under review

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:40, 27 August 2022 by Siva Angammal (talk | contribs)
மே.வீ. வேணுகோபால பிள்ளை

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (ஆகஸ்ட் 31, 1896 - பெப்ரவரி 4, 1985), தமிழ் படைப்பாளர் மற்றும்  பதிப்பாசிரியர். 'இலக்கணத் தாத்தா' மற்றும்  'மகாவித்வான்'  என அழைக்கப்பெற்றவர்.

பிறப்பும் இளமையும்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சென்னை, சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையம் எனும் சிற்றூரில் வீராசாமி - பாக்கியம் தம்பதியருக்கு 1896- ஆம் ஆண்டு   ஆகஸ்ட் மாதம் 31- ஆம் நாள்  பிறந்தார். தொடக்கக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் பயின்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னை, வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற்றினார். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் கா. ர. கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். கலாநிலையம் சேசாச்சல ஐயர் நடத்திய இரவுப் பள்ளியில் ஆங்கிலம் கற்றார். அதன்பின் வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றார்.

ஆற்றிய பணிகள்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (நன்றி: இந்து தமிழ் திசை)

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சென்னை, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீசியசு உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அரசாங்க இலக்கிய, இலக்கணப் பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட திருவாய்மொழி ஈண்டின் தமிழாக்கம் நூலின் பத்துத் தொகுதிக்கும் பதிப்பாசிரியராக விளங்கியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணப் பதிப்புக் குழுவில் உறுப்பினராகவும், புரசைவாக்கம், குருகுல மதக்கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வித்துவான் தேர்விற்குத் தனிவகுப்புகள் நடத்தியுள்ளார்.  இந்தப் பயிற்சி வகுப்புகளை இலவசமாகவே அவர் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பொருளாதாரச் சூழல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணமே அவரது மாலை நேர வகுப்புகளுக்கான காரணம். அவரிடம் பயின்ற தமிழ் மாணவர்கள் பலரும் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

நூல் பணிகள்

புதிய தமிழ் வாசகம்

1938- ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகிய மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சொந்தமாகப் புத்தகங்களை எழுதி பதிப்பிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்கள் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. அவரது இலக்கண தேர்ச்சியைப் பதிப்பாளர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழறிஞர்கள் பலர் தங்களது நூல்களைப் பதிப்பிக்கும் முன்னர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் அளித்து செப்பம் செய்துகொண்டனர். இரண்டாம் உலகப் போரின்போது சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு இடம்பெயர்ந்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சமண சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சீவக சிந்தாமணி குறித்த சொற்பொழிவுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டார். அந்நிகழ்வின்போது, ‘சிந்தாமணிச் செல்வர்’ என்று மே.வீ. வேணுகோபாலப் பிள்ளைக்குப் பட்டம் அளித்துப் பாராட்டினார் திரு.வி.க.

யாப்பருங்கல பழைய விருத்தியுரை பதிப்புகளின் பிழைகளை நீக்கி, விளக்கக் குறிப்புகளையும் சேர்த்து மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த வடிவம்தான் தமிழக அரசால் 1960-ல் வெளியிடப்பட்டது. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த நூல்வடிவத்தையும் அரசு வெளியிட்ட நூலையும் இரா. இளங்குமரன் ஒப்புநோக்கித் திருத்தங்கள் செய்த செம்பதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தான் செம்மைப்படுத்திய யாப்பருங்கல உரைநூலுக்கு முன்னுரையாக மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை எழுதிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில், அவருக்கு முன்பு 1916- ஆம் ஆண்டிலேயே யாப்பருங்கலத்தை நூலாக வெளியிட்ட பதிப்புச்செம்மல் சரவண பவானந்தத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம்  யாப்பருங்கலக்காரிகை நூலை வெளியிட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள் பதிப்பு செய்துள்ளது.

பாராட்டு

செக்கோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்த திராவிட மொழி ஆராய்ச்சியாளர் பேரறிஞர் கமில் சுவலபில், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின்  மாணவர்களில் ஒருவர். தமிழக சித்தர்கள் பற்றிய அவரது நூலின் தொடக்கமே மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை பற்றிய வியப்பும் நன்றியுமாகத்தான் இருக்கிறது. ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற குறுந்தொகைப் பாடலின் அடிப்படையாகக் கொண்டு இறையனார், தருமி, நக்கீரர் ஆகியோரைப் பற்றி விவாதிக்கும் கமில் சுவலபிலின் கட்டுரை, மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை எழுதிய ‘தமிழ் அன்றும் இன்றும்’ நூலைச் சான்றாகக் கொண்டது. அக்கட்டுரையிலும் தனது பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர்களில் ஒருவர் என்று மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கமில் சுவலபில்.

பதிப்பித்த நூல்கள்

யாப்பருங்கலக் காரிகை

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் நூல்களை பதிப்பித்துள்ளார்;

எழுதிய நூல்கள்

தமிழ் அன்றும் இன்றும்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் நூல்களை எழுதியுள்ளார்;

  • அம்பலவாணன் (நாவல்)
  • அரிச்சந்திர புராணச் சுருக்கம்
  • அராபிக் கதைகள்
  • அற்புத விளக்கு
  • இளங்கோவன் (நாவல்)
  • கம்பராமாயணம் ( பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை வசனங்களாக )
  • குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
  • கொதிக்கும்மனம் (காந்தியின் மறைவு பற்றிய கவிதை நூல்) 1948 பிப்ரவரி, திராவிடர் கழகம், காஞ்சிபுரம்.
  • பத்திராயு (அ) ஆட்சிக்குரியோர்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • திருக்கண்ணபிரானார்
  • துருவன்
  • விமலன்

விருதுகள்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை கீழ்காணும் விருதுகளைப் பெற்றுள்ளார்;

  • திருப்பனந்தாள் காசிமடத்தில் 1967 அக்டோபர் 29 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணா  'செந்தமிழ்க் களஞ்சியம்' எனும் விருது வழங்கினார்
  • தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிய  'கலைமாமணி'  விருது
  • 1981 இல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம்   வழங்கிய டாக்டர் பட்டம் (D.Litt).
  • மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய, 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது.

மறைவு

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, 1985- ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  4- ஆம் நாள் காலமானார்.

மேற்கோள்கள்

  • மே. வீ. வேணுகோபால் பிள்ளையின்  பதிப்புத் தொழில் தமிழ்வட்டம் - முதல் ஆண்டுவிழா மலர் கட்டுரை, பக்கம்-43.
  • அ. ம. சத்தியமூர்த்தி, "தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்" - பக்கம்-140.

உசாத் துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.