முருகு சுப்ரமணியன்

From Tamil Wiki

முருகு சுப்ரமணியன் ( ) பாரதிதாசன் வழிவந்த மரபுக்கவிஞர். பொன்னி இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த முருகப்பன், சிவகாமி ஆச்சிக்கு (5.10.1924-இல்) பிறந்தார். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 – ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது அவர் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். 1942 – ல் முருகு சுப்ரமணியம் முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார்

இலக்கியப்பணி

முருகு சுப்ரமணியம் படிப்பு முடியும் முன்னரே இளந்தமிழன் என்னும் மாதம்இருமுறை இதழைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என பெயர் குறிப்பிடப்பட்டிருதது. அதுமுதல் முருகு சுப்பிரமணியன் என அழைக்கப்பட்டார்.

இதழியல்

இளவயது முதல் பாரதிதாசன் மீது பற்று கொண்டிருந்தார். திராவிட இயக்க ஈடுபாடும் இருந்தது. 1944 – 45 ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளி வந்த குமரன் என்னும் வார இதழில் முருகு சுப்ரமணியம் துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ.முருகப்பா அவர்களிடம் இதழியலை கற்றார்.

1947 – இல் பொங்கல் நாளையொட்டி பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். பாரதிதாசன் பரம்பரை என கவிதைகளை வெளியிட்ட பொன்னி அதன்பொருட்டு வரலாற்றில் இடம்பெற்றது. 1953 ஆம் ஆண்டு பொன்னி நின்றது.

1953 – ஆம் ஆண்டு முருகு சுப்ரமணியம் மலேசியா சென்றார். தமிழ்நேசன் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954 – இல் சிங்கப்பூர் சென்று தமிழ்முரசு என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த தமிழ்நேசன் இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 – முதல் ஏற்றார்.

மறைவு

முருகு சுப்ரமணியம் 1984 ஏப்ரல் 10 – இல் இயற்கை எய்தினார்.

உசாத்துணை

மு.இளங்கோவன் பொன்னி இதழாசிரியர்கள்