under review

பிரளயன்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
No edit summary
 
Line 69: Line 69:
* [https://www.hindutamil.in/news/literature/566513-pralayan-interview-6.html பிரளயன் நேர்காணல்-தமிழ்ஹிந்து உரையாடல்-ஷங்கர்ராமசுப்ரமணியன்]
* [https://www.hindutamil.in/news/literature/566513-pralayan-interview-6.html பிரளயன் நேர்காணல்-தமிழ்ஹிந்து உரையாடல்-ஷங்கர்ராமசுப்ரமணியன்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:48, 18 September 2023

பிரளயன்(சந்திரசேகரன்; பிறப்பு:1960) தமிழ்நாட்டின் நவீன நாடக ஆளுமை, பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர். நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என நாடகத்துறையில் பங்காற்றுபவர். வீதி நாடகம் என்னும் வடிவத்தின் சாத்தியங்களை முயன்றவர்.

பிறப்பு, கல்வி

சந்திரசேகரன் திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம்-கல்யாணசுந்தரி இணையருக்கு 1960-ல் மகனாகப் பிறந்தார். தந்தை நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர் சண்முக அருணாச்சலம், மூன்று சகோதரிகள். திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியையும், கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். கல்லூரியில் படித்தபோது தமிழ்மொழிக் கழகம் வாயிலாக நாடகங்களில் நடித்தார். வானவில் பிலிம் சொசைட்டி மூலம் கலை தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியபோது, கல்லூரி ஆசிரியர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்த்து அவற்றை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

தனி வாழ்க்கை

பிரளயன் 1981-ல் கணிதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, சென்னையில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு இளநிலை பயிற்சியாளராக வேலையில் அமர்ந்தார்.

பிரளயன் மணமானவர். மனைவி ரேவதி, மகன் சிபி.

பயணம் நாடகத்தில் பிரளயன் thehindu.com

கலை வாழ்க்கை

பிரளயன் 1977-ல் பேராசிரியர் சே. ராமானுஜம் மூலம் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கு, 1979-ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா. 1980-ல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டார். நவீன நாடக வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, 1980-களில் சென்னைக் கலைக் குழுவைத் துவக்கினார். அதிகார வர்க்கம் மக்கள் மீது செலுத்திய அடக்குமுறைகளை எதிர்த்த நாடகங்களை அரங்கேற்றினார். சென்னைக் கலைக்குழுவின் முதல் நாடகம் 'நாங்கள் வருகிறோம்' கருத்து வெளிப்பாடு என்பதையே குற்றச் செயலாகப் பார்க்கும் அக்கால அரசின் அணுகுமுறையைப் பேசியது. தமிழ் நாடகத்தில் அவருடைய முன்னோடிகளாக ந. முத்துசாமி, மு.ராமசாமி ஆகியோரைக் கருதுகிறார்

பிரளயன் நவீன யுகத்தின் கலாசார வெளிப்பாடாக நவீன வீதி நாடகங்களைக் கண்டார். 'பெண்' வீதி நாடகத்தை நோக்கிய அவரது முதல் முயற்சி. கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் தொடர்பினால் தெருவில் திறந்த வெளியில் நாடகம் நிகழ்த்துவதைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. பாதல் சர்க்காரால் தாக்கம் பெற்ற ஜோஸ் சிரமுல் தயாரித்த நாடகங்களை அப்படியே தமிழில் மொழியாக்கி இயக்கினார். சாதத் ஹசன் மன்ட்டோ எழுதிய ‘டோபா டேக்சிங்’ கதையை 2017-ல் வீதி நாடகமாக உருவாக்கினார்.

1980-களில் மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகக் காவல் துறை அத்துமீறல்கள் நிறைய நடந்துகொண்டிருந்த போது நாடகக் குழுக்கள், நாடகக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டன. அப்போது பிரளயன் ‘நாங்கள் வருகிறோம்’ நாடகத்தை அரங்கேற்றினார். காவல் துறைக்கு ஆள் எடுக்கும்போது, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் மனோகரன் என்ற இளைஞர் மிதிபட்டு இறந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் எழுதிய நீண்ட கவிதையை 'முற்றுப்புள்ளி' என்ற நாடகமாக ஆக்கினார். நாடு முழுவதும் அந்த நாடகம் சென்று வெற்றிபெற்றது. இளைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை நாடகம் எதிரொலித்தது.

