being created

புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம்

From Tamil Wiki
Revision as of 10:36, 23 January 2023 by Saalini (talk | contribs) (Created page with "thumb|372x372px 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் வளர்ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
புத்ரா ஜெயா 1.jpg

1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் ஒன்றுதான் புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம். புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

பின்னணி

பிப்ரவரி 28, 1991ஆம் ஆண்டு மலேசியாவின் நான்காவது பிரதமரான டத்தோ ஶ்ரீ துன் டாக்டர் மகாதீர் அவர்களால் ‘2020 தொலை நோக்குத் திட்டம்’ மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம். மலேசியாவின் நவீன நகரமாகவும் நிருவாகத் தலைநகரமாகவும் செயல்பட புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

புத்ரா ஜெயாவின் மேம்பாட்டுத் திட்டம்

புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தியத் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த பெராங் பெசார் தோட்டம், மெடிங்கிலி தோட்டம், செட்ஜிலி தோட்டம், காளவே தோட்டம் என்ற நான்கு தோட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜனவரி 26, 1993 அன்று பெராங் பெசார் தோட்டத்தைப் புத்ரா ஜெயா பெருநகரமாக உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் ஆகஸ்ட் 29, 1995 அன்று புதிய நகருக்கான அடிக்கல் நாட்டு விழா தொடக்கி வைக்கப்பட்டது. பல நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த நவீன நகரிலே வீடுகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் தங்களுக்கான இழப்பீடும் மறு குடியமர்த்தலும்  மறு வேலை வாய்ப்புக் கிடைக்குமென காத்துக் கொண்டிருந்தனர்.

நிலப்பரப்பு

புத்ரா ஜெயா நகரில் கட்டப்பட்ட கூட்டரசின் அரசாங்க அலுவலகக் கட்டடங்களுக்காக 380,000 லட்சம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. பிரம்மாண்டமான வணிக வளாகங்களுக்காக இன்னொரு 340,000 லட்சம் சதுர அடி ஒதுக்கப்பட்டது. திட்டம் முடிவுறும் போது புதிய நகரின் மக்கள் தொகை 330,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. திட்டத்தின் முதல்படியாக 67,000 வீடுகள் புத்ரா ஜெயாவில் கட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

புத்ரா ஜெயா வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும் முன்னர் பெராங் பெசார் குடியிருப்புப் பகுதி.

புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட தோட்டங்களின் பரப்பளவு

  • பெராங் பெசார் தோட்டத்தின் 1733 ஹெக்டர் பரப்பளவு பயன்படுத்தப்பட்டது.
  • காளவே தோட்டத்தின் 1272 ஹெக்டர் பரப்பளவு பயன்படுத்தப்பட்டது.
  • செட்ஜிலி தோட்டத்தின் 904 ஹெக்டர் பரப்பளவு பயன்படுத்தப்பட்டது.
  • மெடிங்கிலி தோட்டத்தின் 582 ஹெக்டர் பரப்பளவு பயன்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை

  • பெராங் பெசார் தோட்டம் - 1500 பேர்
  • காளவே தோட்டம் - 400 பேர்
  • செட்ஜிலி தோட்டம் - 400 பேர்
  • மெடிங்கிலி தோட்டம் - 87 பேர்

பாதிக்கப்பட்ட தோட்டங்களின் உரிமையாளர்கள்

  • பெராங் பெசார் தோட்டம் - கோல்டன் ஹோப்
  • காளவே தோட்டம் - கோல்டன் ஹோப்
  • செட்ஜிலி தோட்டம் - தைகோ பிளான்டேசன்
  • மெடிங்கிலி தோட்டம் - பிளான்டேசன் ஏஜென்சி

தோட்டத் தொழிலாளர்களின் நிலை

புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹட் நிறுவனம் புத்ரா ஜெயா நகரத் திட்டத்திற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டது. புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் சென்டிரியன் பெர்ஹட் நிறுவனத்துடன் இணைந்து பெராங் பெசார், காளவே, செட்ஜிலி, மெடிங்கிலி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை நீக்க உத்தரவை அளித்தனர்.

