being created

மழைப்பாடல் (வெண்முரசு நாவலின் இரண்டாம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 17:19, 25 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

மழைப்பாடல் (‘வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதி)

மழைப்பாடல் திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பது, குந்தி பாண்டுவை மணப்பது ஆகியனவற்றை உள்ளடக்கியுள்ளது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்குக் கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுணன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் ஆகியோர் பிறப்பதும் திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் இதில் இடம்பெற்றுள்ளன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு வருவதுடன் ‘மழைப்பாடல்’ நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதியான ‘மழைப்பாடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 24, 2014இல் முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2014இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

மழைப்பாடலை நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

காந்தாரியும் சகுனியும் அஸ்தினபுரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு இணையான எதிர்த்தரப்பாகவும் நீதியின் பிரதிநிதியாகவும் குந்தி அஸ்தினபுரிக்குள் வருகிறாள். காந்தாரிக்குக் குருதிமழையென இருட்புதல்வர்கள் வந்து அவள் அருகில் விழுகின்றனர். குந்திக்கு அருள்மழையென அருட் புதல்வர்கள் வந்து அவள் மடியை நிறைக்கின்றனர்.

விசித்திரவீரியனை மணந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அம்பிகையும் அம்பாலிகையும் தாங்கள் சகோதரிகள் என்பதை மறந்து, தாய்-மகள் போல இணைந்து வாழ்வதும் அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனவிலகல் கொண்டு இருபதாண்டுகளாக முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும் அரசர் பாண்டு இறந்தவுடன் இருவரும் மீண்டும் நல்லுறவு கொண்டு, இணைந்தே வனம் புகுகின்றனர்.

பீஷ்மர், விதுரன், சகுனி என்ற மூன்று விதமான பேரறிஞர்களின் நுண்ணறிவு முனைகளும் சந்திக்கும் களமாகத்தான் ‘மழைப்பாடல்’ நாவல் அமைவு கொண்டுள்ளது.

தனக்கான அறத்தோடு திகழும் பீஷ்மரின் அறிவு கங்கையைப் போலவே கலங்கமற்றுச் சுழித்தோடுகிறது. உளவியல் நிபுணரைப் போன்ற விதுரனின் அறிவு சூழ்நிலைகளைத் தனக்கானதாக வளைத்துக் கொள்கிறது. சூழ்ச்சிகளாலேயே பின்னப்பட்ட சிலந்தி வலையென உருவெடுத்துள்ள சகுனியின் அறிவு பாலைப் புயலெனக் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொள்கிறது.

பீஷ்மர் தன் தரப்பை முன்வைத்து எல்லோரையும் அணுகுகிறார். அவருக்கு, ‘அஸ்தினபுரி ஒருபோதும் ஆட்டம் கண்டுவிடக் கூடாது’ என்பதுதான் முதன்மை நோக்கம். விதுரன் பிறரின் உள்ளத்தை உற்றுநோக்கித் தன் சொல்லை முன்வைக்கிறார். அவர், ‘யாருடைய மனமும் நோகக் கூடாது’ என்று நினைத்துச் செயல்பட்டாலும் அவரின் உள்ளார்ந்த நோக்கம் ‘அறம் சார்ந்தவை மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கிறது. அதைச் செயல்படுத்தவே அவர் தனக்கு நெருக்கமானவர்களோடும் விலக்கமானவர்களோடும் மாறி மாறிச் சென்று அருகே நிற்கிறார். சகுனியோ தன் திட்டத்தைச் செயலாக்க எதையும் இழக்க எப்போதும் தயார்நிலையில் இருக்கிறார். அவருக்கு எதன் அழிவைப் பற்றியும் எப்போதும் கவலையே இல்லை. ‘தன் திட்டம் செயல்வடிவம் பெற வேண்டும்’ என்பதே அவரின் முதன்மை நோக்கம். அந்தத் திட்டத்துடன்தான் அவர் அஸ்தினபுரிக்குள் நுழைகிறார்.

திருதராஷ்டிரன் அரியணையேற இயலாது என்ற நிலையில் பீஷ்மர் சகுனியைப் பதினெட்டாண்டுகள் இங்கேயே தங்கியிருந்து, காந்தாரியின் மகனை அரியணையேற்றுக என்கிறார். ஒருவேளை திருதராஷ்டிரன் அரியணையேறியிருந்தாலும் சகுனி அஸ்தினபுரியில்தான் தொடர்ந்து இருந்திருப்பார். நிச்சயமாக, எண்ணிக்கையற்ற ஆண்டுகள் வரை அவர் அங்குதான் இருந்திருப்பார். காரணம், அவர் தன் அக்கா காந்தாரிக்கு அளித்த வாக்கின் படி, பாரதவர்ஷத்தையே அவளின் காலடியில் வைக்கும்வரை அவர் அஸ்தினபுரியில்தானே இருந்தாக வேண்டும்!.

