being created

பி. உதயகுமார்

From Tamil Wiki
பி. உதயகுமார்

பி. உதயகுமார் ஓர் வழக்கறிஞர். சிறைச்சாலையில் மரணமடையும் இந்திய கைதிகளுக்காகவும் தேடுதல் பணியில் போலிஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்படும் இந்தியர்களுக்காகவும் வழங்குகளை நடத்தியவர். ‘ஹிண்ட்ராப்’ எனும் இயக்கத்தின் வழி மலேசிய இந்தியர்களின் உரிமைகளைக் கோரி 2007ல் மாபெரும் பேரணியை நடத்திய தலைவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

பி. உதயகுமாரின் தந்தை பொன்னுசாமி. தாயார் கலைவாணி. ஆறு சகோதர சகோதரிகள் உள்ள குடும்பத்தில் உதயகுமார் இரண்டாவது பிள்ளை. இவர் நவம்பர் 7, 1961ல் பிறந்தார்.  பினாங்கு மாநிலத்தில் உள்ள செபெராங் பிறையில் பிறந்த பி. உதயகுமார் கிளந்தான் மாநிலத்தில் வளர்ந்தார்.

பி. உதயகுமார் , 1968 முதல் 1973 வரை தும்பாட் ஆங்கில ஆரம்பப் பள்ளியிலும் 1974 முதல் 1978 வரை தும்பாட் இடைநிலைப்பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து, 1979 சிரம்பானில் உள்ள கிங் ஜார்ஜ் இடைநிலைப்பள்ளியில் (King George V School) இரவு நேர வகுப்பாக படிவம் ஆறு பயின்றார்.

1984 – 1985 ஆகிய இரு ஆண்டுகள் லண்டனில் உள்ள Ealing College of Higher Education கல்லூரியில் சட்டம் பயின்றார்.  இக்கல்லூரி Thames Valley College எனப் பின்னர் பெயர் மாற்றம் கண்டது.

திருமணம், தொழில்

1990ல் மலேசியா திரும்பியவர் 1995ல் சுயமாக ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தைத் தொடங்கினார்.

2009ல் திருமணமாகி கணவனை இழந்த இந்திராதேவி என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் செய்யும்போது இந்திராதேவிக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.

பொது வாழ்க்கை

நாளிதழ் வாசிப்பு
1-uthaya-300x175.jpg

ஒன்பது வயது முதலே ஒவ்வொரு நாளும் news strait times நாளிதழை வாசிக்கும் பழக்கம் உதயகுமாருக்கு இருந்தது. சமூகத்தையும் அதில் உள்ள அரசியல் சிக்கல்களையும் புரிந்துகொள்ள நாளிதழ் வாசிப்பு உதவியது.

மத மாற்ற எதிர்ப்பு

பி. உதயகுமார், கிங் ஜார்ஜ் இடைநிலைப்பள்ளியில் படிவம் 6 பயின்றபோது  இந்திய மாணவர்கள் கிறிஸ்துவ வழிபாட்டுக்கு வற்புறுத்தப்பட்டதை அறிந்தார். மதம் மாற்றும் முயற்சிகள் நடந்தபோதும் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் மாணவராக இருந்தார். இந்த வறுபுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவைக் கோரினார். மேலும் அவர் சிரம்பானில் தங்கியிருந்த ராசா பகுதியில் பொதுப்போக்குவரத்து சேவையில் உள்ள பலவீனத்தைக் கண்டித்தும் அவர் கட்டுரைகள் எழுதினார்

கறுப்பின மக்களின் விடுதலை

லண்டனில் பயின்றபோது Anti Apartheid Movement எனும் கறுப்பின மக்களின் விடுதலைக்கான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். இந்த இயக்கத்தில் பெரும்பாலும் வெள்ளையர்கள் பங்கெடுத்தனர். இன,மத பேதமற்ற அறிவார்ந்த இயக்கம் எப்படி இருக்கும் என உதயகுமார் லண்டன் வாழ்வில் அறிந்துகொண்டார்.

சிறைச்சாலை மரணம்

லண்டனில் இருந்து திரும்பிய சில ஆண்டுகளில் பொது இடத்தில் ஓர் இந்திய இளைஞர் போலிஸாரால் சாலையில் வன்முறையாக விசாரிக்கப்படுவதை பார்த்த உதயகுமார் தான் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்தார். போலிஸ் தடுப்புக்காவலில் மரணமடையும் இந்தியர்கள், தேடுதல் நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்படும் இந்தியர்கள் என முழுமையாக ஆய்வு செய்தார்.

