக்கலாம். மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள்.

இலக்கிய இடம்

மௌனியின் இலக்கிய இடம் பற்றிய மதிப்பீடுகள் இரு எல்லைகளில் நிலைபெறுகின்றன. புதுமைப்பித்தன் இவரை "சிறுகதையின் திருமூலர்" என்று "மௌனியின் சிறுகதைகள்" தொகுப்பில் குறிப்பிடுகிறார். மறு எல்லையில் கைலாசபதி, தி.க. சிவசங்கரன், கு. அழகிரிசாமி போன்றோர் மௌனியை மேட்டிமைவாதம், இருண்மைவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கண்டனர்.

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய "மௌனியும் எம்.வி.வியும்" கட்டுரை மௌனி என்னும் தொன்மத்தை கட்டுடைத்ததாகவே கௌள்ளலாம். இந்த இரு எல்லைகளுக்கு நடுவே நின்று மௌனியின் மீதான முக்கிய விமர்சனமாக இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமார் எழுதி, பின் வானதி பதிப்பக வெளியீடான "மௌனியுடன் கொஞ்சம் தூரம்" கட்டுரையை கொள்ளலாம்.

மௌனிக்கு மேலை இலக்கியத்தில், குறிப்பாக காஃப்காவின் மீது ஈடுபாடு இருந்தது. இருப்பினும், அழகியல் ரீதியாக மௌனியின் கதைகளை காஃப்கா கதைகளுடன் ஒப்பிடக் கூடாது என்று திலீப் குமார் கூறுகிறார். ஜெயமோகன் மௌனியின் அழகியலில் ஆதிக்கம் செலுத்தியவராக பிரிட்டிஷ் கவிஞர் ராபர்ட் பௌரவுனிங்கை குறிப்பிடுகிறார். சுந்தர ராமசாமியை கவர்ந்தது மௌனியின் கதை வடிவங்களே.

நடுத்தர வர்கத்தினர் நவீன கல்வி பெற்ற போது கண்ட ஆண், பெண் உறவு, அதன் மீதான தயக்கங்கள், அதன் விளைவான பகற்கனவுகளினால் ஆன உலகமே மௌனியின் பெரும்பாலான கதை உலகம். அவரது பாத்திரங்கள், இனம்புரியாத ஒரு பிரமிப்பு நிலையை அல்லது துக்கத்தை வகுத்து சொல்ல இயலாமல் தவிப்பவை. அந்த தவிப்பின் சில தருணங்களை கச்சிதமான மொழியில் அவரால் நமக்கு கடத்தி விட முடிவதே அவரது கதைகளின் வெற்றி.

படைப்புகள்

சிறுகதைகள்

  • ஏன்? (1936)
  • பிரபஞ்சகானம் (1936)
  • குடும்பத்தேர் (1936)
  • காதல்சாலை (1936)
  • கொஞ்சதூரம் (1936)
  • சுந்தரி (1936)
  • அழியாச்சுடர் (1937)
  • மாறுதல் (1937)
  • நினைவுச்சுழல் (1937)
  • மாபெருங்காவியம் (1937)
  • மிஸ்டேக் (1937)
  • சிகிச்சை (1937)
  • எங்கிருந்தோ வந்தான் (1937)
  • இந்நேரம், இந்நேரம் (1937)
  • மாறாட்டம் (1938)
  • நினைவுச்சுவடு (1948)
  • மனக்கோலம் (1948)
  • சாவில் பறந்த சிருஷ்டி (1954)
  • குடை நிழல் (1959)
  • பிரக்ஞை வெளியில் (1960)
  • மனக்கோட்டை (1963)
  • உறவு, பந்தம், பாசம் (1968)
  • அத்துவானவெளி (1968)
  • தவறு (1971)

கட்டுரைகள்

  • எனக்கு பெயர் வைத்தவர், பி.எஸ். ராமையா மணி விழா மலர், 1965.
  • செம்மங்குடி தன் ஊர் தேடல், ஆனந்த விகடன், 1968.

மொழிபெயர்ப்புகள்

மௌனியின் 11 சிறுகதைகளை ஆங்கிலத்தில் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழி பெயர்த்துள்ளார். மௌனியின் மாபெருங்காவியம் சிறுகதையை என். பானுமதி மொழி பெயர்த்துள்ளார்.

  • A Great Epic (மாபெருங்காவியம்) by N Banumathy
  • Mauni: A writers' writer, Chennai : Katha (2004)

உசாத்துணை

  • என் இலக்கிய நண்பர்கள், எம்.வி. வெங்கட்ராம்
  • மௌனி படைப்புகள், காலச்சுவடு பதிப்பகம், 2010