மு. கதிரேசன் செட்டியார்
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்டவர். சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு அவர் மொழிபெயர்த்த நூல்கள் மூலமும் தமிழில் வடசொற்களின் ஆய்விற்காகவும், சைவ சமய இலக்கியத்திற்காகவும், பழந்தமிழ் நூல்களின் உரைக்காகவும் பண்டிதமணி தமிழிலக்கியத்தில் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் மகிபாலன்பட்டி என்ற ஊரில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கும், சிவப்பி ஆச்சிக்கும் செப்டம்பர் 16, 1881இல் கதிரேசன் பிறந்தார். கதிரேசன் குழந்தையாய் இருந்தபோது இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் 7 வயது வரை பள்ளிக்கூடம் போக வில்லை. நகரத்தார் தங்களின் தொழிலுக்கேற்ற படிப்பை விரும்பியதாலும், செட்டிநாட்டில் எண்சுவடிப் படிப்புக்கு முக்கியத்துவம் என்பதாலும் ஊரிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கடல் கடந்து சென்று தொழில் செய்வது வழக்கமாகையால் கதிரேசனும் 11ஆம் வயதில் இலங்கை, நுவரேலியாவில் இருந்த ஒரு வியாபாரியிடம் மூன்று வருடம் வேலை பார்த்தார். 14 வயதில் தந்தை இறந்ததால் மகிபாலன்பட்டிக்குத் திரும்பினார். கதிரேசன் ஊருக்கு வந்தபின் வேறு வேலை செய்யவில்லை. இளம்பிள்ளைவாதம் அவரை மறுபடியும் பீடித்ததால் 14 வயதில் கோலூன்றி நடக்கவேண்டியதாயிற்று. கதிரேசன் வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்தார்.
இக்காலத்தில் இவர் முறைப்படியாக யாரிடமும் படிக்கவில்லை என்றாலும் சோழவந்தான் மகாவித்துவான் அரசன் சண்முகனாரிடம் தொல்காப்பியம் பாடம் கேட்டார். தருவை நாராயண சாஸ்திரியிடம் சமஸ்கிருதமொழியை ஐந்து ஆண்டுகள் முறையாக படித்திருக்கிறார். காரைக்குடி சொக்கலிங்கம் என்பவரிடம் சைவ சமய இலக்கியங்களைப் பாடம் கேட்டிருக்கிறார். ஆத்திசூடி, உலக நீதி, படிப்படியாகத் திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆகியவற்றைத் தாமே ஓதி உணர்ந்தார். தொல்காப்பியத்தையும் அதற்கான சேனாவரையரின் உரையையும் தன் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார்.
தனிவாழ்க்கை
1912இல் இவர் தன் அத்தை மகள் மீனாட்சியை மணம் புரிந்தார். இவர்களுக்கு ஏழு மக்கள். பண்டிதமணி 1934 முதல் 1946 வரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பண்டிதமணியின் சமஸ்கிருதப் புலமை பெற்றிருந்தார். 1934இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆசிரியராவதற்கு முன்பே பாடத்திட்டக் குழுவில் இருந்த பண்டிதமணி ஓய்வுபெற்ற பின்பும் 1946வரை இதே பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
இலக்கியவாழ்க்கை
தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்டவர். எழுதுவதை விடவும் சொற்பொழிவாற்றுவதில் ஈடுபாடு கொண்டவர். இவருடைய சொற்பொழிவுகள் நூல்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் சிலவும் கடிதங்களும், மாலதி மாதவம் என்ற மொழிபெயர்ப்பும் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன. சைவ சமயத்தின் மீது பற்றுக் கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார்.
மொழியாக்கம்
பண்டிதமணியின் முக்கியப் பங்களிப்பாகச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு அவர் மொழிபெயர்த்த நூல்களைச் சொல்லலாம். அவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் மண்ணியல் சிறுதேர், சுக்கிர நீதி, அர்த்த சாஸ்திரம், சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப சரித்திரம் ஆகியன.