Police Watch Malaysia

பி. உதயகுமார், 1998 முதல்  2006 வரை Police Watch Malaysia எனும் இயக்கத்தைத் தொடங்கி சிறைச்சாலையில் மரணமடையும் இந்தியர்கள், போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படும்  இந்தியர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆதரவான செயல்பாட்டில் இறங்கினார். இவ்வியக்கத்தில் ஆர்.எம்.ராஜா, கருணா, பன்னீர் செல்வம், பாலச்சந்திரம் போன்றவர்கள் அங்கத்தினர்களாக இருந்தனர். சிறையில் மரணிக்கும் இந்தியர்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கினார். வீதி ஊர்வலங்களில் ஈடுபட்டார். எட்டு முறைக்கு மேல் போலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் இந்தியர்களின் மரண எண்ணிக்கையை மெல்ல மெல்ல குறைக்க உதயகுமாரின் போராட்டங்கள் உதவின.

கோயில் உடைப்புகள்

தமிழ் பள்ளிகளின் அவல நிலை, பல்கலைக்கழக இட ஒதுக்கீடு என உதயகுமார் தொடர்ந்து தனது போராட்டங்களை முன்னெடுத்தார். கோயில் உடைப்பு தொடர்பான செய்திகள் வந்தபோது அவர் கவனம் அந்த அராஜகத்திற்கு எதிராகத் திரும்பியது. தோட்டப்புறங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதும், அந்தத் தோட்டங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்படாமல் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டன. பி. உதயகுமார், ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் எனும் அமைப்பின் பெயரை பயன்படுத்தி கோயில் உடைப்புக்கு எதிராகத் தன் போராட்டத்தைத் தொடங்கினார்.

குறிப்பாக சிலாங்கூர் பாடாங் ஜாவாவில் இருந்த மகா மாரியம்மன் கோயில் 2007 நவம்பர் மாதம் 15ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தக் கோயில் இடிப்புதான்  மலேசிய இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார முறையை மலேசிய அரசு உதாசீனம் செய்து வருகிறது என்று ஹிண்ட்ராப் மூலம் உதயகுமார் குற்றம் சாட்டினார்.

ஹிண்ட்ராப் பேரணி
ஹிண்ட்ராப் பேரணி

நவம்பர் 2007 பி. உதயகுமார் தலைமையில் ஹிண்ட்ராப் ஒரு மாபெரும் பேரணியை கோலாலம்பூரில் நடத்தியது. முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகளின் கூட்டணியாக விளங்கிய இவ்வமைப்பின் முழுமையான பெயர் இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) ஆகும். இந்தப் போராட்டத்தில் அவருடன் ஆர்.கங்காதரன், கே.வசந்தகுமார், எம்.மனோகரன், வி.கணபதி ராவ் ஆகியோரும் இணைந்தனர்.

தேர்தல்

2013ல் நடைபெற்ற தேர்தலில் உதயகுமார் சுயேட்சை வேட்பாளராக பேனா சின்னத்தில் போட்டியிட்டார். அவர் கோத்தா ராஜா நாடாளுமன்ற தேர்தலிலும் அண்டாலாஸ் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.  அத்தேர்தலில் அவர் தோல்வி கண்டார்.

விளைவுகள்

இப்பேரணியின் காரணமாக பி. உதயகுமார் ஐ.எஸ்.ஏவில் 2007 கைது செய்யப்பட்டு 2008ல் விடுவிக்கப்பட்டார். அவருடன் ஆர்.கங்காதரன், கே.வசந்தகுமார், எம்.மனோகரன், வி.கணபதி ராவ் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கமுந்திங் சிறையில் இருந்தார். தொடர்ந்து வழக்கு நடைபெற்று 2013 – 2014 ஆகிய இரு ஆண்டுகள் தேச நிந்தனை குற்றத்துக்காக காஜாங் சிறைச்சாலையில் கழித்தார்.

சிறைச்சாலையில் இருந்து திரும்பிய உதயகுமார்,  பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளானார். சில சொத்துகளை இழந்தார்.

தேர்தலில் தன்னை மக்கள் புறக்கணித்ததை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு பொதுவாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விடுவித்துக்கொண்டு தன் வீட்டிலேயே வழக்கறிஞர் அலுவலகத்தை எளிமையான முறையில் நடத்தி வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • நவம்பர் 25 – மே 2008
  • Indian politicaL empover strategi - 2009

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.