முருகபூபதி

From Tamil Wiki
Revision as of 17:05, 30 August 2022 by Theivigan (talk | contribs) (லெ.முருகபூபதி)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
லெ.முருகபூபதி

லெட்சுமணன் முருகபூபதி (13 ஜூலை 1951) ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையின் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர்.

பிறப்பு - இடம்

இலங்கையின் வட மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு பிரதேசத்தில் இலட்சுமணன் - கதிர்மாணிக்கம் இணையருக்கு 13 ஜூலை 1951 இல் பிறந்தார் முருகபூபதி. இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

முருகபூபதி 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் 1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'சுமையின் பங்காளிகள்" 1975 இல் வெளியானது. அதன்பின்னர், இலங்கையிலிருந்து வெளிவரும் மல்லிகை, பூரணி, மாணிக்கம், கதம்பம், புதுயுகம், தேசாபிமானி மற்றும் வீரகேசரி பத்திரிகை ஆகியவற்றில் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களை 'ரஸஞானி" மற்றும் 'ரிஷ்யசிருங்கர்’ ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.

1985 ஆம் ஆண்டு சோவியத் மொஸ்கோவில் நடைபெற்ற அனைத்துலக இளைஞர் மாநாட்டிற்கு, வீரகேசரி பத்திரிகையின் சார்பில் கலந்துகொண்ட முருகபூபதி அவர்கள், இந்தப் பயணம் குறித்த தொடர் ஒன்றை 'சமதர்ம பூங்காவில்" - என்ற பெயரில் 15 வாரங்கள் எழுதினார். இதன்மூலம், முருகபூபதி அவர்கள் இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகிலும் எழுத்தாளர்கள் வட்டத்திலும் பரவலாக அறியப்பட்டார்.

பத்திரிகை வாழ்க்கை

1972 இலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை கொழும்பு வீரகேசரி தேசிய தமிழ் பத்திரிகையில் பிராந்திய நிருபராகப் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, 1977 ஆம் ஆண்டு பத்திரிகையின் ஒப்புநோக்காளராக பணியாற்றத் தொடங்கினார். 1984 நடுப்பகுதியில், வீரகேசரியின் ஆசிரியர் பீடத்தில் துணை ஆசிரியரானார். 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரையில் அந்தப் பணியிலிருந்தார். 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

இலக்கிய இடம்

முருகபூபதி அவர்கள் தரவுகளின் சேகரம். அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த அனைத்து விடயங்களினதும் அச்சொட்டான அவரது ஞாபக சக்தி, தொடர்ச்சியாக எழுதிவரும் அவரது கட்டுரைகளுக்கும் பதிவுகளுக்கும் வற்றாத மூலப்பொருட்களாக அமைகின்றன. அவரது கட்டுரைகளின் பெரும்பாலானவை வாழ்வின் பின்நோக்கிய காலம் பற்றிய ஞாபகமூட்டுதல்களாகவும் வரலாற்றின் மீள் சுழற்சியை நாடி பிடித்துக்காண்பிக்கும் ஆச்சரியங்களாலும் நிறைந்தவை.

முருகபூபதி எழுதிய ஒரேயொரு புத்தகத்தைத் தவிர, மிகுதி அனைத்தும் அவர் புலம்பெயர்ந்த பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதப்பட்டவை. அந்த நூல்கள் அனைத்திலும் புதிய நிலங்கள் பற்றிய அவரது புறவயமான பார்வையும் நுட்பமான அவதானங்களும் ஆச்சரியங்களின் சாட்சியங்களும் நிறைந்திருக்கும்.

"முருகபூபதி அவர்கள் சிற்றிலக்கியப் பரப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டே மிகச்சிறந்த ஆய்வு நூலையும் வரவாக்கியுள்ளார். ஆய்வு என்பது அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவ வேண்டும். அவ்வகையில் அவர் எழுதியிருக்கும் இலங்கையில் பாரதி எனும் நூல் சிறந்த ஆய்வு நூலாகும்" - என்கிறார் இலங்கையின் ஓய்வுபெற்ற ஆசிரியை நீலாம்பிகை கந்தப்பு

சிறுகதைத் தொகுதிகள்

  • சுமையின் பங்காளிகள் (1975)
  • சமாந்தரங்கள் (1989)
  • வெளிச்சம் (1998)
  • எங்கள் தேசம் (2000)
  • கங்கை மகள் (2005)
  • நினைவுக்கோலங்கள் (2006)
  • மதக செவனெலி (Shadows Of Memories) - மொழிபெயர்ப்பு (2012)
  • கதைத் தொகுப்பின் கதை (2021)
புதின நூல்கள்
  • பறவைகள் (2001)
சிறுவர் இலக்கியம்
  • பாட்டி சொன்ன கதைகள் (1997)
பயண இலக்கியம்
  • சமதர்மப்பூங்காவில் (1990)
கடித இலக்கியம்
  • கடிதங்கள் (2001)
நேர்காணல்
  • சந்திப்பு (1998, இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய  நூல்)
கட்டுரை நூல்கள்
  • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995, தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள்
  • இலக்கிய மடல் (2000)
  • மல்லிகை ஜீவா நினைவுகள் (2001)
  • எம்மவர் (2003, அவுத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு)
  • கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004)
  • ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள் (2005)
  • உள்ளும் புறமும் (2011, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும்)
  • சொல்ல மறந்த கதைகள் (2014)
  • சொல்ல வேண்டிய கதைகள் (2017)
  • சொல்லத்தவறிய கதைகள் (2019)
  • இலங்கையில் பாரதி - ஆய்வு நூல் (2019)
  • நடந்தாய் வாழி களனி கங்கை (2021)
  • யாதுமாகி (2022)
  • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (2022)
விருதுகள்
  • சுமையின் பங்காளிகள் - 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
  • பறவைகள் - 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
  • 2002 அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது
  • பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது (2012, ஆஸ்திரேலியா)
  • அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது

அமைப்புக்கள்

  • ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (2004 முதல் இன்றுவரை)
  • இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 முதல் இன்றுவரை)

வெளி இணைப்புகள்

https://www.youtube.com/watch?v=Cx8X4rcYv6g&t=150s

https://www.shobasakthi.com/shobasakthi/2010/10/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/