கவி பாசன் எழுதிய ’சாருதத்தம்’ என்ற நாடகத்தை, சூத்திரசன் என்பவர் மிருச்சகடிகா என்ற பெயரில் நாடகமாக்கினார். இதையே பண்டிதமணி ’மண்ணியல் சிறுதேர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். நாடகம் எழுபதுகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இருந்தது. இந்நூலின் மூல உரையாடல் பகுதிகளை உரைநடை வடிவிலும், மூலப்பாடல்களைச் செய்யுள் வடிவிலும் மொழிபெயர்த்துள்ளார். சுக்கிர நீதி நூலைப் பண்டிதமணி மொழிபெயர்த்தபோது, உ.வே.சா. வின் வலியுறுத்தலின் பேரில், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினர், அண்ணாமலைச் செட்டியாரின் உதவியுடன் 1926இல் இந்நூலை வெளியிட்டனர்.
அர்த்தசாஸ்திரம்
1942இல் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழ்த்துறையினர் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பைப் பண்டிதமணியிடம் ஒப்படைத்தனர். பண்டித மணிக்கு உதவியாக ஆசிரியர் பி.எஸ். இராமானுஜாச்சாரி நியமிக்கப்பட்டார். மட்டும் மொழிபெயர்த்தார். 1946 ஆகஸ்டில், பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றபோது பொறுப்பு வந்தது. கௌடில்யத்தின் எல்லாப் பகுதிகளையும் படித்து, . 1955இல் அண்ணாமலை வெளியீடாக வந்த கௌடியல்யத்தின் மொழிபெயர்ப்பு நூலில் முதல் மூன்று அதிகாரங்களை பண்டிதமணியும், 4 முதல் 12 அதிகாரங்களை இராமானுஜாச்சாரியும் மொழிபெயர்த்திருந்தனர். இந்த நூலில் திருக்குறளின் பாடல்களை மேற்கோளாகச் சேர்த்து செப்பம் செய்தவர் வெள்ளை வாரணர்.
சொற்பொழிவாளர்
பண்டிதமணி தமிழ் மாநாடுகளிலும், சிறப்புக் கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். தஞ்சை, திருச்சி மாவட்டம் புலவர் மாநாடு, பூவாளூர் சைவ சித்தாந்த மாநாடு, தூத்துக்குடி சைவசித்தாந்தச் சபை பொன்விழா போன்ற பெரிய மாநாடுகளில் இவரே தலைமை தாங்கிப் பேசினார். சமஸ்கிருத நூல்களிலிருந்து சூத்திரங்களையும் பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவது, பாடல்களை அப்படியே ஒப்புவிக்காமல் விளக்கங்கள் தருவது ஆகியவை இவர் பேச்சின் சிறப்பம்சங்கள். இவரது பேச்சு சிறுபிரசூரங்களாகவும், கட்டுரையாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவர் தலைமை தாங்கிய கூட்டத்தில் பேசுபவரின் தகவல் பழைகளை உடனேயே இடையில் புகுந்து சுட்டிக்காட்டுவார்.
1925இல் சென்னையில் உ.வே.சா. தலைமையில் 'பரிமேலழகரின் உரைநயம்' என்னும் தலைப்பில் இவர் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது. 1940இல் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் நடத்திய குறுந்தொகை மாநாட்டிற்குப் பண்டிதமணி தலைமை தாங்கினார். அப்போது குறுந்தொகை கடவுள் வாழ்த்துக்கு மட்டும் இவர் கொடுத்த விளக்கம் அச்சில் வந்துள்ளது.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் மறைமலையடிகள் சங்கப் பாடல்களிலும் தேவார திருவாசகப் பாடல்களிலும் வடமொழிக் கலப்பு இல்லை என்று பேசியத்ற்கு பண்டிதமணி கலித்தொகைப் பாடல் வரியையும், தேவாரத்தில் வரும் வரியையும் எடுத்துக்காட்டி மறுப்புரைத்தார். தூத்துக்குடியில் நடந்த சைவ சித்தாந்த ஆண்டுவிழாவில் பண்டிதமணி கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசினார். 1944இல் சென்னை, கோகலே மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில் பண்டிதமணி இராவணனைப் பற்றி பேசினார்.
