first review completed

பூண்டி அரங்கநாத முதலியார்

From Tamil Wiki
Revision as of 14:28, 22 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:தமிழறிஞர்கள் சேர்க்கப்பட்டது)

பூண்டி அரங்கநாத முதலியார்(1844-டிசம்பர் 10,1893) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்,சமூகப் பணியாளர், உ.வே,சாமிநாதையருக்குத் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாய் இருந்தவர்.சென்னை நகர ஷெரீஃப், சென்னை மாகாணத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். கச்சிக் கலம்பகத்தை இயற்றியவர்.

பிறப்பு, கல்வி

அரங்கநாத முதலியார் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பூண்டி சுப்பராய முதலியாருக்கு மகனாக 1844-ஆம் ஆண்டு பிறந்தார். அன்றைய ஆங்கில ஆட்சியில் பெரிய பதவியில் இருந்த தந்தை சுப்பராய முதலியார் தமிழிலும் சிறந்த புலமை பெற்றவர். அரங்கநாத முதலியார் மிகச் சிறு வயதிலிருந்தே தந்தையாரிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலக்கல்வியை பள்ளியில் பெற்றார். சென்னையைச் சேர்ந்த கதிர்வேல் உபாத்தியாயர், அஷ்டாவதானம்சபாபதி முதலியார்,தொழுவூர் வேலாயுத முதலியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலமும் கணிதமும் படித்தபோது ஆங்கிலப் புலமைக்காகவும், கணித அறிவுக்காகவும் ஆங்கிலேயர்களான ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார். 1870-ல் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.

கல்விப் பணிகள்

பூண்டி அரங்கநாத முதலியார் பெல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூல், கும்பகோணம் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராஜதானி நிர்வாகத்தின் அதிகார பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.

  • சென்னைப் பல்கலைக்கழக செனெட் சிண்டிகேட்
  • சென்னை கல்விச் சபை
  • சென்னைப் பாடநூல் கழகம்
  • லிடெரெரி சொசைடி (Literary Society)

ஆகியவற்றில் உறுப்பினராகப் பங்காற்றினார்.

வில்லியம் வில்சன் ஹண்டர் (William Wilson Hunter) உருவாக்கிய The Imperial Gazetteer of India என்னும் நூல்களின் இரண்டாம் பதிப்பின் உருவாக்கத்தில் உதவுவதற்காக அரசால் நியமிக்கப்பட்டு, அப்பணியில் மிகுந்த உறுதுணையாக இருந்தார். வில்லியம் ஹண்டரின் பாராட்டைப் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழில் பெரும்புலமை பெற்றிருந்த பூண்டி அரங்கநாத முதலியார் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட ஏகாம்பரநாதரைப் பற்றிய 'கச்சிக் கலம்பகம்' என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார். உ.வே. சாமிநாதையர் கச்சிக் கலம்பகத்திற்குப் பாயிரம் இயற்றினார். கச்சிக் கலம்பகம் சென்னை தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளியில் தமிழறிஞர்கள் மற்றும் புலவர்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றம் ஆறு நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் முறையே திருவாரூர் சின்னசாமிப் பிள்ளை , தண்டலம் பாலசுந்தரம் முதலியார், மயிலாப்பூர் முருகேச முதலியார், உ.வே. சாமிநாதையர், திருமணம் செல்வக்கேசவராய முதலியார், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கத் தம்பிரான் ஆகியோர் அரங்கேற்றம் செய்தனர்.

உ.வே.சா வின் தமிழ்ப்பணியில் நற்றுணை

பூண்டி அரங்கநாத முதலியார் உ.வே. சாமிநாதையருக்கு அவரது தமிழ்ப்பணிகளில் நற்றுணையாக இருந்தார். உ.வே. சாமிநாதையருக்கு தமிழறிஞர்கள் பலரின் தொடர்பு கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்கொடை திரட்டித் தந்தார். சீவக சிந்தாமணி நூலின் விற்பனையில் உதவினார். அக்காலத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பிற்கான் பாட புத்தகங்களைப் பதிப்பிக்கும் பணி பட்டதாரிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. தமிழ்ப் பண்டிதர்களுக்கும் அத்தகுதி உண்டு என்று செனெட் சபையில் வாதிட்டு, உ.வே. சா விற்கு மெட்ரிகுலேஷன் பாட புத்தகங்கள் பதிப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். இவ்வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ்ப் பண்டிதர் உ.வே. சாமிநாதையர். உ.வே. சா பூண்டி அரங்கநாத முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். "அரங்கநாத முதலியாருடைய செல்வாக்கும் அரங்கேற்றப் பிரசங்கமும் சேர்ந்து எனக்குப் பல வகை நன்மைகளை உண்டாக்கின" என்று 'என் சரித்திரம்' நூலில் உ.வே.சா குறிப்பிடுகிறார்.

இறப்பு

பூண்டி அரங்கநாத முதலியார் டிசம்பர் 10,1893 அன்று காலமானார்.

படைப்புகள்

கச்சிக் கலம்பகம்

உசாத்துணை

பூண்டி அரங்கநாத முதலியார் வாழ்க்கை வரலாறு, உ.வே.சாமிநாதையர், தமிழ் மரபு அறக்கட்டளை

பூண்டி அரங்கநாத முதலியார், தென்றல் இதழ்-நவம்பர் 2022



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.