under review

மலர்வதி

From Tamil Wiki
Revision as of 13:36, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
மலர்வதி

மலர்வதி ( 1979) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்

பிறப்பு, கல்வி

மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 1979 ல் கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு என்னும் ஊரில் ஜி. எலியாஸ்- ரோணிக்கம் இணையருக்கு பிறந்தார். வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். முளகுமூடு குழந்தை இயேசு உயர் நிலையில் பள்ளிநிறைவை முடித்து தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டப்படிப்பு முடித்தார்

தனிவாழ்க்கை

மலர்வதி மணம்செய்துகொள்ளவில்லை

இலக்கியவாழ்க்கை

மலர்வதி கிறிஸ்தவ பக்திநூல்களையே முதலில் எழுதத்தொடங்கினார். முதல் இலக்கியப் படைப்பு 2008 ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கருப்பாயி என்னும் நாவல். தூப்புகாரி என்னும் நாவலுக்கு 2012 கேந்த்ரிய சாகித்ய அக்காதமியின் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. இலக்கிய ஊக்கமளித்த முன்னோடிகள் என பொன்னீலன், நாஞ்சில்நாடன் இருவரையும் குறிப்பிடுகிறார். நீல பத்மநாபன் ,பிரபஞ்சன், தோப்பில் முகம்மது மீரான், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோர் தாக்கம் செலுத்தியபடைப்பாளிகள்.

தந்தை முகம் பார்க்கும் முன்னே வேறு பெண்ணுடன் பிரிந்து சென்ற நிலையில்; தனது ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வீட்டின்  பக்கத்திலுள்ள கிறிஸ்தவப் பள்ளியில் மாதம் 30 ரூபாய் கூலியில்  துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்த தன் தாயின் துயரை கண்டு வளர்ந்தவர் மலர்வதி. பத்துவயதில் அவர் அண்ணன் குடும்பத்தைக் காப்பாற்ற கல்லுடைக்கச் சென்றார். தன் அன்னையின் வாழ்க்கையையும் தன் அனுபவங்களையும் ஒட்டியே மலர்வதி தூப்புகாரி நாவலை எழுதினார். (குங்குமம் பேட்டி) என்கிறார். குமரிமாவட்டத்தில் இருந்து வெளிவரும் முதற்சங்கு இலக்கிய சிறகு போன்ற இதழ்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இலக்கிய இடம்

மலர்வதி அடித்தள வாழ்க்கையை பெண்ணின் நோக்கில் எழுதும் எழுத்தாளர். ஆவணப்படுத்தும் தன்மைகொண்ட நேரடியான மொழியும் வட்டாரவழக்கும் உடையவை அவருடைய நாவல்கள்.

விருதுகள்.

  • சாகித்திய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது.
  • தந்தை பெரியார் விருது
  • நாமக்கல் கு. சின்னப்ப பாரதி விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது
  • கவிஞர் கவிமணி தாசன் விருது
  • எழுத்தாளர் புதுமைப்பித்தன் விருது (இருமுறை)
  • அமுதன் இலக்கிய விருது
  • புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் விருது

நூல்கள்

சமயம்
  • கருணை இயேசுவின் கல்வாரி கண்ணீர் (2005)
  • கழுமரத்தில் தொங்கிய  கடவுளின் அன்பு (2005)
  • சிலுவை வழி சிகரம் (2005)
  • இலக்கிய படைப்புகள் (2005)
நாவல்
  • காத்திருந்த கருப்பாயி- 2008
  • தூப்புக்காரி 2012
  • காட்டுக்குட்டி 2017
  • நாற்பது நாட்கள் 2021 .
சிறுகதைகள்
  • கருப்பட்டி 2020
கட்டுரைகள்
  • முதல் காட்சிகள் 2020

உசாத்துணை


✅Finalised Page