under review

மு. நல்லதம்பி

From Tamil Wiki
Revision as of 19:31, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
மு. நல்லதம்பி

மு. நல்லதம்பி (செப்டம்பர் 13, 1896 - மே 8, 1951) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். இலங்கையின் நாட்டுப்பண்ணை தமிழில் மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. நல்லதம்பி இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் சிந்துபுரம் என்ற கிராமத்தில் முருகுப்பிள்ளை, தங்கம்மையார் இணையருக்கு ஏழாவது மகனாக செப்டம்பர் 13, 1896-ல் பிறந்தார். தந்தை திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார்.இளமையில் வட்டுக்கோட்டையில் கல்வி பயின்றார். தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தரக் கல்வி பயின்றார். தென்கோவை ச. கந்தையாபிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும் சங்க நூல்களையும் பாடங்கேட்டுக் கற்றார். இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் தத்துவங்களைப் பற்றியும் கற்றார்.

ஆசிரியப்பணி

மு. நல்லதம்பி 1914-ல் தெல்லிப்பழையில் அமைந்திருந்த போதனமுறைப் பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயிற்சிபெற்ற தமிழாசிரியரானர். பண்டத்தரிப்பு, மண்டை தீவு, ஆனக்கோட்டை ஆகிய ஊர்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1918-ல் கொழும்புச் சகிராக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பதவியேற்று இருபத்தெட்டு ஆண்டுகள் வரை கல்வி பயிற்றுவித்தார். 1945-ல் ஆசிரியப்பணியிலிருந்து ஒய்வு பெற்றார். ஓய்வு பெற்றபின் இலங்கைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ் விரிவுரையாளராகச் சில ஆண்டுகளுக்கு நியமித்தது. கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பலர் இவரிடம் தமிழ் நூல்களை முறையாகக் கற்றனர்.

இலக்கிய வாழ்க்கை

மு. நல்லதம்பி இளமைக் காலத்தில் கவிகள் எழுதினார். தமிழுணர்வுப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றினார். நாடகங்களில் விகடனாகப் பாத்திரம் ஏற்று நடித்தார். பத்திரிகைகளுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதினார். பல ஆண்டுகளாகக் கல்வி பயிற்றுவித்த அனுபவத்தைக்கொண்டு ’ஈழவாசகம்’ என்னும் நூலை எழுதினார். இப்பாடநூல் வரிசையை சென்னை மாக்மில்லன் கம்பனியாளர் பெற்றுத் தமது பதிப்பாக வெளியிட்டனர். சிறுவர்களுக்கான எளிய பாடல்களை இயற்றினார். இவருடைய பாடல்கள் பல பாடப் புத்தகங்களில் வெளிவந்தன. இவரால் இயற்றப்பட்ட பாடல்கள் சில 'இளைஞர் விருந்து' என்ற பெயருடன் வட்டுக்கோட்டை இளைஞர் மன்றத்தினரால் வெளியிடப்பட்டன. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இலங்கை நாட்டுப்பண் தமிழிலும்

இலங்கை நாட்டுப்பண்

மு. நல்லதம்பி 1940-ல் ஆனந்த சமரக்கோன் சிங்கள மொழியில் எழுதிய இலங்கை நாட்டுப்பண்ணை 1950-ல் தமிழில்(சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1975-ல் தேசிய பொதுக்கல்வித்தராதரப் பத்திர தமிழ்ப்பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் தமிழில் பதியப்பட்டது.

விருது

1950-ல் இலங்கைச் சுதந்திர விழாவை முன்னிட்டு நடைபெற்ற "மரதன் தமிழ்க் கவிதைப் போட்டியில் 'மணித்தாய் நாடும் மரதனுேட்டமும்' என்னும் நூலுக்காக முதல் பரிசு பெற்றர்.

மறைவு

மு. நல்லதம்பி மே 8, 1951 அன்று காலமானார்.

நூல் பட்டியல்

  • மணித்தாய் நாடும் மரதனோட்டமும்
  • மொழிப் பயிற்சி
கவிதை
  • பாரதியார்
பதிப்பித்தவை
  • ஈழவாசகம்

உசாத்துணை



✅Finalised Page