under review

புதிய தலைமுறை (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
Line 20: Line 20:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 17:45, 23 December 2022

புதிய தலைமுறை (1968-1970) தமிழில் வெளிவந்த சிற்றிதழ். கோவையில் இருந்து ஞானி மற்றும் அவர் நண்பர்களால் வெளியிடப்பட்ட மார்க்ஸிய ஆய்விதழ். மேலை மார்க்ஸியம் அல்லது ஐரோப்பிய மார்க்சியச் சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடி இதழ்.

வரலாறு

கோவையில் 1960-ல் ஞானி தன் நண்பர்களுடன் சிந்தனை மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அதில் எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன் போன்றவர்கள் பங்குபெற்றனர். 1967-ல் கோவைக்கு வந்த நக்ஸலைட் இயக்க நிறுவனர் சாரு மஜூம்தாரை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர் சந்தித்தனர். சாரு மஜூம்தாரின் உடனடியான புரட்சி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. மக்களிடையே தத்துவம், அரசியல் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். விளைவாக 1968-ல் புதிய தலைமுறை இதழ் உருவானது. ஞானி, எஸ்.என்.நாகராஜன், புலவர் ஆதி ஆகியோர் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குள் புதியதலைமுறை குழுவினருக்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகி இதழ் நின்றது.

இவ்விதழ் நின்றபின் ஞானி வானம்பாடி இதழில் ஈடுபட்டார். பின்னர் பரிமாணம், வேள்வி, நிகழ், தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார்.

பங்களிப்பு

தமிழகத்தின் மார்க்ஸியச் சூழலில் ஐரோப்பிய மார்க்ஸியம் அல்லது மேலை மார்க்சியத்தை அறிமுகம் செய்த இதழ் என புதிய தலைமுறை கருதப்படுகிறது. பண்பாட்டை அரசியல் பார்வையுடன் மட்டுமே ஆராயக்கூடாது என்றும், பண்பாட்டுக்கென தனியான செயல்முறைகள் உண்டு என்றும் மேலைமார்க்ஸியம் கூறியது. மார்க்சியத்துக்குள் உள்ள அன்னியமாதல் கோட்பாட்டை முன்வைத்து எஸ்.என்.நாகராஜன் எழுதினார். அண்டோனியோ கிராம்ஷி, லூயி அல்தூசர் ஆகியோரின் சிந்தனைகள் பேசப்பட்டன. மேலும் இருபதாண்டுகளுக்கு பின்னரே அச்சிந்தனைகள் தமிழில் பரவலாக விவாதத்திற்கு வந்தன.

’ஜான் லூயிஸ், ஜோசப் நீதாம், சிட்னி பிங்கெல்ஸ்டைன், ஹெர்பெர்ட் ஆப்தேகர், அர்னால்ட் ஹாஸர், வால்ட்டர் பெஞ்சமின், ழான்-போல் சார்த்ர் போன்ற மேலை நாட்டு மார்க்ஸியர்களைப் படிக்கத் தொடங்கினோம். பெண்ணிலைவாதம் என்ற சொல்லே தமிழகத்தில் அறிமுகமாகியிருந்திராத நாட்களில் ஷுலாமித் ஃபயர்ஸ்டோனின் The Dialectic of Sex: The Case for Feminist Revolution நூலைப் படித்து எனக்கு அந்த நூலின் சாரத்தை எடுத்துக்கூறியவர் ஞானி. என் பங்குக்கு செக் நாட்டு மார்க்ஸிய அறிஞர் விட்டேஸ்லாவ் கார்டாவ்ஸ்கி எழுதிய 'God is not yet dead - Vitezslav Gardavsky ’ என்ற நூலை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்’ என இக்காலகட்டம் பற்றி எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார்[1].

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page