தாமான் பெர்மாத்தா குடியிருப்புப் பகுதி.

அதற்கெதிராக தங்களுக்கு நியாயமான இழப்பீடும் குடியிருப்பு வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பினர். தோட்டத் தொழிலாளர்கள் தந்த அழுத்தத்தினால் கோல்டன் ஹோப் நிறுவனமும், புத்ரா ஜெயா வளர்ச்சித்திட்ட நிறுவனமும் அரசியல் வாதிகளின் வற்புறுத்தலினால், தொழிலாளர்களுடன் உடன்பாடு ஒன்றுக்கு வந்தனர். மலிவு விலையிலான வீடுகள், ஒரு கோயில், ஒரு தமிழ்ப்பள்ளி, கடைகள் ஆகியவை அருகிலுள்ள டெங்கில் நகரில் ஏற்படுத்தித் தரப்படும் என்று தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 வீடுகள் 4.3 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைந்த எண்ணிகையிலான வீடுகளே தோட்டத் தொழிலாளர்களுக்குக் கட்டித்தரப்பட்டன. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகத் தொழிலாளர்கள் உணர்ந்தனர்.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு டெங்கில் நகரில் ஏற்படுத்தித் தரப்பட்ட குடியிருப்புப் பகுதியின் நிலை

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் 1999இல் டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்பு எனும் பெயரில் அமைந்துள்ள நான்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியிருப்புகள் ஐந்து கட்டடங்களாக அமைந்திருந்தது. இந்த ஐந்து கட்டடங்களின் அடித்தளங்கள் மண் சரிவு ஏற்பட்டு மூன்று அடி ஆழம் கீழே இறங்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அந்தக் கட்டடப்பகுதிகள் மிகவும் அவசர, அவசரமாகக் கட்டடப்பட்டவையாகும். மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளம் சூழ்ந்துவிடும் நிலையில் அக்குடியிருப்பு அமைந்திருந்தது.

குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் பாதையில் சேறும் சகதியுமாய் இருக்கும். இவ்வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அதோடு, அருகிலுள்ள மலக்கழிவு நீர்த் தொட்டிகளில் நிறைந்து வழிந்து காணப்படும். இதனால் பலர் தலைவலி, காய்ச்சல், குமட்டல் எனப் பல நோய்களுக்கு ஆளாகினர்.குழந்தைகள் இந்தக் கழிவுகளின் மீது நடந்துதான் தினமும் பள்ளிக்குச் செல்வதனால் அவர்களின் உடைகள், காலணிகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டியிருந்தது. குழந்தைகள் தோல்நோயுக்கும் ஆளாகினர்.

குடியேற்றப்பட்டுள்ள டெங்கில் குடியிருப்புப் பகுதிகளில் சம்சுவின் (மலிவு விலைச் சாராயம்) அச்சுறுத்தல் பெருகின. மலிவு விலைச் சாராயம் அரசினால் தடை செய்யப்பட்டிருந்தும் டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்புப் பகுதியில் உள்ள கடைகளில் அது கள்ளத் தனமாக விற்கப்பட்டது. தூய்மைகேட்டோடு சம்சுவின் தாக்கத்தையும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்நோக்கினர்.

சர்ச்சைகள்

வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை ஒன்றைக் கொண்டு வரவிருப்பதாகவும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் 1999ஆம் ஆண்டு மனிதவளத்துறை அமைச்சர் லிம் ஆ லெக் கூறினார். வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த செயல்பாடுகள் முறையாக நடத்தப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவர்களின் பார்வையைத் திருப்ப இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்படும் ஆனால் செயல்முறையில் செயல்படாமல் இருக்கும்.

இலக்கியப் பதிவுகள்

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (2006) - மா. ஜானகிராமன்

உசாத்துணை

  • மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (2006) - மா. ஜானகிராமன்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.