இந்த மூன்று அறிவுத்திரள்களின் நடுவில்தான் பேரரசி சத்யவதியும் அரசியர்கள் குந்தியும் காந்தாரியும் நிலைபெற வேண்டியுள்ளது. இந்தக் கடுமையான பகடையாட்டத்தில் தன் வாழ்நாளில் தான் கண்ட கனவு முழுமையாக நிறைவேறாத நிலையிலேயே பேரரசி சத்யவதி ஆட்டக்களத்தை விட்டு வெளியேறிவிடுகிறார். தன்னுடைய கனவினை நனவாக்கும் திட்டத்தோடு, குந்தி ஆட்டக்களத்தில் இறங்குகிறார். அவருக்கு எதிராக நின்று களமாட காந்தாரி காத்திருக்கிறார். காந்தாரிக்குப் பெருந்துணையாகச் சகுனி இருக்கிறார். குந்திக்குத் துணையாக இருப்பவர்கள் குந்தியின் குழந்தைகளின் வடிவில் உறைந்திருக்கும் இருக்கும் வான்தேவர்கள்.

பேரரசி சத்யவதி தனக்குத் தேவையான நேரத்தில் பீஷ்மரை அஸ்தினபுரிக்குள் ஏற்பதும் தனக்குத் தேவையில்லாத சமயங்களில் பீஷ்மரை அஸ்தினபுரியைவிட்டு விலக்குவதுமாகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். அதற்காகப் பீஷ்மர் வருந்துவதேயில்லை. அவர் அஸ்தினபுரியைவிட்டு விலக்கப்படும் போதெல்லாம் உறையிலிட்ட கூர்வாளாகவும் அஸ்தினபுரிக்குள் ஏற்கப்படும் போதெல்லாம் உறையிலிருந்து உருவப்பட்ட கூர்வாளாகவும் தன் வலிமையையும் ஒளியையும் இழக்காமல், நுண்ணறிவின் துடிப்புடனேயே இருக்கிறார். 

பாண்டு தன் தந்தை விசித்திரவீரியனைப் போலவே மிக எளிய உடல்வாகு கொண்டவராக இருக்கிறார். அவர் குந்தியின் மணத்தன்னேற்பு விழாவுக்குச் செல்லும்போது, தன்னிடம் மஞ்சள் அரிசியை எடுத்துத் தூவி வாழ்த்தும் வலிமை மட்டுமே இருப்பதாக விதுரனிடம் கூறுகிறார். அதே பாண்டு, வனம்புகுந்து சதசிருங்கத்தில் வாழும்போது, அவர் உடல் வலுவைப் பெறுகிறது. வியாசரின் மரபணு அப்போதுதான் பாண்டுவின் உடலுக்குள் வேலைசெய்வதாகவும் கருத இடமிருக்கிறது.

பாண்டு ஏறத்தாழ காட்டுமனிதராகவே மாறிவிடுகிறார். வேட்டையாடுகிறார், குடிலமைக்கிறார், வேள்விகளுக்கு உதவி செய்கிறார், அரணிக் கட்டைகளைச் சேகரித்து, சீர்ப்படுத்துகிறார். அவருக்குத் தவக்குடில் வாழ்வு பிடித்திருக்கிறது. குந்தியின் குழந்தைகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு, காட்டுக்குள் நடந்து, அலைய அவரால் முடிகிறது. ஆறு ஆண்டுகளில் பாண்டுவின் உடலிலும் உள்ளத்திலும் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

அம்பாலிகையின் கைப்பாவையாக இருந்த பாண்டு, வனத்தில்தான் தன்னை ஆரோக்கியமான மனிதராக உணர்கிறார். ஆனால், செண்பகமலர்கள் சூழ்ந்த நிலத்தில் மாத்ரியுடன் கூடி, முழு மனிதராக மாற முடியாமல், மரணத்தைத் தழுவுகிறார்.

‘முதற்கனலி’ன் இறுதியில் அம்பை தன்னை எரித்துக்கொள்கிறாள். ‘மழைப்பாடலி’ன் இறுதியில் மாத்ரி எரிபுகுகிறாள். அம்பை திருமணம் புரியாமைக்காகவும் மாத்ரி திருமணம் புரிந்தமைக்காகவும் இதை ஏற்க நேர்கிறது. இதுவும் காலத்தின் நகைமுரண்தான். அம்பையின் நோக்கம் பீஷ்மரை இந்தப் பெருநிலத்திலிருந்து முற்றிலும் நீக்குவதாகவும் மாத்ரியின் நோக்கம் பாண்டுவுக்குச் சுவர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடுவதற்காகவும் என அமைந்துள்ளது.

வான் நோக்கித் தனக்குத் தேவையான வல்லமையைக் கோரும் தவளைகளின் வாயொலிகளாகவே, மழைப்பாடலாகவே பீஷ்மர், சகுனி, குந்தி, காந்தாரி போன்றோரின் மன ஏக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒருவரையொருவர் களத்திலிருந்து வெளியேற்றவே விரும்புகின்றனர்.

கதை மாந்தர்

திருதராஷ்டிரன், பாண்டு, குந்தி, காந்தாரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் பீஷ்மர், விதுரன், அம்பிகை, அம்பாலிகை, சகுனி, கம்சன், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

[[Category:Tamil Content]]