கட்டுரைகள்
1933இல் இலங்கையில் பொன். ராமநாதனின் வேண்டுகோளின்படி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். யாழ் நகரிலிருந்து வெளியான ஞாயிறு, ஈழகேசரி போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
பண்டிதமணி சமயம் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் பேசிய பேச்சுகளும் திருச்சி வானொலி நிலையத்தில் பேசிய பேச்சும் நூல்களாக வந்துள்ளன. இவற்றில் 17 கட்டுரைகள் உள்ளன. 1941இல் சமயம் பற்றிப் பேசிய சொற்பொழிவுகள் உரைநடைக் கோவை என்ற தலைப்பில் முதல் பகுதியாக வந்தது. 1943இல் இலக்கியம் பற்றிப் பேசிய பேச்சுக்கள் உரைநடைக்கோவை இரண்டாம் பகுதியாக வந்தது. எஞ்சிய கட்டுரைகள் இலக்கிய நயம் என்னும் தலைப்பில் வந்தன. திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தார் விண்ணப்பம். திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பண்டிதமணி எழுதிய விளக்கவுரை கதிர்மணி விளக்கம் எனப்படும். இப்பகுதிகளில் ஒவ்வொரு பாடலுக்கும் கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என மூன்று பகுதிகள் உண்டு. இவற்றிற்கு மேற்கோள் பாடலும் இலக்கண அமைதியும்கூடச் சொல்லப்பட்டுள்ளன. 1951இல் இந்த உரைக்குத் தமிழக அரசு பரிசளித்துள்ளது.
இலக்கிய இடம்
பண்டிதமணியின் தமிழ்நடையை டாக்டர் இரா. மோகன் விரிவாக ஆராய்ந்துள்ளார். 'இவர் எளிய நடையை விரும்ப வில்லை. இலக்கண வரம்புடன் திரிசொற்கள் விரவாமல் இயற் சொற்களால் எழுதுபவர். பழைய இலக்கண விதிகளுக்கு அமைய சந்திவிகாரங்களைக் கையாண்டவர். நீண்ட வாக்கியங்களை விரும்புபவர்' என்கிறார் மோகன்.
விருதுகள்
- மண்ணியல் சிறுதேர் வெளிவந்த காலத்தில் விபுலானந்தர் பண்டிதமணியை 'கவிமணி' எனப் பாராட்டினார்.
- 1925இல் ’பண்டிதமணி’ என்ற பட்டத்தை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் 16ஆம் ஆண்டு விழாவில் உ.வே.சா. தலைமையில் ரா. ராகவையங்கார் வழங்கினார்.
- 1942இல் மகோபாத்யாயா பட்டத்தை பிரிட்டிஷ் மன்னரின் பிறந்த நாளில், மாநில ஆளுநர், சென்னை அரசு சார்பாக வழ்ங்கினார். இச்சிறப்பு விருதுக்கு அரசு, ஆண்டுதோறும் 100 ரூபாய் வழங்கியது. இந்திய விடுதலைக்குப் பின் இது நிறுத்தப்பட்டது.
- 1951இல் குன்றக்குடி அடிகளார் இவருக்குச் 'சைவ சித்தாந்த வித்தகர்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
- தமிழ்ப் புலவர் மாநாட்டில் அண்ணாமலை செட்டியார் 'முது பெரும் புலவர்' என்ற பட்டத்தை அளித்தார்.
- பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்த புலவர்களில் ஒருவராகப் பண்டிதமணியையும் சேர்த்தார்.
இறுதிக்காலம்
அக்டோபர் 24, 1953-ல் பண்டிதமணி இரத்த அழுத்த நோயால் காலமானார்.
நூல்கள் பட்டியல்
மொழிபெயர்ப்பு
- பிராதபருத்தரீயம்
- மாலதி மாதவம்
- சுக்கிர நீதி
- உதயணன் சரிதை
- சுலோசனை
- மண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்)
- கெளடலீயம் பொருணூல் (கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்)
- மிருச்சகடிகம்
- இரசங்காதாரம்
சைவ சமயம்
- உரை நடைக் கோவை (முதற்பகுதி) சமயக் கட்டுரைகள்
- உரை நடைக் கோவை (இரண்டாம் பகுது) இலக்கியக் கட்டுரைகள்
- திருவாசகம் விளக்கம்
- திருச்சதகம் விளக்கம்
- நீத்தல் விண்ணப்பம்
- திருவெம்பாவை விளக்கம்
- பதிற்றுப்பத்தந்தாதி
சொற்பொழிவு
- பரிமேலழகரின் உரைநயம்
- குறுந்தொகை கடவுள் வாழ்த்து
பிற
- நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு
- பண்டிதமணி பாடல்கள்
- பண்டிதமணி கடிதங்கள்
- கதிர்மணி விளக்கம் (திருவாசக விளக்கம்)
உசாத்துணைகள்
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- பசுபதிவுகள்: மு.கதிரேசன் செட்டியார் - 1