பொன்முடியார்
பொன்முடியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 3 பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பொன்முடியார், மறக்குடியில் பிறந்தவராக குறிப்புகள் கிடைகின்றன.இவர் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டின் வடக்குப்பக்கத்தில் பொன்முடி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இவரின் பெருமையைப் பாராட்டி அரசர் எவரேனும் பொன்முடி பரிசளித்ததால் பொன்முடியார் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பொன்முடியார் இயற்றிய 3 பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளன. அவை புறநானூறு நூலின் 299, 310, 312- வது எண் பாடல்களாக அமைந்துள்ளன.
பொன்முடியார் பாடல்களானது பெண்ணைத் தாழ்வுப்படுத்தியும் அல்லது இரண்டாம் நிலைக்குத் தள்ளியும் ஆணை முதன்மைப்படுத்தும் போக்கினையும் அவர்தம் பாடல்கள் கொண்டுள்ளதாக ஒரு சாரரால் கருதப்படுகிறது. இவர் பாடல்கள், ‘கலந்தொடா மகளிர்’, ‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’ என்று பெண்ணைக் குறிப்பிட்டும் ஆண்களை உயர்த்திக் குறிப்பிடும் நிலையையும் ‘தண்ணடை மன்னர்’ என்றும் ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;’ ‘களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்றும் ‘புகர்நிறம் கொண்ட களிறுஅட்டு ஆனான்; முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே’ என வழங்கும் அவரது பாடல் வரிகளும் ஆண் மையச் சிந்தனைப் போக்குக்கான உதாரணங்களாகக் கூறப்படுகிறது.
பாடல் சொல்லும் செய்திகள்
புறநானூறு 299
- திணை: நொச்சி
- துறை: குதிரை மறம்
- இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர். இருவரும் குதிரைமீது வந்து போரிட்டனர்.
- ஒருவன் பருத்திச்செடி வேலியாக விளங்கும் சீறூர் மன்னன். அவன் குதிரை உளுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது.
- மற்றொருவன் தண்ணடை (நன்செய்நிலம்) அரசன். இவன் குதிரை நெய் ஊற்றி மிதித்த சோற்றினைத் தின்று வளர்ந்தது. பிடரி மயிர் கத்திரிக்கப்பட்டு அழகிய தோற்றம் கொண்டது. மாலையிட்டு அழகு செய்யப்பட்டது.
- உளுந்து தின்ற குதிரை போரிடுவோரை விலக்கிக்கொண்டு பாய்ந்தது. நெய்ச்சோறு தின்ற குதிரை அதனைத் தொடக்கூடச் செய்யாமல் ஒதுங்கி நின்றது.
- மாதவிடாய்க் காலத்தில் சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று வழிபடுவது போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.
புறநானூறு 310
- திணை: தும்பை
- துறை : நூழிலாட்டு
- அன்று கிண்ணத்தில் பால் ஊட்டினாள். அஞ்சி அதனை உண்ண மறுத்தான். அவளுக்கு அப்போது சினம் வரவில்லை. என்றாலும் கையில் கோலை வைத்துக்கொண்டு அவனை அடித்தாள். அப்போது அயர்ந்துபோய் வருந்தினாள்.
- இப்போதும் வருந்துகிறாள், இன்ப வருத்தம். அன்றைக்கு முதல்நாள் அவளது கணவன் போரில் வீழ்ந்தான். அதனை அவன் மகன் எண்ணிப் பார்க்கவில்லை.
- அன்று போர்களம் சென்றான். பகைமன்னனின் பட்டத்து யானையை வீழ்த்தினான். பகைவனின் அம்பு தைத்திருக்கும் நிலையில் தன் கையிலிருந்த கேடயத்தின் மேல் விழுந்துகிடக்கும் இளந்தாடி அரும்பும் பருவத்தவனைக் கண்ட தாய்க்கு இன்ப வருத்தம்.
புறநானூறு 312
- திணை வாகை
- துறை மூதில்முல்லை
- என்னென்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று மகனைப் பெற்ற தாய் ஒருத்தி கூறுகிறாள்.
- மகனைப் பெற்றுப் பேணிக் காத்தல் என் தலையாய கடமை. மகனைப் படிக்கவைத்துச் சான்றோனாக விளங்கச்செய்தல் அவன் தந்தையின் கடமை.
- போர் புரிய வேலை வடித்துக்கொடுத்தல் ஊர்க் கொல்லனின் கடமை.
- நன்னடத்தை உள்ளவனாக விளங்கச் செய்தல் வேந்தனின் கடமை.
- வாளைச் சுழற்றிப் போர்க்களத்தில் பகைவேந்தன் யானையை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் திரும்புதல் மகனாகிய காளையின் கடமை.
பாடல் நடை
புறநானூறு 299
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
- பொன்முடியார் பாடல்களில் ஆண் மையச் சிந்தனைகள், கீற்று
- புறநானூறு, தமிழ் சுரங்கம்
- புறநானூறு 310
- புறநானூறு 312