அந்துவான் எக்சுபரியின் குட்டி இளவரசன்' என்ற கதையை நாடகம் ஆக்கி அரங்கேற்றினார். தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை, இசைத்துறை, சிற்பத்துறை முதலானவற்றுக்கு வருகைதரு பேராசிரியராக (Visiting Professor) பணியாற்றி வருகிறார். தமுஎகச வின் மாநில செயற்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

'பாரி படுகளம்' திருச்சூர் ஆசிய நாடக விழாவில் நடிக்கப்பட்டது.

நாடக பயிற்சிப் பட்டறைகள்
  • மைஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன்முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முன்னெடுப்பிற்கு உதவும் வகையில் அங்குள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களுக்காக ஒரு நாடகத்தைத் தயாரித்தார்
  • நார்வே, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் நாடகக் கலையில் பல பயிற்சி பட்டறைகளை நிகழ்த்தி, நாடகங்களைத் தயாரித்து , நெறியாள்கை செய்து நிகழ்த்தினார்
  • அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.
  • நாடகத்தை கல்வியின் ஒரு பகுதியாக, கற்பிக்க 'கல்வியில் நாடகம்’ முயற்சியில் வளரிளம் பருவத்து மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பல பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.
பொறுப்புகள்
  • தராசு பத்திரிகையில் நிருபர்
  • தீக்கதிர் நாளிதழின் சட்டமன்ற செய்தியாளர்
  • ஸ்பான் மீடியாவில் (Span Media) நிருபர்
  • தூர்தர்ஷன் புதுதில்லியில் தெற்கு மண்டல நிருபர்
  • அறிவியல் இயக்க கலைப்பயண ஒருங்கிணைப்பாளர்
  • தேசிய நாடகப்பள்ளியின் பெங்களூர் மண்டல வள மையத்தின் நாடகப் பயிற்றுநர்,ஆலோசகர், வருகைதரு பேராசிரியர்,டி.வி.எஸ்.எஜுகேசனல் சொசைட்டியின் ஆலோசகர் மற்றும் ஆசிரியர்
  • ASIAN COLLEGE OF JOURNALISM வருகைதரு பேராசிரியர்
  • தமுஎகச வின் மாநில செயற்குழு உறுப்பினர்

விருதுகள்

  • புதுவை களம் நாடக இயக்கம் வழங்கிய 'நாடகச்சிற்பி' விருது(2006)
  • Wisdom Magazine வழங்கிய சிறந்த நாடகாசிரியர் விருது (2007)
  • News 7 வழங்கிய நாடக ரத்னா விருது (2019)

மதிப்பிடு

பிரளயன் மக்களாட்சிக் காலத்தின் கலாசார வெளிப்பாடாக நவீன வீதி நாடகங்களைக் கண்டார். அவரது வீதி நாடகங்கள் சமகால சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பேசின. அரசியல் அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி பல நாடகக் குழுக்களை உருவாக்குவதிலும் பிரளயனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்

முக்கியமான நாடகங்கள்
  • உபகதை
  • பாரி படுகளம்
  • வஞ்சியர் காண்டம்
  • மத்தவிலாஸ பிரகசனம்
  • கனவுகள் கற்பிதங்கள்
  • முற்றுப்புள்ளி
  • மாநகர்
  • பவுன்குஞ்சு
  • பயணம்
நூல்கள்
  • கல்வியில் நாடகம் - பாரதி புத்தகாலயம்
  • வஞ்சியர் காண்டம் - சந்தியா பதிப்பகம்
  • இலக்கம் 4 பிச்சை பிள்ளை தெருவில் இருந்து - வாசல் பதிப்பகம்
  • பாரி படுகளம் நாடகம் சந்தியா பதிப்பகம்
  • நவீன மத்தவிலாசப் பிரஹசனம்- சந்தியா பதிப்பகம் (அச்சிலுள்ளது)
  • உபகதை - நாடகம்மருதா பதிப்பகம்
  • சப்தர் ஹாஷ்மியின் நாடகக் கலை பற்றிய கட்டுரைகள் (மொழிபெயர்ப்பு) - சென்னை புக்ஸ் வெளியீடு. தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.
  • காப்புரிமை கொத்தவால் (மொழிபெயர்ப்பு) - இந்தியா தியேட்டர் பாரம் வெளியீடு.
  • சந்தேகி (கவிதைத் தொகுப்பு) சென்னை புக்ஸ் வெளியீடு.

உசாத்துணை


✅Finalised Page