பொன்னிறத்தாள் கதை
பொன்னிறத்தாள் கதை தென் தமிழகத்தில் வழங்கும் நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. பொன்னிறத்தாள் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறார். பொன்னிறத்தாள் கதையை வில்லுப்பாட்டாகப் பாடுகின்றனர். பொன்னிறத்தாள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கேரளாவில் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறார்.
இக்கதையின் ஆதார நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) கடையம் கிராமத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பொன்னிறத்தாள் வழிபாடு நாடார் சமூகத்தின் மூலம் திருநெல்வேலியில் இருந்து கன்னியாக்குமரி, கேரளா சென்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆசிரியர்
பொன்னிறத்தாள் கதையின் ஆசிரியர் உலகுடைய பெருமாள் நாடார். இதனை தம்மத்துக்கோணம், சுயம்புலிங்கபுரம் ஊர்களில் கிடைத்த ஓலைச்சுவடிகள் உறுதிப்படுத்துகின்றன.இந்நூலின் ஆசிரியர் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் எதுவும் ஏட்டுப் பிரதியில் கிடைக்கவில்லை. இந்நூல் 1891-ஆம் ஆண்டு இயற்றப்பட்டிருக்க வேண்டுமென முத்துசாமிப் புலவர் கருதுகிறார். மேலும் முத்துசாமிப் புலவர் தம்மத்துக்கோணம் நடேசநாடாரின் ஏட்டுப் பிரதித் தான் பொன்னிறத்தாள் கதையின் முதல் பிரதி என்கிறார். தம்மத்துக்கோணம் ஏட்டில் கொல்லம் ஆண்டு 1066-ல் (பொ.யு. 1891) எழுதப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் கிடைத்த பழைய ஏட்டுக் கதைப் பாடல்களில் பொன்னிறத்தாள் கதையும் ஒன்று.
பொன்னிறத்தாள் கதை
கடையம் ஊரில் வடுகர் குலத்தில் பிறந்த பொன்மாரி அணஞ்சபெருமாளை மணம் செய்து தென்காசியில் வாழ்ந்தாள். அவர்களுக்கு குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி அணஞ்சபெருமாள் பூஜை செய்தான். அவனை பூஜையின் பலனாக ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. பொன்மாரி அவர்களுக்கு சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் எனப் பெயரிட்டாள். ஏழு ஆண் குழந்தைகள் இருந்து ஒரு பெண் குழந்தை இல்லை என வருத்தமுற்றாள் பொன்மாரி. அவள் கோவில்களுக்குச் சென்று தவமிருந்தாள். கோவிலை தூத்துத் தெளித்தாள், விளக்கேற்றினாள், ஈர உடையுடன் கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தாள் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலைநாதன், சிவனணஞ்ச மார்த்தாண்டனுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டினாள். அவள் தவத்தின் பயனாக கருவுற்றாள்.
பத்தாம் மாதம் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமி திதியில் பெண் குழந்தைப் பெற்றாள். பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தனக்கு உதவியவர்களுக்கு பொன்னை வாரி வழங்கினாள். பொன்னிறத்தில் குழந்தை பிறந்ததால் பொன்னிறம் எனப் பெயரிட்டாள்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.