under review

பூ. அருணாசலம்

From Tamil Wiki
Revision as of 10:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பூ.அருணாசலம்

பூ. அருணாசலம் (பிறப்பு: 1937) ஒரு மலேசிய எழுத்தாளர். பூவன்னா எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர். அவர் எழுத்துத் துறை, சமயப்பணி, பொதுச் சேவை என தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ம.இ.கா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான துன். வீ. தி. சம்பந்தனின் தொண்டராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.

பிறப்பு, கல்வி

பூ. அருணாசலம் ஏப்ரல் 8, 1937-ல் சுங்கை சிப்புட் பகுதியில் பிறந்தார். இவர் தந்தையார் பூமாலை உடையார். தாயார் இராமாயி. உடன் பிறந்தவர்கள் தமக்கை குப்பம்மாள், தங்கை செல்லம்மாள், தம்பி சுப்பிரமணியம். இவர் தொடக்கத்தில், வீட்டுப் பக்கத்திலேயே இருந்த நகரத் தமிழ்ப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு சுங்கை சிப்புட் அருள்மிகு சுப்பிரமணியர் கோயில் ஆதரவில் நடை பெற்ற சண்முகானந்தா வித்யாசாலையில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் சண்முகானந்தா வித்யாசாலையில் படித்த காலத்திலேயே, சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மகாத்மா காந்தி கலாசாலை பள்ளியைக் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார். கட்டடப்பணி பூர்த்தியடைந்த பிறகு மகாத்மா காந்தி கலாசாலையில் ஏழாம் வகுப்பு வரையில் கல்வி கற்று இரண்டாம் நிலையில் தேர்வு பெற்றார்.

தனி வாழ்க்கை

ஏழாம் வகுப்பு நிறைவடைந்தவுடன், இவர் திரையரங்கில் வேலை செய்தார். அதோடு, சுங்கை சிப்புட் பெரியவர் வீ மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றினார். கோயில் வேலைகளுக்கும், ம.இ.கா வேலைகளுக்கு இவர் உதவியாளராகச் செயல்பட்டு வந்தார். 1956, 1957, 1958-ம் ஆண்டுகளில் மகாத்மா காந்தி கலாசாலையில் தற்காலிக ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

பி.பி.என் விருது பெற்றபோது

இலக்கிய வாழ்க்கை

பூ. அருணாசலம் திரையரங்கில் வேலை செய்து கொண்டே கல்கண்டு, ஆனந்த விகடன், குமுதம், கல்கி, பகீரதன் நடத்திய வார இதழ்களைத் தொடர்ந்து வாசித்து எழுத்துத் துறையில் ஆர்வத்தை வளர்த்து கொண்டார். மாணவர் மணிமன்ற இதழில் சிறுகதை, கட்டுரை போன்ற எழுத்துப் படைப்புகளை வழங்கினார். 1956-ம் ஆண்டு, தமிழ் நேசனில் , 'சாந்தி’ என்ற தலைப்பிலான சிறுகதையும், தமிழ் முரசில் ' நினைவின் நிழல்’ என்ற சிறுகதையும் இவரின் முதல் படைப்பாகும்.

1960-களில், ஈப்போவிலிருந்து வெளிவந்த இலட்சியம் இதழில், சமுதாய வீதி என்ற பகுதியை எழுதி வந்தார். அதன் வெளியீடு நின்ற பிறகு, 1978-ல் அதே தலைப்பில், சமுதாயச் சிக்கல்களைத் தமிழ் மலரில் தொடராக எழுதினார். இந்தத் தொடரைத் தொகுத்து, பின்னாளில் 'சமுதாய வீதி' எனும் நூலையும் வெளியிட்டார். 1979-ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் எம். துரைராஜ் இவரை எழுத்தாளர் சங்க செயலவை உறுப்பினராக நியமித்தார்.

பூ. அருணாசலம் மலேசியாவில் வெளிவரும் நாளேடுகளான தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, நம் நாடு, தினக் குரல், தமிழ் மலர் என எல்லா தினசரிகளிலும் தொடர்ந்து தனது எழுத்துப் படைப்புகளை வழங்கியுள்ளார். மேலும் வானம்பாடி, தூதன், மல்லிகை, மயில், உதயம், இதயம், தென்றல், தமிழ் ஓவியம், பொன்னி, காதல் போன்ற சஞ்சிகைகளிலும் இவர் எழுதியுள்ளார்.

1961, 1962, 1963, 1964 ஆகிய ஆண்டுகளில் நாட்டிலுள்ள 16 எழுத்தாளர்களை இணைத்து பாவையின் பசி, பெண் மனம், திருவிளக்கு, போர் வீரன் ஆகிய நான்கு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டார்.

பங்களிப்பு

பூ. அருணாசலம் வானொலி, கட்டுரைகள், நேர்காணல் என துன் வீ.தி. சம்பந்தன்(துன் வீராசாமி திருஞான சம்பந்தன்) முன்னெடுத்த தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் பற்றிய செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்ற அவர் கனவை தன் நேரடி அனுபவத்திலிருந்து பலருக்கும் எடுத்துரைத்தார். அதன்வழி மலேசிய இந்திய வரலாற்றின் ஒரு பகுதியை வெவ்வேறு தலைமுறைக்கு கொண்டுச் சேர்த்தார்.

பரிசுகள்/விருதுகள்

  • கலாசாலைமணி – துன் சம்பந்தன் வழங்கினார் (1959)
  • பி.பி.என் விருது – பேரரசர் அப்துல் ஹலிம் முவாட்சாம் ஷாவழங்கினார். (1971)
  • சிறந்த எழுத்தாளர் – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1982)
  • தொண்டன்மணி பட்டம் – பெரியவர் சீ மீனாட்சி சுந்தரம், அ. மு. சு தமிழ் பெரியார் (1982)
  • திருஞானசெல்வர் விருது – பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் (1993)

நூல்கள்

  • வரலாற்றில் ஒரு மாமனிதர் - துன் சம்பந்தன் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
  • மலேசிய இந்தியர்களின் வருகையும் பொருளாதார ஏற்றமும் - கட்டுரை (1987)
  • சமுதாய வீதி - கட்டுரை தொகுப்பு (1988)
  • கும்பிட்ட கரங்கள் - சிறுகதை தொகுப்பு (1988)
  • ஒரு தேசத்தின் சரித்திர மகன் - கட்டுரை தொகுப்பு (1991)
  • சங்கநதியில் மலைநாடு உருவானது - கட்டுரை (1995)
  • பூவோ பூ - சிறுகதை தொகுப்பு (2002)
  • கல்விப்பணியின் முன்னோடி - கட்டுரை (2010)
சிறுகதை தொகுப்பாசிரியர்
  • பாவையின் பசி (1961)
  • பெண் மனம் (1962)
  • திருவிளக்கு (1963)
  • போர் வீரன் ஆகிய (1964)

உசாத்துணை

  • சங்கர், மு. (2015). சங்கநதி பூ. அருணாசலம் . சென்னை: கலைஞன் பதிப்பகம்


✅Finalised Page